நேற்று உலக உணவுகள் தினம் கொண்டாடப்பட்டது. இன்று வறுமை ஒமிப்புக்கான சர்வதேச தினமாகும். இரண்டிற்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறதென்றால் உணவும் வறுமையும் அடுத்தடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. அதில் தான் அந்த இரு நாட்களின் பொருத்தப்பாடும் அதன் கருத்தமைவும் வெளிப்படுகிறது. அனைவருக்கும் உணவுத் தேவை பூர்த்தி செய்கையிலே தான் வறுமை என்பது தலை தூக்குகிறது. அதாவது அடிப்படை வசதியான உணவுக்காக அடுத்தவரிடமோ அல்லது அயல் நாட்டிடமோ கையேந்தும் நிலை ஏற்படும் போதே அதை வறுமை என வரையறுக்கிறது.


ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனம் அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதையும் நேற்றைய உணவுகள் தினம் குறிக்கிறது. உலக உணவு தினம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப் பொருளில் கொண்டாடப்படுகிறது. நேற்றைய உணவுகள் தினத்துக்கான தொனிப்பொருள் - பட்டினிக்கு எதிராக ஐக்கியப்பட்ட நிலைப்பாட்டை எடுங்கள். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1992ம் ஆண்டிலேயே ஒக்டோபர் 17ம் திகதியை வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக பிரகடனம் செய்து தீர்மானத்தை நிறைவேற்றியது. இன்றைய வறுமை ஒமிப்பு தினத்துக்கான தொனிப் பொருள் - வறுமையில் இருந்து கண்ணியமான வேலைக்கு இடைவெளியை நிரப்புதல் ஆகும்.

உலக நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டால் உணவுப் பற்றாக்குறையினால் 100 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலும் தற்போதைய நிலவரப்படி ஆபிரிக்க நாடுகள் மிக மோசமாகப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. களிமண்ணை உணவாக உண்ணும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் பட்டினியோடு மட்டும் வாடுதல் அல்லாமல் அவர்களைக் கொடிய நோய்களும் பீடித்திருக்கின்றன. இவற்றோடு அவர்களின் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி போன்றன பாதிப்படைகின்றன. அதே வேளை அண்மைய வருடங்களில் உலகில் ஏற்பட்ட உணவுத் தானிய நெருக்கடியும் பொருளாதார மந்த நிலையும் பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களை தொடர்சியாகப் பாதித்துக்கொண்டியிருக்கின்றன.


பட்டினிக்கு சவாலாக மறுபுறம் இயற்கை அனர்த்தங்கள் குறிப்பிட்ட சில நாடுகளைத் தாக்கிய வண்ணம் இருக்கின்றது. இதனாலும் பட்டினி, வறுமை மேலும் அதிகரிக்கின்றது. ஒவ்வொரு வருடமும் மத்திய காலப்பகுதி கணக்கெடுப்பின் படி 17000 குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர். குவைத், மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் பட்டினி ஒழிப்பில் ஆர்வத்துடன் செயற்படுகின்றன. தெற்காசிய வல்லரசான இந்தியாவின் நிலை பட்டினி விடயத்தில் கவலைக்கிடமாகத் தான் உள்ளது. உலகில் பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் அதாவது அரைவாசி எண்ணிக்கையானோர் இந்தியர்களாகவே உள்ளனர்.

பட்டினி ஒழிப்பில் இலங்கை 88 நாடுகளில் 39வது இடத்தில் உள்ளது.

பட்டினி ஒழிப்பிற்கு வல்லரசு மற்றும் தனவந்த நாடுகள் உதவி செய்வதில் பின் நின்றாலோ அல்லது அளித்த உத்தரவாதத்தை மீறினால் அடுத்து வரும் பத்து வருடங்களில் 4கோடி 50லட்சம் சிறுவர்கள் இறக்க நேரிடும் என பிரிட்டிஷ் நிறுவனமான ஒக்ஸ்பாம் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

பட்டினிக்கு எதிராக அரசாங்கங்களும் உணவு முறைமை நிறுவனங்களும் பிராந்தி ரீதியிலான வர்த்தக மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் உலகளாவியரீதியில் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும். பட்டினியில் வாடும் மக்களை காப்பாற்றுவதற்காகவும் உணவு தொடர்பான உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்கும் ஐக்கியப்பட்ட அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.