பேருந்து மற்றும் ரெயில் வண்டிகள் தொடர்பான இலங்கையின் முதலாவது கண்காட்சி கடந்த சனியன்று ஆரம்பமானது. தொடர்ந்து இரண்டு நாட்களாக இந்தக் கண்காட்சி முற்பகல் 10 மணி தொடக்கம் இரவு எட்டு மணி வரை நாரஹென்பிற்றி சாலிகா மைதானத்தில் இடம் பெற்றது. அமைச்சர் குமார வெல்கம கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இதனை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்பாடு செய்தது.

பஸ் வண்டி இறக்குமதி நிறுவனங்கள், காப்புறுதி அமைப்புக்கள், உதிரிப்பாக விநியோக நிறுவனங்கள், வாகனங்களில் இருந்து வெளியேறக்கூடிய புகையை சோதிக்கும் அமைப்புக்கள் உள்ளிட்ட ஸ்தாபனங்கள் நடத்தும் 50க்கு மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. கண்காட்சியில் நவீன பஸ் வண்டிகள், பழைய பஸ்வண்டிகள், கோச்சி வண்டிகள், உதிரிப்பாகங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன. இங்கு வாகன உதிரிப்பாகங்களை விலைக்கழிவிலும், தவணைக் கட்டண முறைகளிலும் பெற்றுக்கொள்ள முடிந்தது. சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந்த வண்டிகள் சிறுவர்களின் மனதைக் கவர்ந்ததை காண முடிந்தது. அதிகளவானவர்கள் ஆர்வமாக ஒவ்வொரு பஸ்களின் முன்னாலும் ஏறியும் நின்று படங்களை எடுத்துக் கொண்டனர்.

போக்குவரத்துப் பொலிஸாரின் விசேட கருமபீடமும், கண்காட்சி கூடமும் அமைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் துண்டுப்பிரசுரங்களும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய விடயங்களும் வழங்கப்பட்டன.

வித்தியசமான இந்த கண்காட்சி பலரது பாராட்டையும் பெற்றது.





































படங்கள் காப்புரிமையுடையன