நாடாளுமன்றத்துக்கு அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் கடந்த மாதம் 26ம் திகதியாகும். அன்றிலிருந்து இன்று வரை (24.03.2010) 147 தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


87 பாரிய சம்பவங்களில் 22 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதே வேளை பொதுச்சொத்து துஷ்பிரயோகம் மற்றும் துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தமது கவனத்தை திருப்பியுள்ளதாக வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பொதுத் தேர்தலில் எத்தனை வன்முறைகள் நடைபெறப் போகின்றனவோ? எண்ணுக்கணக்குக்கு மிஞ்சிவிடும் போல கிடக்குது. ஜனவரி மாதக் கடைசியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னர் எப்போதும் இல்லாதளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் உயர்ந்திருந்தன. தேர்தல் நெருங்கி இறுதியன்று அண்மித்தபோது 800 இற்கு மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.


வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பெப்ரவரி 26ம் திகதியிலிருந்து மார்ச் 8ம் திகதி வரை 75 (65சதவீதம்) பாரிய வன்முறைச் சம்பவங்கள் உள்ளடங்கலாக 115 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 75இல் 25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பானதாகும்.

  • 06 காயப்படுத்தல் சம்பவங்கள்
  • 03 பாரிய காயப்படுத்தல் சம்பவங்கள்
  • 22 தாக்குதல் சம்பவங்கள்
  • 14 கொலை அச்சுறுத்தல்கள்
  • 25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல்
  • 05 தீவைப்புச் சம்பவங்கள்.


  • பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் குருநாகல் மாவட்டத்தில் 6 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
  • தென் மாகாணம்- 05 உட்கட்சி மோதல் சம்பவம்.
  • சப்ரகமுவ மாகாணம்- 12 பாரிய சம்பவங்களுள் 05 துப்பாக்கி பிரயோகம்.
  • கிழக்கு மாகாணம்- 03 சம்பவங்கள்.
  • வடமத்திய மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.
  • மேல் மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.
  • வட மேல் மாகாணம்- 01 சம்பவம்.
  • மத்திய மாகாணம்- 01 சம்பவம்.

தேர்தல் நெருங்கும் வேளையில் அவதானிக்கக்கூடிய இன்னுமொரு விடயம் உட்கட்சி மோதல்களுக்கு வழிவகுக்கும் விருப்பு வாக்கிற்கான போட்டியாகும். ஐ.ம.சு முன்னணிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள 91 முறைப்பாடுகளுள் 23 முறைப்பாடுகள் அக்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலில் தமது பக்கம் தாம் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்றுவிட வேண்டும். தாம் ஆசனத்தைப் பெறவேண்டும் என்ற அரசியல் வெறியும் அதிகார மோகமுமே தேர்தல் கால வன்முறைகளுக்கு வித்தாகவும் உரமாகவும் அமைகின்றது.

வாக்குரிமை என்பது ஒவ்வொரு வாக்காளனும் தனது தெரிவுக்கும் விருப்பத்துக்கும் ஏற்றாற் போல அதனைப் பயன்படுத்தல் என்ற சுதந்திரச் செய்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. அந்தக் கோட்பாட்டை தகர்த்து எறியும் விதத்தில் அரசியல்வாதிகள் தமது அடாவடித்தனத்தைக் கட்டவிழ்த்து தாமே வெற்றிபெற வேண்டும் என்று செயற்படுவது இந்த நாட்டில் கடந்த சில வருடங்களாகச் சாதாரணமாகி விட்டது.

தேர்தல் என்பது வன்செயல்களோடு சேர்ந்தது என்ற நிலை இங்கு வழமையாகிவிட்டது.

அனேகமாக தேர்தல் கால மோதல்களும் வன்முறைகளும் போட்டியிடும் எதிரணி கட்சிகளுக்கு இடையே நடைபெறுவது தான் வழக்கமாக இதுவரை இருந்து வந்தது. இம்முறை ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்வது தான் கவலைக்குரிய விடயமாகும்.

மக்களாட்சி என்ற ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிந்து துவம்சம் செய்துவிடவல்ல தேர்தல் வன்செயல்களை தடுப்பதும் அவற்றில் ஈடுபடுவோரை பாகுபாடின்றி தண்டிப்பதும் பக்கசார்பின்றி நடவடிக்கைகளை எடுப்பதும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பெரும் பொறுப்பு பொலீஸாரையும் நீதிமன்றங்களையும் சார்ந்தவை.

நஞ்சு மரம் முளையிலேயே கிள்ளி எறியத்தவறினால் மக்கள் ஆட்சி மல்லாக்காப் படுக்க நேரிடும். வன்முறைகள் தெளிவுபடுத்துவது ஜனநாயகம் கேலிக்குரிய பொருளாக மாறிவிட்டது என்பதைத்தான்.
நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் இவற்றை வருங்காலத்திலாவது தடுக்க அக்கறை காட்டுவார்களா?

இல்லை இனி இது தேர்தல் கால கலாச்சாரமாகுமா???