Showing posts with label ஜி.எஸ்.பி பிளஸ். Show all posts
Showing posts with label ஜி.எஸ்.பி பிளஸ். Show all posts

இன்றைய காலப்பகுதிகளில் இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியல்வாதிகள் சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் என்ற போக்கே தொடர்கிறது. இந்த சூழ்நிலைகளில் அரசியல் வாதிகளின் செல்வாக்கு குறைவடைந்து கேள்விக் குறியாகும் வேளை, மறுபுறம் மக்கள் மத்தியில் அரசியல் என்பது பொம்மலாட்டமாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஓவ்வொரு அரசியல் கட்சியும் நிலைமைகளை தமக்கு ஏற்ற மாதிரி சாதகமாக தங்கள் பக்கம் திருப்பி அதில் நன்மையடைய முயற்சிக்கிறார்கள். இதற்கு சரியான மூல காரணம் இலங்கை அரசியல் வாதிகளும் சரியான தலைமைத்துவமும் இல்லை என்பதே ஆகும். எந்த விதத்திலும் விதிவிலக்கில்லை என்ற போக்கே தொடர்கிறது.

அரசியல் விவகாரங்கள் இலங்கையில் திடீர் திடீரென மாற்றம் பெறுவதும் அதற்கேற்ப அரசியல்வாதிகளும் சாதுரியமாக காய் நகர்த்தல்களில் ஈடுபடுவதும் தான் மக்களுக்கு வியப்பாகக் காணப்படுகிறது. ஆளுந்தரப்பும் எதிர்தரப்பும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருப்பதும் மறுகணம் பூதம் வெளிக்கிட்டது போல இரு தலைவர்களும் ஒன்று கூடி பொது இணக்கப்பாட்டுக்கு இணங்குவது போல மக்கள் மத்தியில் தோன்றுவது, இவ்வாறான பின் புலத்தில் அவர்கள் இணக்கப்பாட்டை நம்புவதா? மறுப்பதா என மக்கள் மத்தியில் திடீர் கேள்விகள் முளைத்துள்ளன.

ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக கடந்த மாதம் முதல் பேச்சுக்கள் ஆமை வேகத்தில் சென்ற கொண்டிருக்கிறது. முயல் வேகத்தில் ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித் தலைவருக்குமிடையேயான பேச்சுக்கள் காரணமாக கட்சித் தாவல்கள் தற்றும் கட்சிகளின் உட்பூசல்கள் வெளிவருகின்றன.

எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்த ஆளுந்தரப்பு முயற்சிப்பதாகவும் இதனால் அரசுடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ரணில் தெரிவித்துள்ளார். இவ்வாறான போக்குகள் தொடர்வதால் இரண்டு தரப்புகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுக்கு இடமே இல்லை என்று எதிர்பார்த்திருக்க திடீர் திருப்பமாக கடந்த கிழமை இரு தரப்பின் தலைவர்களும் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது தடைப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் பேச்சு வார்த்தையினை மீள ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

எதுவாக இருந்தாலும் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இணக்கமானதோர் முடிவை எட்ட வேண்டும் என்பது தான் எல்லோர் எதிர்பார்ப்பும். ஆனாலும் ஆளுந்தரப்பு தங்கள் ஆட்சிக் காலத்தை நீடிப்பதற்கான வியூகங்களைத் தீட்டி வருகின்றது. இதை இன்றைய நடவடிக்கைகள் காட்டிக் கொடுக்கின்றன.
அதே நேரம் எதிர் தரப்பு தர்ம சங்கட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உள்வீட்டு பிரச்சியையை விட அடுத்த தலையிடி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைப்பது எப்படி? அதற்கான இறுதி நாள் நாளை ஆகஸ்ட் 15ம் திகதி. பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால் இப்பொழுதும் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ம் திகதிக்குப் பின்னரும் பேச்சுவார்த்தையை தொடர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. ஆகா எவ்வளவு அதிஷ்டம் கிடைத்தும் யானை தன் கையால் தன் தலையில் மண்ணையள்ளிப் போட்டால் யார் தான் என்ன செய்றது?

இருந்தாலும் வர்த்தக சலுகைகளை நீடிக்க வேண்டுமானால் தங்கள் 15 நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணைக்குழு கோரியதை அடுத்து இலங்கை அரசு ஒன்றியத்துடன் நடத்தி வந்த சகல பேச்சுக்களை கடந்த யூலையில் நிறுத்தியது.

ஓட்டு மொத்தத்தில் இலங்கை அரசியலே ஒரு குழப்பமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தீர்வு யார் வல்லவன் யார் அரசியலமைப்பை மாற்றுவது என்ற போட்டி இல்லை. இப் பொழுது தேவை நாட்டின் பொருளாதாரத்தையும் எதிர்கால திட்டமிடல்களையும் சரியான பாதைக்கு திருப்புவது தான்.தரப்புக்கள் இணங்கி செயற்பட வேண்டிய கட்டாய தேவைப்பாடு உருவாகியுள்ளது.

இணக்கங்கள் கருத்தொன்றிப்பு மூலம் தான் தீர்வை எட்ட முடியும். இல்லா விட்டால் எதுவுமே யாருக்கும் எட்டாக் கனியாகி விடும்.

கடந்த சில காலங்களாக இலங்கையை உழுக்கும் ‘ஜி.எஸ்.பி’ என்ற சொல்லிற்கு முடிவும் கிடைக்கப் போகின்றது போல் தெரிகின்றது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றே தீருவது என கங்கணம் கட்டி களத்தில் இறங்கிய இலங்கை அரசாங்கம் ‘சீ சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, “ஜி.எஸ்.பி யை மறந்து தன்னம்பிக்கையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்” என்ற ரீதியில் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றது.

இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையானது எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தில் இலங்கையைத் தள்ளிவிட்டு விட்டு கை நழுவிப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது. இந்த சலுகையை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்த நிலையிலே, பதில் அனுப்புவதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்று ஆடை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு இந்த வரிச் சலுகையானது இல்லாது போனால் ஏற்றுமதியில் 12 சதவீதத்தை இழக்க நேரிடும்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்காக அந்தக் காலப்பகுதிக்குள் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய 15 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் அறிவித்திருந்தது. மிகவும் கடுமையான நிபந்தனைகள் போல் அதை அரசு கண்டு கொள்ளவே இல்லை. அதற்கு ஒரு பதில் கூட அனுப்பவில்லை. இதிலிருந்து விளங்கிக் கொள்வது, அரசு இலங்கையின் இறைமையை எந்தளவுக்குக் கட்டிக் காக்கின்றது என்பது. ஜூலை 1ஆம் திகதிக்குள் தம்மாள் விதித்த நிபந்தனைக்கு உடன்படுகிறதா இல்லையா என்ற அறிவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எவ்வளவோ முயற்சித்தது. பல வலியுறுத்தல்களையும் முன்வைத்தது. இலங்கை அரசு அது தொடர்பாக மௌனத்தை மட்டுமே பதிலாக வைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தனது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியிட்டது. 2005ல் சுனாமி ஏற்படுத்திய அழிவைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக இந்த சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருந்தது. உலகில மொத்தமாக 14 நாடுகள் இச் சலுகையை அனுபவிக்கின்றன. அதிலும் ஆசியாவில் இச்சலுகையைப் பெறும் ஒரே நாடு இலங்கை தான். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 7200 வகையான பொருட்களை எந்த விதமான சுங்கத் தீர்வையும் இன்றி ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலமாக வருடாந்தம் இலங்கை அரசு 150 மில்லியன் ரூபாவை வருவாயாகப் பெறுகிறது.

இலங்கையில் கடந்த 14 மாதங்களுக்குள் 40 ஆயிரம் வேலையாட்கள் தொழில் இருந்து விலக்கப்பட்டுள்ளதுடன் இனி வரும் காலங்களில் ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்பட்டதன் விளைவாக வேலையிழப்போர் தொகை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட பொருளாதாரத்திலும் பாரிய தாக்கங்கள் மறைமுகமாக ஏற்படவாய்ப்புள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினால் குறைந்த விலையில் ஆடைகளை ஏற்றுமதி செய்யக் கூடியதாக இருந்ததால் ஏனைய உலக நாடுகளுடன் போட்டி போட முடிந்தது. இனி அந்தக் கதைக்கு இடமேயில்லை என்றாகிவிட்டது. ஐரோப்பிய சந்தையில் ஏனைய நாடுகளுடன் போட்டி போட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதோடு இலங்கையில் உள்நாட்டு உற்பத்திஇ ஏற்றுமதி வருவாய்இ அந்நிய செலாவாணி போன்றவற்றில் பாரிய வீழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புள்ளது.



ஜி.எஸ்.பி பிளஸ் மூலம் எவ்வளவோ பாதிப்புக்கள் நாட்டை தாக்க காத்திருந்தும் இலங்கை அரசு ஆட்டம் காணாமல் இருப்பதன் மர்மம் தான் என்ன? இதன் பின்னால் உள்ள சூழ்ச்சிகள் யாருக்கும் விளங்குவதாக இல்லை. ஆனாலும் இழப்புக்களைச் சந்திக்க அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளது. அது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக் குறிதான். “150 மில்லியன் டொலருக்காக நாட்டை அடகு வைக்க முடியாது என்கிறார் ஐனாதிபதி”. நடைமுறையில் இலங்கை அரசைப் பொறுத்தவரை இதை எட்டாக் கனியாகவே கருதி இவ்வாறு அசட்டையீனமாக இருப்பது போல் வெளிக்காட்டிக் கொள்கிறது. ஆனால் இச் சலுகையை பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை நடாத்தியது, பிரதிநிதிகளை அனுப்பியது. இதெல்லாம் சரிவராது என்று தெரிய வந்ததுடன் தனது பாதையை மாற்றி ‘ஐரோப்பிய ஒன்றியம் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது’ என கருத்து தெரிவிக்கிறது. கடந்த சில வருடங்களாக “சர்வதேச சமூகத்தினருக்கு உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமையில்லை” என இலங்கை அரசாங்கம் சொல்வது கேட்டு புளித்துவிட்டது.

சர்வதேசம் எத்தகைய ஆலோசனைகள் முன்மாதிரிகளை முன் வைத்தாலும் உடனே அது இலங்கை அரசுக்குரிய இறைமையை மீறுவதாகவும் உதாசீனப்படுத்துவதாகவும் இருக்கும் செயல் என ஒரு பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த நிபந்தனைகள் எதுவும் வர்த்தக செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை என்று காரணம் காட்டி தட்டிக் கழிக்கவே முனைந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் பற்றி திருப்தியளிக்கக் கூடிய அறிக்கையை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறையாக இருந்தது. இது இலங்கை அரசுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்று. அதனால் தான் முன்கூட்டியே ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய தவறான கருத்துக்களை வெளியிடத் தயாராகியது.



ஜி.எஸ்.பி பிளஸ் இற்காக இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்திடம் அடி பணியப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான உறவு இந்தச் செயற்பாடோடு முடிந்துவிடப் போவதுமில்லை. இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவு முறையிலும் விரிசல் ஏற்படுமென கருதப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் கூட பல நிபந்தனைகளுக்கு உட்பட்டே இலங்கை அரசு ஆறு கட்டங்களாக கடன்பெறத் தயாராகியுள்ளது. தொடர்ந்தும் இவ்வாறான தன்மானப் பிரச்சினையால் மற்றைய உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் கூட விரிசல், கசப்பு ஏற்படப்போகும் நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.

இன்று தன்மானத்தை அடகு வைக்கத் தயாராக இல்லாத இலங்கை அரசாங்கம் இனி வருங்காலங்களில் உலகளாவிய ரீதியில் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும் காலமும் வெகுதொலைவில் இல்லை. காரணம் யுத்த வெற்றிக்கு பின்னணியில் செயற்பட்ட நாடுகள் தங்கள் வாய்களை திறக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு பதிலளிக்கும் கட்டாயமும் இலங்கைக்கு உண்டு. யுத்தத்தினை சுலபமாக மாற்று வழியில் கையாளத் தெரிந்த இலங்கைக்கு ஜி.எஸ்.பி யையோ, மனித உரிமைகளுக்கான நிபுணர் குழுவையோ சரியாக கையாளத் தெரியாமல் போனது எவ்வாறு? சர்வதேச அமைப்புக்கள் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளைகள் அல்ல அவர்களுக்கு ஆதாரமும் வேண்டும் என்பதை இலங்கை நன்றாகவே உணர்ந்துள்ளது.

Followers

About this blog

Labels