ஆண்டுதோறும் ஜூன் மாதம் 20 திகதி அகதிகள் தினமாக நினைவு கோரப்படுகிறது. நேற்று முன்தினம் அது உலகளாவிய ரீதியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அகதிகள் பற்றிய உலகளாவிய கண்ணோட்டம் பலவிதமாகவுள்ளது. “அகதி என்றால் என்ன?” எனக் கேட்கும் பிள்ளையும் உலகின் இன்னொரு பாகத்தில் இருப்பதை தவிர்க்க முடியாது. அகதிகளுக்காக நாம் செய்ய நினைப்பவையும் செய்தவையும் என்ன? நாங்கள் அகதிகளாகிய போது எங்களுக்கு கிடைத்தது என்ன? பல்வேறு விதமான எண்ண ஓட்டங்கள் மனதில் அகதிகள் பற்றி ஓடிக்கொண்டேயிருக்கின்றது.



2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் சிறப்புத் தீர்மானம் ஒன்றின் படி அகதிகளுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக உலக அகதிகள் தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந் நாளின் முக்கிய நோக்கம் பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி இன்னல் பட்டு உடமைகள், உறவுகளை இழந்து உள்நாட்டிலும் பிற நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு சூட்டப்பட்ட பெயரான அகதிகள் எனும் பட்டத்தையும் அதன் வலிகளையும் உலக மக்களுக்க உணரவைப்பது தான்.

கடந்து சென்ற காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு போர்களால், அரசியல் சமூகச் சூழல்களால், அகதிகளாக அல்லலுறும் மக்களை நினைவு கூரும் வகையில் பல்வேறுபட்ட நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள், நினைவஞ்சலிகள் போன்றன இடம்பெற்றன. இவற்றுக்கெல்லாம் தலைமை தாங்குவது UNHCR.


1951ஆம் ஆண்டின் அகதிகள் நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் மேல் குறிப்பிட்ட வரைவிலக்கணம் ஒன்றைச் செய்தது.

அகதி என்ற கருத்து சொந்த நாட்டில் இடம்பெறும் போர் இவன்முறை, அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் நாட்டைவிட்டு வெளியேறுபவர்கள் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தன்னை அகதியாக ஏற்கும் படி விண்ணப்பம் கோரும் ஒருவர் அகதியாக ஏற்கத்தகுதியுடையவராகிறார். 2006ம் ஆண்டு அகதிகளின் எண்ணிக்கை 8.4 மில்லியன். ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு, உலகின் மொத்த அகதிகள் தொகை 12 019 700 என கணக்கிட்டது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் வரையறுத்துள்ளபடி அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு
  • அகதிகள் தாமக சொந்த நாட்டுக்கு திரும்புதல்
  • குடியேறிய நாட்டிலேயே கலந்து விடுதல்.

போர்க் குற்றவாளிகள் ஒரு போதும் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.

விளக்கம் முடிந்து விட்டது. இனி நடைமுறைக்கு வருவோம். அதுவும் இலங்கைக்குள் வருவோம்…. அகதிகள் தினம் என்ன மே 18ஐ நினைத்தாலே போதும். பிரபல புள்ளிகள் கடந்த வாரத்துக்குள் இலங்கைக்கு வந்து போயுள்ளார்கள். இலங்கையில் எவ்வளவு பேர் அகதிகளாகியுள்ளனர் என்ற சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இங்க இருக்கிற ஆட்;களை விட கூடவாகத்தான் இருக்கும்.

தினங்களைப் பிரகடனப்படுத்துவதில் பிரயோசனம் இல்லை. அந்த நாளுக்கான கருப்பொருளுக்கு உயிர் கொடுப்பதில் தான் இருக்கிறது அதன் தார்ப்பரியம். அதைத்தான் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்ப்பாட்டங்களும் மேடைப்பேச்சுக்களும் செய்யப் போவது ஒன்றும் இல்லை.

அடுத்தகட்ட நடவடிக்கையைத் தான் எப்போதும் சிந்திக்க வேண்டும். அங்கு தான் தீர்வு கிட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஓலமிட்டுக் கொண்டிருப்பதில் கிடைக்கக் கூடியதும் கைவிட்டுச் செல்லலாம். எனவே சிந்தித்து செயற்படுங்கள்.