Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நாட்டிலுள்ள சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியளவில் உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்து நிறைவேற்றவுள்ளது. மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடத்தும் வகையில் இந்தத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்.

ஆனால் புதிய முறைப்படி தேர்தல் நடத்தப்போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையையே தேர்தல் திருத்தச் சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இருந்தாலும் புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்கு காலம் தேவை. வட்டார எல்லைகளை மீள் நிர்மாணம் செய்யவேண்டும் அத்துடன் அது தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளது சில பிரதேச சபைகள். இவற்றைத் தீர்த்து தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆவது வேண்டும்.

மாறாக அரசாங்கமோ எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் அதிகரிப்பதற்கு தயாராக இல்லை. தேர்தலை எப்படியாவது ஏப்ரல் மாத இறுதியிலாவது முடித்துவிடவேண்டும் என அரசு ஒற்றைக்காலில் நிற்கிறது. மார்ச் மாதமளவில் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் ஆனது அரச தரப்புக்கும் சரி ஐக்கிய Nதிய கட்சிக்கும் சரி ஒரு பலப்பரீட்சையாகவே அமையப்போகிறது. ஜனாதிபதியைப் பொறுத்தளவில் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்பதே நோக்கு. அதைவிட முக்கிய தேவைப்பாடாகவும் உள்ளது ஏனென்றால் அண்மைய நாட்களில் தெற்கில் உள்ள உள்ளுராட்சிச் சபைகளின் வரவுசெலவுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது. இது தான் முக்கிய பிரச்சினை. இதுவரை ஐந்து உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்ற ஆளும்கட்சி மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. இதுவே ஆளும்கட்சிக்குரிய முதல் வேட்டாக அமைகிறது.

அடுத்தது விலைவாசி உயர்வுக்கு அளவுகணக்கே இல்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றுவோம் என்று கூறிக்கொண்டு சரித்திரத்திலே நடந்திராதவாறு தேங்காயை இறக்குமதி செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டுவிட்டோம். முட்டை கூட இறக்குமதி செய்யும் நிலை வந்துவிட்டது. மறுபக்கத்தில் வெங்காயத் தட்டுப்பாடு தலையைப் பிய்க்கிறது. இந்த நிலையில் அரசு திணறிக்கொண்டிருக்கிறது இது எதிர்த்தரப்புக்கு சாதகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் பொதுமக்கள் தான் நசிபடுகிறார்கள்.

இந்தப் போக்கு தொடருமானால் மக்கள் மனதில் அரசுக்கு எதிரான கருத்து உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கான தாக்கத்தை தேர்தலில் பொறுத்திருந்து பார்க்கலாம். உள்ளுரிலேயே இந்த நெருக்கடிகளை அரசு சந்திக்கிறதென்றால் சர்வதேசளவிலும் இதற்கு சமமான நெருக்கடிகள் உள்ளன.

பிரித்தானியாவுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு உரையாற்ற முடியாத நிலையில் நாடு திரும்பியிருந்தார். இது மிகப் பெரிய இராஜதந்திரத் தோல்வியாகும். அத்துடன் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கிவிட்டன. எத்தனையோ பிரச்சினைகள் மத்தியில் இதை எப்படி சமாளிக்கப்போகிறதோ தெரியவில்லை. சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு எதையும் செய்யமுடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தன் பிடியில் இருந்து விலகுவதாக இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதே ஐ.நா குழுவினது இலக்கு என்கிறது அரசு. ஆனால் அந்தச் சந்திப்பு உள்நாட்டிலா அல்லது வெளிநாட்டிலா என்பது அறிவிக்கப்படவில்லை. உள்நாட்டில் சந்திப்பு இடம்பெற்றால் சரத்பொன்சேகாவை அவர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வேண்டுகோளாகும். இது ஆபத்து என்பது அரசுக்கு தெரியும். அதேவேளை ஐ.நா நிபுணர் குழு இலங்கைவர அனுமதிப்பதோ நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதோ ஆபத்தானது என்றும் அதை அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர்கள் இருவர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆராய்ந்து பார்க்கப் போனால் அரசு எடுத்த முடிவை அரசுக்குள் இருப்போர் எதிர்ப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. எவ்வாறாயினும் பெரிய அரசியல் ஆதாயத்தைப் பெற முடியாது. இதுவும் ஆளும்கட்சிக்கு ஒரு தலையிடியாக அமையலாம். ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சி இப்போது புதிய உற்சாகத்தில் உள்ளது. தங்களுக்குள் நிலவிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்பதைக் காட்ட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் எந்தளவு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும்.

இவ்வாறான போக்கு அரசை ஒரு விதத்தில் மிரளவைக்கிறது. தொடர் ஆட்சி என்று கண்ட கனவு போட்ட கணக்கெல்லாம் மறுஆய்வு செய்யும் நிலைக்கு வந்து விட்டது போல். இதற்கு வழி கோலுவது கடந்த கால நிகழ்வுகள் தான். எவ்வளவு தான் வெற்றி பெற்றாலும் மக்களிடத்தில் ஏற்படக்கூடிய வெறுப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. அது எப்போது சுனாமி போல் மேலெழும் என்பது யாருக்கும் தெரியாது. உள்ளுராட்சித் தேர்தலானது இரு தரப்புக்கும் இடையில் பெரிய சவாலாகவுள்ளது.

மீண்டும் வெற்றியை தன்பக்கம் காட்டுவது அரசின் நிலை. எப்படியாவது தலை நிமிரவேண்டும் என்பது ஐ.தே.கவின் நிலை. விரைவாகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசாங்கம் முனைவதில் இருந்து தெரிகிறது வெற்றி மீது அரசு கொண்டுள்ள நம்பிக்கை. துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் என்பது பழமொழி. கணிப்பு சரியா? பிழையா? என்பதை தேர்தல் வெளிப்படுத்தும் அத்துடன் தேர்தல் முடிவு அரசின் செல்வாக்குப் போக்கையும் தீர்மானிக்கும்.

எத்தனை தடவைகள் கூக்குரல்

ஒழிப்போம்!! தடுப்போம்!! விழிப்போம்!!

நடந்திச்சா?ஓரளாவாவது முடிஞ்சுதா?

இல்லையே!!காரணம் தெரியல….

அதை முறியடிக்கவே முடியாதா?

அப்படியென்னா அடுத்த சந்ததியும்

அனுபவிக்க வேணுமா?என்ன அநியாயம்

ஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்??

ஒவ்வொரு முயற்சியும் தோல்வி தானே!

ஆட்டிப்படைக்கும் வஞ்ஞானத்தாலும் முடியாதா??

பெரிய பெரிய அமைப்புக்கள் என்னத்துக்கு காசா கொட்டுகினம்??

2009ல் பாதிக்கப்பட்டோர் அரை மில்லியன் அமெரிக்காவில

இப்ப இலங்கையிலயுமாம் அதில யாழ்ப்பாணத்திலயும் ஒட்டிக்கிச்சு

வதந்தியை விட வேகமாகப் பரவுது

காலம் மாறிப்போச்சோ கலாச்சாரம் மாறிப்போச்சோ தெரியல

என்ன தான் இருந்தாலும் எய்ட்ஸ் நோயாளியை ஒதுக்காமல்

அவர்களுக்காகப் பாடுபடுங்கள்

எய்ட்ஸ் தினத்தன்று ஏதாவது அவர்களுக்கு உதவுங்கள்.

இலங்கையின் அரசியல் வியூகங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்ற வேளை தற்போது இலங்கை சீனாவுடனான பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்த உடன்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் அவருடன் இராணுவ மற்றும் முப்படைத் தளபதிகளும் சீனாவிற்கு கடந்த வாரம் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் போதே இராணுவ ஒத்துழைப்புக்களை பரிமாறி வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்திய இராணுவ தளபதி இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய இலங்கை நாடுகளின் படைகளுக்கு இடையில் இராணுவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு நடந்து சில நாட்களின் பின்னரே சீனாவுடன் இது போன்ற இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது இலங்கை.

தெற்காசியாவில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. அது போராக வெடிக்காத நிலையில் பொருளாதாரப் போட்டியாக நடந்து கொண்டிருக்கிறது.அதிக முதலீடுகள், ஏட்டிக்குப் போட்டியான உதவிகள் இராணுவ தந்திரங்கள் போன்றன பனிப்போரின் உச்சக்கட்டத்தினை அடைய வைக்கின்றது. இந்த போட்டிக்குள் தான் இலங்கை சரியாக மாட்டியிருக்கின்றது. இலங்கை சீனாவை பகைத்துக் கொள்ளாமலும் இந்தியாவை கை நழுவ விடாமலும் இரண்டு கைகளில் பிடித்த வண்ணம் தனது யுக்திகளை நகர்த்துகின்றது.

இந்தியாவுடன் சுமுகமான உறவை பேணத்தவறினால் கடந்த காலம் படிப்பித்த பாடம் சொல்லும் மீதியை, அதேவேளை சீனாவை உதறித்தள்ளி விட முடியாது. காரணம் கேட்டதை விட கேட்காததையும் வாரிக் கொடுக்கிறது. மேற்குலக நாடுகள் இலங்கையை கைவிட்ட நிலையில் ஜப்பானும் தனது உதவிகளை சரி பாதி நிறுத்திவிட்டது. இவற்றுக்கு எல்லாம் மத்தியில் போர் என்ற சாட்டு முடிவடைந்த நிலையில் இலங்கைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய தேவைப்பாடு உள்ளது. இதில் முக்கியமாக தென் பகுதி அபிவிருத்தி சீனாவின் கையில் இருக்கின்றது.

சீனா தான் கடந்த வருடம் இலங்கைக்கு அதிக நிதி வழங்கிய நாடுகளின் பட்டியலில் முன் நிற்கின்றது. இப்படி வாரி வழங்குவாரை எப்படித்தான் கைவிடும் இலங்கை. இதனால் தான் இந்தியாவை விட ஒரு முழம் கூட்டி இலங்கை சீனாவுக்கு மதிப்பளிக்கின்றது. இவ்வாறான இலங்கையின் விளையாட்டை இந்தியா விரும்பாது. அது இலங்கைக்கு தெரியும். மறுபுறம் இலங்கையின் காய்நகர்த்தல்களை இந்தியாவும் அறியும். இருந்தாலும் நடவடிக்கைகளைப் பார்க்கையில் இலங்கை சீனாவிடம் தான் உண்மையான நண்பனாக இருக்க ஆசைப்படுகின்றது போல். காரணம் புலிகளுடன் போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் சீனா செய்த உதவிகளை என்றுமே மறக்கத் தயாரில்லை இலங்கை.

யுத்தத்தின் போது இலங்கை இந்தியாவிடம் இருந்து நிறைய உதவிகளை எதிர்பார்த்தன. ஆனால் கிடைத்தது திருப்தியளிக்கவில்லை. அதாவது போரின் போது இராணுவ உதவிகளை வழங்கவில்லை என்பது தான் குறை. சீனா விடயத்தில் இறுதி முடிவு இதுதான். ஆயுதங்கள், வெடி பொருட்கள், தொழில்நுட்ப உதவிகள், இராணுவ தந்திரோபாயங்கள் போன்றவற்றில் சீனாவின் பிடியில் தான் இலங்கை. பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய தொழில்நுட்ப உதவிகளை சீனா வழங்கவுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளால் இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு பலப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

என்ன தான் தலை தெறித்தாலும், இலங்கை அரசு பாதுகாப்பை பலப்படுத்துவதிலும், புதிய இராணுவ யுத்திகளை பெற்றுக் கொள்வதிலும் முனைப்பாக உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. இதற்கான பின்னணி தெரியாத நிலையில் அனைவரினதும் மனதில் எழும் ஒரே கேள்வி, இலங்கையின் இந்த இரட்டைப்போக்கு தன்மை எவ்வளவு காலம் நீடிக்கப் போகின்றது என்பதும், மற்றும் இரட்டை பாசத்தால் இலங்கையை வலுப்படுத்தும் அளவிற்கு ஏதாவது நாடு குதித்து விடுமோ என்ற பயம்.

ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி 25ம் திகதி வரை படிப்பினைகளில் இருந்து பாடம் கற்பதற்கான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

2002ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது தொடக்கம் 2009 மே 18ம் திகதி போர் முடிவுக்கு வந்தது வரையான காலப் பகுதியில் இடம் பெற்ற சம்பவங்கள் குறித்து இந்த விசாரணை ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்து வருகிறது.

இலங்கை இறுதிப்போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் ,போர்க்குற்றங்கள் தொடர்பாகச் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்ட போதே அதை சமாளிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஸ இந்த விசாரணைக் குழுவை நியமித்திருக்கிறார்.இந்தக் குழுவே இறுதிப் போரின் போது போர்க் குற்றங்கள் நடந்துள்ளனவா என்பதை விசாரிக்கும் என இலங்கை அரசு கூறுகிறது.இருந்தாலும் சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில் இந்த விசாரணைக்குழுவின் மீது ஒரு துளி நம்பிக்கை கூட இல்லை. பல நாடுகள் இந்தக் குழு நியமனத்தை வரவேற்றாலும் எந்த ஒரு நாடும் குழுவை நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆணைக்குழு இறுதிப்போரின் போது இடம் பெற்ற போர்க் குற்றங்கள் பற்றி ஆராய தகுதி இருக்கிறதா என்பது தான் சர்வதேசத்தின் கருத்து.

நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. சுதந்திரமான – பக்க சார்பற்ற விசாரணை குழுவாகச் செயற்பட்டு சரியான முறையில் சாட்சியங்களை பதிவு செய்யுமா என்பது முதலாவது சந்தேகம்.

குழுவின் முதலாவது அமர்வின் போது அழைக்கப்பட்ட சாட்சியாக அரச சமாதானச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேர்னாட் குணதிலக்க சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் அரச தரப்பு அதிகாரிகளும் சாட்சியம் அளித்துள்ளனர். மற்றைய தரப்பான புலிகள் தரப்பிலோ தமிழர் தரப்பிலோ சாட்சியமளிக்க யாராவது தெரிவு செய்யப்பட்டுள்ளனரா அல்லது அவர்களை அழைக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

உண்மையான கருத்தை ஆணைக்குழு வெளியிட விரும்பினால் கட்டாயம் இரண்டு தரப்பினதும், கருத்தைக் கேட்க வேண்டும். ஆனால் புலிகள் தரப்பில் சாட்சியமளிக்க எவரும் இல்லை. அரச தரப்பில் சாட்சியமளிக்க அதிக வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது. புலிகள் தரப்பில் சாட்சியமளிக்க கூடியவர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு எங்கென்று தெரியாமல் போய் விட்டனர். அவ்வாறு இருக்கையில் சாட்சியங்கள் அனைத்தும் உண்மைத் தன்மையானவை என எவ்வளவு தூரத்திற்கு நம்புவது? இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதாவது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் சாட்சியம் சொல்ல வந்தால் அவர்கள் மீது பிரயோகிக்க எத்தனிக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாக நிர்ப்பந்த நிலை உருவாகுகையில் சிந்திக்க வேண்டியிருக்கும்.

சமாதானம் முறிந்து போனதற்கான காரணங்களை இந்த விசாரணை ஆணைக்குழு பக்க சார்பின்றி கண்டு பிடிக்க வேண்மாயின் அனைத்து தரப்புக்களினதும் சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

புலிகள் தரப்பாக சாட்சியமளிக்க கூடியவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் நடைபெறும் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக இந்த ஆணைக்குழுவின் அமர்வை வெளிநாடுகளில் நடத்த அரசு தயாராக உள்ளதா? இவ்வாறு செயற்படுவதன் மூலமே இவ் ஆணைக்குழுவின் நம்பகத் தன்மையை முக்கியமாக தமிழ் மக்கள் முன்னிலையில் கட்டியெழுப்ப முடியும்.

ஆணைக்குழுவின் விசாரணை ஒரு தலைப்பட்சமாக இடம்பெற வாய்ப்பு உருவாகின்றது. இதனால் முடிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படாதவையாகவே காணப்படும். பேர்னாட் குணதிலகவை எப்படி ஆணைக்குழு சாட்சியாக அழைத்ததோ… அது போல புலிகள் தரப்பில், தமிழர் தரப்பில் சாட்சியங்களை அழைக்க வேண்டும். அவர்கள் அச்சுறுத்தப்படும் வேளை உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஏற்பாடுகளுடன் அரசு செயற்பட்டால் பல வெளிவராத உண்மைகளை வெளிக் கொண்டுவர முடியும். பாதகமான உண்மைகள் வெளிவந்து விடுமோ என்ற அச்சம் காரணமாகவே அரசு இவற்றை கவனத்தில் கொள்ளவில்லைப் போல்.

இலங்கை அரசு ஒரு பக்கத்தில் இருந்து திரட்டிய சாட்சியங்களைக் கொண்டு தயாரிக்கப் போகும் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே அமையப் போகின்றது. சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமானால் இந்த விசாரணை ஆணைக்குழுவை பக்க சார்பற்ற முறையில் அமைக்க வேண்டும்.

இவ்வாறு இல்லாத எத்தனை சாட்சிகளை அழைத்தாலும் சரி! எத்தனை ஆணைக்குழுவை அமைத்தாலும் சரி! நடுநிலையாகச் செயற்படாது விட்டால் சர்வதேசம் ஒரு போதும் அரசு வெளியிடும் அறிக்கையை ஒரு காலமும் நம்பப் போவதில்லை.

இன்றைய காலப்பகுதிகளில் இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியல்வாதிகள் சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் என்ற போக்கே தொடர்கிறது. இந்த சூழ்நிலைகளில் அரசியல் வாதிகளின் செல்வாக்கு குறைவடைந்து கேள்விக் குறியாகும் வேளை, மறுபுறம் மக்கள் மத்தியில் அரசியல் என்பது பொம்மலாட்டமாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஓவ்வொரு அரசியல் கட்சியும் நிலைமைகளை தமக்கு ஏற்ற மாதிரி சாதகமாக தங்கள் பக்கம் திருப்பி அதில் நன்மையடைய முயற்சிக்கிறார்கள். இதற்கு சரியான மூல காரணம் இலங்கை அரசியல் வாதிகளும் சரியான தலைமைத்துவமும் இல்லை என்பதே ஆகும். எந்த விதத்திலும் விதிவிலக்கில்லை என்ற போக்கே தொடர்கிறது.

அரசியல் விவகாரங்கள் இலங்கையில் திடீர் திடீரென மாற்றம் பெறுவதும் அதற்கேற்ப அரசியல்வாதிகளும் சாதுரியமாக காய் நகர்த்தல்களில் ஈடுபடுவதும் தான் மக்களுக்கு வியப்பாகக் காணப்படுகிறது. ஆளுந்தரப்பும் எதிர்தரப்பும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருப்பதும் மறுகணம் பூதம் வெளிக்கிட்டது போல இரு தலைவர்களும் ஒன்று கூடி பொது இணக்கப்பாட்டுக்கு இணங்குவது போல மக்கள் மத்தியில் தோன்றுவது, இவ்வாறான பின் புலத்தில் அவர்கள் இணக்கப்பாட்டை நம்புவதா? மறுப்பதா என மக்கள் மத்தியில் திடீர் கேள்விகள் முளைத்துள்ளன.

ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக கடந்த மாதம் முதல் பேச்சுக்கள் ஆமை வேகத்தில் சென்ற கொண்டிருக்கிறது. முயல் வேகத்தில் ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித் தலைவருக்குமிடையேயான பேச்சுக்கள் காரணமாக கட்சித் தாவல்கள் தற்றும் கட்சிகளின் உட்பூசல்கள் வெளிவருகின்றன.

எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்த ஆளுந்தரப்பு முயற்சிப்பதாகவும் இதனால் அரசுடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ரணில் தெரிவித்துள்ளார். இவ்வாறான போக்குகள் தொடர்வதால் இரண்டு தரப்புகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுக்கு இடமே இல்லை என்று எதிர்பார்த்திருக்க திடீர் திருப்பமாக கடந்த கிழமை இரு தரப்பின் தலைவர்களும் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது தடைப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் பேச்சு வார்த்தையினை மீள ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

எதுவாக இருந்தாலும் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இணக்கமானதோர் முடிவை எட்ட வேண்டும் என்பது தான் எல்லோர் எதிர்பார்ப்பும். ஆனாலும் ஆளுந்தரப்பு தங்கள் ஆட்சிக் காலத்தை நீடிப்பதற்கான வியூகங்களைத் தீட்டி வருகின்றது. இதை இன்றைய நடவடிக்கைகள் காட்டிக் கொடுக்கின்றன.
அதே நேரம் எதிர் தரப்பு தர்ம சங்கட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உள்வீட்டு பிரச்சியையை விட அடுத்த தலையிடி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைப்பது எப்படி? அதற்கான இறுதி நாள் நாளை ஆகஸ்ட் 15ம் திகதி. பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால் இப்பொழுதும் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ம் திகதிக்குப் பின்னரும் பேச்சுவார்த்தையை தொடர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. ஆகா எவ்வளவு அதிஷ்டம் கிடைத்தும் யானை தன் கையால் தன் தலையில் மண்ணையள்ளிப் போட்டால் யார் தான் என்ன செய்றது?

இருந்தாலும் வர்த்தக சலுகைகளை நீடிக்க வேண்டுமானால் தங்கள் 15 நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணைக்குழு கோரியதை அடுத்து இலங்கை அரசு ஒன்றியத்துடன் நடத்தி வந்த சகல பேச்சுக்களை கடந்த யூலையில் நிறுத்தியது.

ஓட்டு மொத்தத்தில் இலங்கை அரசியலே ஒரு குழப்பமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தீர்வு யார் வல்லவன் யார் அரசியலமைப்பை மாற்றுவது என்ற போட்டி இல்லை. இப் பொழுது தேவை நாட்டின் பொருளாதாரத்தையும் எதிர்கால திட்டமிடல்களையும் சரியான பாதைக்கு திருப்புவது தான்.தரப்புக்கள் இணங்கி செயற்பட வேண்டிய கட்டாய தேவைப்பாடு உருவாகியுள்ளது.

இணக்கங்கள் கருத்தொன்றிப்பு மூலம் தான் தீர்வை எட்ட முடியும். இல்லா விட்டால் எதுவுமே யாருக்கும் எட்டாக் கனியாகி விடும்.

கடந்த சில காலங்களாக இலங்கையை உழுக்கும் ‘ஜி.எஸ்.பி’ என்ற சொல்லிற்கு முடிவும் கிடைக்கப் போகின்றது போல் தெரிகின்றது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றே தீருவது என கங்கணம் கட்டி களத்தில் இறங்கிய இலங்கை அரசாங்கம் ‘சீ சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, “ஜி.எஸ்.பி யை மறந்து தன்னம்பிக்கையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்” என்ற ரீதியில் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றது.

இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையானது எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தில் இலங்கையைத் தள்ளிவிட்டு விட்டு கை நழுவிப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது. இந்த சலுகையை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்த நிலையிலே, பதில் அனுப்புவதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்று ஆடை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு இந்த வரிச் சலுகையானது இல்லாது போனால் ஏற்றுமதியில் 12 சதவீதத்தை இழக்க நேரிடும்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்காக அந்தக் காலப்பகுதிக்குள் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய 15 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் அறிவித்திருந்தது. மிகவும் கடுமையான நிபந்தனைகள் போல் அதை அரசு கண்டு கொள்ளவே இல்லை. அதற்கு ஒரு பதில் கூட அனுப்பவில்லை. இதிலிருந்து விளங்கிக் கொள்வது, அரசு இலங்கையின் இறைமையை எந்தளவுக்குக் கட்டிக் காக்கின்றது என்பது. ஜூலை 1ஆம் திகதிக்குள் தம்மாள் விதித்த நிபந்தனைக்கு உடன்படுகிறதா இல்லையா என்ற அறிவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எவ்வளவோ முயற்சித்தது. பல வலியுறுத்தல்களையும் முன்வைத்தது. இலங்கை அரசு அது தொடர்பாக மௌனத்தை மட்டுமே பதிலாக வைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தனது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியிட்டது. 2005ல் சுனாமி ஏற்படுத்திய அழிவைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக இந்த சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருந்தது. உலகில மொத்தமாக 14 நாடுகள் இச் சலுகையை அனுபவிக்கின்றன. அதிலும் ஆசியாவில் இச்சலுகையைப் பெறும் ஒரே நாடு இலங்கை தான். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 7200 வகையான பொருட்களை எந்த விதமான சுங்கத் தீர்வையும் இன்றி ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலமாக வருடாந்தம் இலங்கை அரசு 150 மில்லியன் ரூபாவை வருவாயாகப் பெறுகிறது.

இலங்கையில் கடந்த 14 மாதங்களுக்குள் 40 ஆயிரம் வேலையாட்கள் தொழில் இருந்து விலக்கப்பட்டுள்ளதுடன் இனி வரும் காலங்களில் ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்பட்டதன் விளைவாக வேலையிழப்போர் தொகை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட பொருளாதாரத்திலும் பாரிய தாக்கங்கள் மறைமுகமாக ஏற்படவாய்ப்புள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினால் குறைந்த விலையில் ஆடைகளை ஏற்றுமதி செய்யக் கூடியதாக இருந்ததால் ஏனைய உலக நாடுகளுடன் போட்டி போட முடிந்தது. இனி அந்தக் கதைக்கு இடமேயில்லை என்றாகிவிட்டது. ஐரோப்பிய சந்தையில் ஏனைய நாடுகளுடன் போட்டி போட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதோடு இலங்கையில் உள்நாட்டு உற்பத்திஇ ஏற்றுமதி வருவாய்இ அந்நிய செலாவாணி போன்றவற்றில் பாரிய வீழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புள்ளது.



ஜி.எஸ்.பி பிளஸ் மூலம் எவ்வளவோ பாதிப்புக்கள் நாட்டை தாக்க காத்திருந்தும் இலங்கை அரசு ஆட்டம் காணாமல் இருப்பதன் மர்மம் தான் என்ன? இதன் பின்னால் உள்ள சூழ்ச்சிகள் யாருக்கும் விளங்குவதாக இல்லை. ஆனாலும் இழப்புக்களைச் சந்திக்க அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளது. அது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக் குறிதான். “150 மில்லியன் டொலருக்காக நாட்டை அடகு வைக்க முடியாது என்கிறார் ஐனாதிபதி”. நடைமுறையில் இலங்கை அரசைப் பொறுத்தவரை இதை எட்டாக் கனியாகவே கருதி இவ்வாறு அசட்டையீனமாக இருப்பது போல் வெளிக்காட்டிக் கொள்கிறது. ஆனால் இச் சலுகையை பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை நடாத்தியது, பிரதிநிதிகளை அனுப்பியது. இதெல்லாம் சரிவராது என்று தெரிய வந்ததுடன் தனது பாதையை மாற்றி ‘ஐரோப்பிய ஒன்றியம் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது’ என கருத்து தெரிவிக்கிறது. கடந்த சில வருடங்களாக “சர்வதேச சமூகத்தினருக்கு உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமையில்லை” என இலங்கை அரசாங்கம் சொல்வது கேட்டு புளித்துவிட்டது.

சர்வதேசம் எத்தகைய ஆலோசனைகள் முன்மாதிரிகளை முன் வைத்தாலும் உடனே அது இலங்கை அரசுக்குரிய இறைமையை மீறுவதாகவும் உதாசீனப்படுத்துவதாகவும் இருக்கும் செயல் என ஒரு பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த நிபந்தனைகள் எதுவும் வர்த்தக செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை என்று காரணம் காட்டி தட்டிக் கழிக்கவே முனைந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் பற்றி திருப்தியளிக்கக் கூடிய அறிக்கையை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறையாக இருந்தது. இது இலங்கை அரசுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்று. அதனால் தான் முன்கூட்டியே ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய தவறான கருத்துக்களை வெளியிடத் தயாராகியது.



ஜி.எஸ்.பி பிளஸ் இற்காக இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்திடம் அடி பணியப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான உறவு இந்தச் செயற்பாடோடு முடிந்துவிடப் போவதுமில்லை. இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவு முறையிலும் விரிசல் ஏற்படுமென கருதப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் கூட பல நிபந்தனைகளுக்கு உட்பட்டே இலங்கை அரசு ஆறு கட்டங்களாக கடன்பெறத் தயாராகியுள்ளது. தொடர்ந்தும் இவ்வாறான தன்மானப் பிரச்சினையால் மற்றைய உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் கூட விரிசல், கசப்பு ஏற்படப்போகும் நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.

இன்று தன்மானத்தை அடகு வைக்கத் தயாராக இல்லாத இலங்கை அரசாங்கம் இனி வருங்காலங்களில் உலகளாவிய ரீதியில் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும் காலமும் வெகுதொலைவில் இல்லை. காரணம் யுத்த வெற்றிக்கு பின்னணியில் செயற்பட்ட நாடுகள் தங்கள் வாய்களை திறக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு பதிலளிக்கும் கட்டாயமும் இலங்கைக்கு உண்டு. யுத்தத்தினை சுலபமாக மாற்று வழியில் கையாளத் தெரிந்த இலங்கைக்கு ஜி.எஸ்.பி யையோ, மனித உரிமைகளுக்கான நிபுணர் குழுவையோ சரியாக கையாளத் தெரியாமல் போனது எவ்வாறு? சர்வதேச அமைப்புக்கள் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளைகள் அல்ல அவர்களுக்கு ஆதாரமும் வேண்டும் என்பதை இலங்கை நன்றாகவே உணர்ந்துள்ளது.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் சர்சையை உருவாக்கியுள்ளது. அவரின் விஜயத்தின் பூகோள அரசியலை தொடர்ந்து ஆசியப் பிராந்திய வல்லரசுகள் இரண்டினதும் பிடிக்குள் இலங்கை தனது எதிர்காலத்தை தொலைத்து விடப்போகிறது என்ற கவலை அதிகமாக தென்னிலங்கை மக்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.

சீனாவுக்கு இணையாக வர்த்தக பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த முனைவது சீனாவின் தொழிலாளர்களை போல இந்தியாவின் தொழிலாளர்களையும் இலங்கைக்குள் திறந்துவிடும் வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற அச்சம் உருவெடுக்கிறது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா சிந்தித்து செயல்படும் என எதிர்பார்த்தோம் ஆனால் நடந்தது தலைமாறு தான். ஆனால் சீனாவுக்கு இணையாக பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கையை தன் பக்கம் இழுக்க இந்தியாவினுடைய கடைசி முயற்சி தான் ஜனாதிபதியின் விஜயம் போல் தென்படுகிறது.

இந்த வலைக்குள் இலங்கை சென்றுவிடக்கூடாது என்ற அவதானிப்பில் சீனா இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஸ இலங்கைக்கு திரும்பிய போது சீனா அரச சபையில் துணைப்பிரதமர் சாங் டிஜிங் அதிக கடன் உதவிகளுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சீனாவின் உதவிகள் தென்னிலங்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் அது தற்போது வடக்கிலும் தனது நிலையை விரிவுபடுத்தி வருகின்றது.இந்த நிலையில் இந்தியா தனது நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றது.இந்தியாவின் உதவிகள் வடக்கையே பிரதான குறியாகக் கொண்டுள்ளது.அதிலும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டவை புகையிரத அபிவிருத்திஇ தொழிற்சாலை நிறுவுதல், விவசாய ஆராய்சி நிலையம் நிறுவுதல் போன்ற பல திட்டங்கள்.

அம்பாந்தோட்டையில் நடைபெறும் சீனாவின் துறைமுகப் பணிகளை அவதானிக்கும் நோக்கத்துடன் அங்கு ஒரு தூதரகத்தை அமைக்கும் நோக்கத்தை இந்தியா கொண்டுள்ளது. ஜனாதிபதி இந்தியா செல்ல அமெரிக்கத் தூதுவர் இரு நாள் வி;ஜயத்தை யாழ்ப்பாணம் மேற்கொண்டுள்ளார். இந்த மூன்று நிகழ்வுகளும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் கருதி மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கை ஆகும்.

அதாவது இந்து சமுத்திரத்தைக் கைப்பற்றப் போகும் பலம் யாருடைய கைகளில் உள்ளது என்பது தான் போட்டியாகிறது.இந்து சமுத்திர அதிகாரத்தில் வெற்றிடம் இருப்பதாகவும் அதை நிரப்ப சீனா முயற்சிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சீனாவுடன் இந்தியா தாக்குப்பிடிக்கும் பலம் உள்ளதா என்பது தான் கேள்வி? சீனாவின் கடற்படை பலம் ஆயுதபலம் மித மிச்சமாகவே இருக்கிறது யாவருக்கும் தெரிந்ததே.


இந்த நாடுகளின் பாதுகாப்பு ஒதுக்கீட்டைப் பார்த்தால் சீனா 61 பில்லியன் டொலர் இந்தியா 25 பில்லியன் டொலர் அமெரிக்கா 607 பில்லியன் டொலர் இந்தத் தரவுகள் வெளிப்படுத்துவது புரிந்திருக்கும். ஆசியப் பிராந்தியத்தில் உள்ள வறிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அதனை மேற்கொள்ள பிராந்திய வல்லரசுகள் தமக்குள் பனிப்போரை ஆரம்பித்துள்ளன.இதிலும் சீனா முந்தி விட்டது.சார்க் நாடுகளுடன் பர்மாவுடன் சீனா தன்கான சுற்றுவளையத்தை உருவாக்கி விட்டது.இந்த நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.

ஆனாலும் தலைமன்னார் பகுதி ஊடாக இந்தியா வரக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது. அமெரிக்கா ஈரான் மீது கடுமையான தடைகளை ஏற்படுத்த வேண்டும் என அனைத்துலக சமூகத்தின் ஆதரவைத்திரட்டிக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை ரஸ்யாவும் சீனாவும் எதிர்க்கின்றன.

ரஸ்யாவின் இந்த நகர்வுக்குப் பின்னாலும் கொரியாவின் வளைகுடாவில் தோற்றம் பெற்றுள்ள நடவடிக்கைகளுக்கு பின்னால் சீனா உள்ளதாக நம்பப்படுகிறது. சீனாவை முடக்கவே அமெரிக்கா தனது காய்களை நகர்த்தி வருகிறது.

இவ்வாறான ஒரு சிக்கலுக்குள் தான் இலங்கை தன்னைத் தொலைத்து விட்டு திகைக்கப் போகிறது என வெளிப்படையாகவே தெரியவருகிறது.ஏனென்றால் இறுதியாக நடைபெற்ற 14வது மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் மேற் சொல்லப்பட்டவைக்கு சார்பாகவே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அதிக ஆட்டம் காணப்போவது தென்னிலங்கை தான்.

எனக்கு தமிழ் தந்த பாடம், “உப்புத் திண்டவன் தண்ணி குடிக்கத்தான் வேணும்”.


வியாபாரம் என்று ஆரம்பித்ததோ அன்றிலிருந்து தொடங்கிய உறவு.. முத்தையும் யானைத் தந்தத்தையும் கொடுத்து மட்பாண்டமும் பட்டுத் துணியும் வாங்கினோம்.

7ம் ஆண்டு 8ம்ஆண்டில் கட்டாயம் நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். நினைவிருக்கின்றதா?…
இலங்கையிலிருந்து சீனாவிற்கான ஏற்றுமதி கடந்த மூன்று வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு 37 மில்லியன் டொலராக இருந்த ஏற்றுமதி 2009 ஆம் ஆண்டு 70 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்ட காலப்பகுதியில் கூட சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளது. ஆனால் 2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. 2007-2009 ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சீனாவுக்கான ஏற்றுமதி கட்டமைப்பில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் ஏற்றுமதிக்கான பட்டியலில் மேலும் பல பொருட்கள் சேர்க்கப்பட்டது.

சீனாவின் நுகர்வுச் சந்தையை இலக்காகக் கொண்டு புதிய ஏற்றுமதிப் பொருட்களை அறிமுகப்படுத்துவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட விளம்பர நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டது.முன்னர் சீனாவிற்கு மூலப் பொருட்களே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

மொத்த ஏற்றுமதியில் 40 வீதமானவை மூலப் பொருட்களாகவே காணப்பட்டன. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விளம்பர நடவடிக்கைகள் மூலம் தேயிலை இறப்பர் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் ஆபரணக் கற்கள்இமீன் உற்பத்திகள் நகைகள் போன்றவற்றை நோக்கி சீனாவுக்கான ஏற்றுமதி திரும்பியுள்ளது.



தமது உற்பத்திப் பொருட்களை சீனாவில் விளம்பரப்படுத்துவதற்காக இலங்கை வர்த்தக மற்றும் அபிவிருத்திக்கான கொள்கை வகுப்பாளர்கள் பீஜிங்கில் உள்ள தூதரகத்துடன் சேர்ந்து சீனா முழுவதும் தெரிவு செய்த முக்கிய இடங்களில் வர்த்தக கண்காட்சிகளை நடத்தினர்;. சீனா வர்த்தக ஆதரவு அமைப்புக்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய இலங்கைத் தூதரகம் அவர்களுடன் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டது.அவற்றின் மூலம் சீன வர்த்தகக் கண்காட்சிகளில் இலங்கைப் பொருட்களுக்கு இலவசமான காட்சி அறையை மிகக் குறைந்த கட்டணத்தில் பெற முடிந்தது.

இத்தகைய நடவடிக்கைகளை அடுத்து கடந்த மூன்று வருட காலத்தில் சீனாவில் நடைபெற்ற ஆகக் கூடுதலாக 52 வர்த்தகக் கண்காட்சிகளில் இலங்கையின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றில் 25 கண்காட்சிகள் கடந்த ஆண்டில் மட்டும் நடத்தப்பட்டன. தமது வருடாந்த குன்மிங் வர்த்தகக் கண்காட்சியுடன் இணைந்து இந்த வர்த்தகக் கண்காட்சியையும் நடத்தலாம் என்று சீனா வர்த்தகத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.



நடுத்தர வருமானம் கொண்ட சீன மக்களின் வருவாய் அதிகரித்திருக்கும் நிலையில் இலங்கைத் தூதரகம் ஆபரணக்கற்களின் விற்பனையை அங்கு முன்னகர்த்தி இருப்பது பெரும் பயனைத் தந்துள்ளது. இதன் மூலம் 2006 ஆம் ஆண்டில் 32ஆவது இடத்தில் இருந்த சீனாவிற்கான இலங்கையின் ஆபரணக் கல் ஏற்றுமதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 19 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

ஆகக் கூடுதலாக 20 இலங்கையின் ஆபரணக் கல் நிறுவனங்கள் பீஜிங் கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தன. அதே சமயம் சீனப் பொருட்களுக்கான இறக்குமதித் தேவையும் காணப்படுகிறது. அதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக சமநிலை காணப்படவில்லை. சீன இறக்குமதியானது பெருமளவு முதலீட்டுப் பொருட்களாகவே காணப்படுகிறது. உழவு இயந்திரங்கள் வாகன உதிரிப் பாகங்கள் இயந்திங்கள் வேதியல் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் சீனப் பொருட்களுக்கு சந்தையில் அதிகளவு கிராக்கி; காணப்படுகிறது. இதன் மூலம் மறைமுகமான நன்மையை இலங்கை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிரணியின் பிரதான வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 175 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். இருவருக்கும் இடையில் 18 இலட்சத்து 42 ஆயிரத்து 749 வாக்குகள் வேறுபடுகிறது. பெரு வெற்றியை இந்த வேறுபட்ட வாக்குகள் தான் பறைசாற்றுகிறது. 22 தேர்தல் மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷ 16 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா ஏனைய 06 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.



தேர்தல் முடிவு வெளியான நிமிடத்திலிருந்து இலங்கை அரசியலில் பெரு வீச்சான அதிர்வுகளுடன் புயலும் வீசத்தொடங்கி விட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த கட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் நகர்வுகள் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் தலைவிதி எவ்வாறு அமையப் போகிறது? என்பது குறித்து வினாக்கள் எழத் தொடங்கி விட்டன. எல்லோருமே விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் சிறுபான்மை இனமே இல்லை என்றார். ஆனால் தேர்தல் முடிவுகள் இந்த நாடு பெரும்பான்மை இனம், தமிழர் சிறுபான்மை இனம் என பிரிந்து கிடப்பதைத் தெளிவாக விளக்குகிறது. அதே வேளை தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் போரின் முடிவுடன் தகர்ந்து போய் விடவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் என இனம் காட்டிக் கொள்வோர் அரசாங்கத்தின் சார்பாக சரியான முறையில் அபிவிருத்தி உட்பட அனைத்து விடயங்களிலும் சேவையாற்றத் தவறியதன் விளைவாகவே மக்கள் இம் முடிவை எடுத்தனர்.


தமிழ் பேசும் மக்களின் இம்முடிவு குறித்து அவர்கள் மீது எவரும் பகைமை பாராட்டுவதிலோ அல்லது குற்றம் காண்பதிலோ அர்த்தம் இல்லை. பெரும்பான்மை இனம் தங்களது உள்ளக் கிடக்கைகளைத் தெரிவிக்க எந்தளவு உரிமை இருக்கிறதோ, அதேயளவு உரிமை தமிழ் பேசும் மக்களுக்கும் உண்டு. அந்த வகையில் ஜனநாயக ரீதியாக தமது முடிவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் தமிழ் பேசும் வேட்பாளர்களுக்குத் தமது வாக்குகளை அள்ளிக் கொட்டவில்லை. இன ரீதியாகவும் செயற்படவில்லை. நாடு பிளவுபட வேண்டும் என கோரவும் இல்லை. பெரும்பான்மை இன வேட்பாளர்களுக்குத்தான் தமது வாக்குகளை அளித்துள்ளனர். அந்த வகையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உணர்வுகளை மதித்தாகவே வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எந்த வேட்பாளருக்குக் கூடுதலான ஆதரவை வழங்கினார்கள் என்பது பிரச்சினையல்ல. சுமார் 30 வருட கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து தோன்றியிருக்கும் சூழ்நிலையில் ஜனநாயகச் செயன்முறைகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டியுள்ளமை உற்சாகம் தருவதாக உள்ளது. தென்னிலங்கையின் அரசியல் கட்சிகளினால் ஜனாதிபதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதில் அக்கறை காட்டியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொடரும் பதவிக் காலத்தில் தமிழ் பேசும் மக்கள் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்திய உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை இன மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமையால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைக்கான தீர்வினை முன்னெடுப்பதற்கு தடைகள் இருப்பதாகக் கருத முடியாது. போரினை முடிவுக்கு கொண்டு வந்தது போல் இன விவகாரத்திற்கான தீர்வு தனது ஆட்சிக் காலத்திலே காணப்படும் என்று ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்ததை இங்கு குறிப்பிடுகின்றேன்.


தொடரும் ஆட்சிக்காலத்தில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற வேண்டும். தூக்கியெறியப்படக் கூடாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

வழமையான தேர்தல்களை விட இம்முறை சற்று வித்தியாசம். தமிழ்க்கூட்டமைப்பின் நேரடி ஆதரவுடன் தமிழர்கள் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் தரப்பாகவுள்ளனர். எனவே இருபெரும் வேட்பாளர்களின் வாக்குத் திரட்டும் நடவடிக்கைகளும் தமிழர் பிரதேசங்கள் நோக்கி நகர்ந்திருக்கின்றது. தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கையுடன் ஆங்காங்கே சூட்டுச்சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதுவரை மூவர் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். 26ம் திகதி வாக்களிக்க முடியுமா என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் பார்வையாளர்களா? பங்காளிகளா?


கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இது வரை மூன்று பாரிய அளவிலான வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பிரதேச சபை முன்னாள் தலைவரின் கடை 18.01.2010 நள்ளிரவு எரிக்கப்பட்டது, பிரச்சாரம் சென்று விட்டு வீடு திரும்பியோர் மீது துப்பாக்கிச் சூடு)

இதைவிட எத்தனையோ குழறுபடிகள் நடந்துள்ளது, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் கண்காணிப்பு அவதானிப்பாளரிடம் இருந்து பெற்றவை சில……

• சில இடங்களில் பதிவு செய்யப்படாத கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரம் போஸ்டர்கள் கட்அவுட்களை அகற்றுமாறு கோரியும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

• கட்சிக் கூட்டங்கள்;; இடம் பெறும் போது தாக்குதல்கள் இடம் பெறுவதுண்டு. நேற்று அட்டாளைச்சேனையில் 500 மீற்றருக்குள் இரண்டு கட்சிகளின் கூட்டம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக பொலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே பிரச்சாரங்கள் இடம் பெறுகின்றன. மக்களுடைய ஆர்வத்தைக் கண்டு கொள்ள முடியவில்லை.

• நாடு முழுவதும் இன்றுவரை 501 முறைபாடுகள் பதிவாகியுள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நீதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துமாறு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நீதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துமாறு ஆயர் மன்றமும் கோரிக்கை விடுத்துள்ளது.

• நேற்று(20.01.2010) முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் தேர்தல் முறைப்பாடு பதிவாகியுள்ளது. தேர்தல் கூட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

• தேர்தலை இடையூறு இல்லாமல் நடாத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என பஃவ்ரல் (PAFFRAL)அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

• இது வரை 124 வாகனங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது இடம் பெற்ற தாக்குதலில் சேதமாக்கப்பட்டுள்ளது. 83பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 4 நாட்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றன. அட்டகாசமா? அடக்கமா? பொறுத்திருப்போம்.

Followers

About this blog

Labels