இலங்கை அரசியல் வட்டாரங்கள் திக்குமுக்காடிக்கொண்டிருக்கின்ற விடயம் இந்த ஜீ.எஸ்.பி பிளஸ் தான்(GSP+) இது பெரிய விவகாரமாகவே மாறி வருகின்றது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஆடை ஏற்றுமதிக்கான வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்கப்படுமா? என்பது தான்.

ஜீ.எஸ்.பி பிளஸ் என்றால் Generalized systems of Preferences plus) என்பது தான். இந்த வரிச்சலுகையானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் மாத்திரம் வழங்கிவரும் சலுகை. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்கு சில பிரதான நிபந்தனைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பின்பற்றவேண்டும். பிரதானமாக மனித உரிமைகள் உரிய வகையில் பேணப்படவேண்டும் என்பதாகும்.
2002ம் ஆண்டிலிருந்து இச்சலுகையானது இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் முக்கியம் பெறுவது தைத்த ஆடைகளே. இதன் படி 6421 பண்டங்களுக்கு ஐரோப்பிய சமூகத்தினுள் எந்தவித சுங்கத்தீர்வையும் விதிக்கப்படமாட்டாது என்றிருந்தது. இதனால் அதிகமான பொருட்கள் ஐரோப்பாவிற்கு தீர்வைகளின்றி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கை உட்பட சுமார் 16 நாடுகள் இந்த ஏற்றுமதி வரிச்சலுகையைப் பெறுகின்றது. இலங்கை 52மூ தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கின்றது. இதனால் வருடா வருடம் 3.4தொடக்கம் 3.5பில்லியன் வரையிலான அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுகிறது.

1984 ஆம் ஆண்டு ‘அங்ராட்’ என்ற அமைப்பானது வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் வர்த்தக சலுகைகள் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தது. அதைத் தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சமூகம் முதலில் ஜி எஸ் பி பிளஸ் சலுகையை பின் தங்கிய நாடுகளுக்கு வழங்க முன் வந்தது.
ஐரோப்பிய சமூகம் ஏன் இதில் முந்திக் கொண்டது என்பதை புரிந்து கொண்டால் விளங்குவது அரசியல் ஆதிக்கம் தான். தற்போது சுதந்திர நாடுகள் எனப்படுவனவும் வளர்ச்சி குன்றிய நாடுகள், வளர்ச்சி அடையும் நாடுகள் என்றெல்லாம் அழைக்கப்படுவனவும் ஆன ஏக பெரும்பான்மையான பின்தங்கிய நாடுகள் இந்த ஐரோப்பிய சமூகத்தை சேர்ந்த நாடுகளின் கீழ் கொலனிய நாடுகளாக இருந்தன. சுதந்திரம் பெற்ற இந்த நாடுகளைத் தொடர்ந்தும் பொருளாதார ரீதியில் தமது காலடிகளில் வைத்திருக்கும் நோக்கிலேயே ஐரோப்பிய சமூகம் காட்டுகின்ற அக்கறை இது என்பதை நாம் கவனிக்கவேண்டும். இது நவகாலணித்துவத்தை உறுதிப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். அதாவது பழைய எஜமான்களின் புதிய பிச்சை ஆகும். இதை கரம் நீட்டிப் பெறுவதைத் தவிர வேறு எந்த மார்கமும் இந்த நாடுகளுக்கு இல்லை.

இலங்கை ஆடை உற்பத்தியில் சுமார் பதினைந்து லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். இவர்களில் அதிக பங்கு பெண்களுக்கு உண்டு. இவ்வாறான நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து முன் எப்போதும் இல்லாத வகையில்
அடுத்தடுத்த கடுமையான குற்றச்சாட்டுக்களால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கை தொடர்பாக அலசத் தொடங்கின. இலங்கைக்காகன வரிச்சலுகை நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இது தொடர்பான நெருக்கடி அழுத்தங்கள் அதிகரிக்கவே இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்ந்து ஆணைக்குழு 146 பக்கங்களைக் கொண்ட ஆரம்ப கட்ட அறிக்கையை கொழும்புக்கு அனுப்பி இது குறித்த பதிலுக்கு செப்டெம்பர் 10 ம் திகதி வரை காலம் கொடுத்திருந்தது.

அந்த அறிக்கையில் மனித உரிமைகள் நிலவரம், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் குடியேற்றம், காணாமல் போனோர், படுகொலைகளுடன் தொடர்புடையோரை நீதி விசாரணைக்கு உட்படுத்தல், சாட்சிகளின் பாதுகாப்பு, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல். தொழிலாளர் நலன், சிறுவர் மேம்பாடு, ஊடகவியலாளர் பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கு பதில் வழங்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இருந்தாலும் இலங்கை அரசு திருப்திப்படும்படி அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. அறிக்கைகளுக்கு பதில் வழங்க ஆர்வம் காட்டாத வேளை ஜனாதிபதி முதல் ஆளும் கட்சி அமைப்பாளர் வரை ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கத் தொடங்கினர். இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்தின் இயலாமை பற்றியும் இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படப் போகும் வீழ்ச்சி நிலை பற்றியும் ;கோஷம் எழுப்பியதுடன், ஆடை ஏற்றுமதி வரிச்சலுகை நீக்கப்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். பொருளியல் நிபுணர்களும் ஏற்றுமதி வர்த்தகர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை ஏற்றுமதி வரிச்சலுகை ரத்துச் செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அதனை தொடர்ந்து நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குலக நாடுகளுடன் வரிச்சலுகை பெறுவது தொடர்பில் விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளாவிட்டால் அது இலங்கைக்கும் மக்களுக்கும் அரசிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுயாதீன அமைப்புக்கள் சுட்டிக்காட்டின.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்தில் ஓரளவு நன்மதிப்பைப் பெற்ற 4 அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றை அவசரமாக நியமித்து அக்குழுவிடம் இலங்கைக்கு வரிச்சலுகை தொடர்ந்தும் கிடைக்க தீவிர பங்காற்றுமாறு கோரியிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் ஜீ எல் பீரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கை வருவதை அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்காதென அறிவித்துள்ளார். வரிச்சலுகையைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக சர்வதேச சமூகம் கோரும் மனித உரிமை மீறல் தொடர்பான எத்தகைய விசாரணைக்கும் இலங்கை அனுமதி வழங்காதெனவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான ஊடகத்திற்கு இவ்வாறு தெரிவித்தார். ஏற்றுமதி வரிச்சலுகை இரத்துச் செய்யப்பட்டால் அதன் இழப்பை எதிர் கொள்ள இலங்கை அரசு தயார். மனித உரிமை பேணலுக்காகா இலங்கையைத் தண்டிக்கும் பொருட்டு ஆடைத்தொழிலாளிகளை தண்டிப்பது நியாயமா? சலுகைகள் இரத்துச் செய்யப்பட்டால் ஆசியாவில் இலங்கைக்கு புதிய சந்தை வாய்ப்பு பெருகும். நாங்கள் இழப்பை வெற்றி கொள்வோம் தற்போது புதிய சந்தைகள் திறக்கப்படுகின்றன. ஏங்களுடன் சீனா இந்தியா கொரியா ஜப்பான் ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் நட்புக்கொண்டுள்ளன். பயங்கரவாதப்பிடியில் இருந்து மீண்டும் மீண்டு வந்த இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எந்த வழியில் ஒத்துழைக்கப்போகின்றது என்பதை அறிய சர்வதேசமும் இலங்கையும் ஆவலாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் புள்ளிவிபரம் மற்றும் கணக்கெடுப்பு திணைக்கள பதில் ஆணையாளர் அண்மையில் தெரிவித்த கருத்து உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான தேவையை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி பாதித்துள்ளது. தைத்த ஆடைகளுக்கும் தேயிலைக்குமான தேவை உலக சந்தையில் குறைவடைந்ததைத் தொடர்ந்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை பிஸ்னஸ் ஒன்லைன் தகவலின்படி 2009 முதல் காலாண்டில் 5.3 சதவீதமாக காணப்பட்ட வேலையற்றோர் தொகை இரண்டாம் காலாண்டில் 6.3 வீதமாக அதிகரித்துள்ளது. 2009 ஆண்டின் 2 ஆம் காலாண்டில் கடந்த ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி 2 வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறான சர்ச்சைக்குரிய செய்தியின் மூலம் எந்தவித அறிவிப்பும் இல்லாதா நிலையில் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

அமெரிக்கா கனடா ஜப்பான் ஆகிய நாடுகள் மூன்றும் தத்தமது நாடுகளில் அவற்றில் ஜி எஸ் பி முiறியின் கீழ் செய்த இறக்குமதியின் பெறுமதி 1600 கோடி யூரோ ஆகும். அதே வேளை 2007 இல் ஐரோப்பிய சமூக நாடுகளின் இறக்குமதி ஆனது 5200 கோடி யூரோ ஆகும். இரண்டு தரப்புகளிடமும் விட்டுக்கொடுப்பு இல்லாத தருணத்தில் ஏற்படப்போகும் பாரிய தாக்கம் சுனாமியை விட வேகமாக எங்களையே தாக்க வல்லது. இருதரப்பினரின் புரிந்துணர்விலே தான் இலங்கையின் பொருளாதார கயிறு உள்ளது என்பதை மறக்கக் கூடாது.

இலங்கை அனுபவிக்கும் வர்த்தக உடன்படிக்கைகள்

• இருபுடை
• பிராந்திய சலுகைகள்
• பல்புடை
• பரஸ்பரமற்றது
• ஜீ எஸ் பி பிளஸ்