பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நாட்டிலுள்ள சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியளவில் உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்து நிறைவேற்றவுள்ளது. மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடத்தும் வகையில் இந்தத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்.

ஆனால் புதிய முறைப்படி தேர்தல் நடத்தப்போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையையே தேர்தல் திருத்தச் சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இருந்தாலும் புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்கு காலம் தேவை. வட்டார எல்லைகளை மீள் நிர்மாணம் செய்யவேண்டும் அத்துடன் அது தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளது சில பிரதேச சபைகள். இவற்றைத் தீர்த்து தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆவது வேண்டும்.

மாறாக அரசாங்கமோ எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் அதிகரிப்பதற்கு தயாராக இல்லை. தேர்தலை எப்படியாவது ஏப்ரல் மாத இறுதியிலாவது முடித்துவிடவேண்டும் என அரசு ஒற்றைக்காலில் நிற்கிறது. மார்ச் மாதமளவில் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் ஆனது அரச தரப்புக்கும் சரி ஐக்கிய Nதிய கட்சிக்கும் சரி ஒரு பலப்பரீட்சையாகவே அமையப்போகிறது. ஜனாதிபதியைப் பொறுத்தளவில் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்பதே நோக்கு. அதைவிட முக்கிய தேவைப்பாடாகவும் உள்ளது ஏனென்றால் அண்மைய நாட்களில் தெற்கில் உள்ள உள்ளுராட்சிச் சபைகளின் வரவுசெலவுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது. இது தான் முக்கிய பிரச்சினை. இதுவரை ஐந்து உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்ற ஆளும்கட்சி மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. இதுவே ஆளும்கட்சிக்குரிய முதல் வேட்டாக அமைகிறது.

அடுத்தது விலைவாசி உயர்வுக்கு அளவுகணக்கே இல்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றுவோம் என்று கூறிக்கொண்டு சரித்திரத்திலே நடந்திராதவாறு தேங்காயை இறக்குமதி செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டுவிட்டோம். முட்டை கூட இறக்குமதி செய்யும் நிலை வந்துவிட்டது. மறுபக்கத்தில் வெங்காயத் தட்டுப்பாடு தலையைப் பிய்க்கிறது. இந்த நிலையில் அரசு திணறிக்கொண்டிருக்கிறது இது எதிர்த்தரப்புக்கு சாதகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் பொதுமக்கள் தான் நசிபடுகிறார்கள்.

இந்தப் போக்கு தொடருமானால் மக்கள் மனதில் அரசுக்கு எதிரான கருத்து உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கான தாக்கத்தை தேர்தலில் பொறுத்திருந்து பார்க்கலாம். உள்ளுரிலேயே இந்த நெருக்கடிகளை அரசு சந்திக்கிறதென்றால் சர்வதேசளவிலும் இதற்கு சமமான நெருக்கடிகள் உள்ளன.

பிரித்தானியாவுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு உரையாற்ற முடியாத நிலையில் நாடு திரும்பியிருந்தார். இது மிகப் பெரிய இராஜதந்திரத் தோல்வியாகும். அத்துடன் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கிவிட்டன. எத்தனையோ பிரச்சினைகள் மத்தியில் இதை எப்படி சமாளிக்கப்போகிறதோ தெரியவில்லை. சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு எதையும் செய்யமுடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தன் பிடியில் இருந்து விலகுவதாக இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதே ஐ.நா குழுவினது இலக்கு என்கிறது அரசு. ஆனால் அந்தச் சந்திப்பு உள்நாட்டிலா அல்லது வெளிநாட்டிலா என்பது அறிவிக்கப்படவில்லை. உள்நாட்டில் சந்திப்பு இடம்பெற்றால் சரத்பொன்சேகாவை அவர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வேண்டுகோளாகும். இது ஆபத்து என்பது அரசுக்கு தெரியும். அதேவேளை ஐ.நா நிபுணர் குழு இலங்கைவர அனுமதிப்பதோ நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதோ ஆபத்தானது என்றும் அதை அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர்கள் இருவர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆராய்ந்து பார்க்கப் போனால் அரசு எடுத்த முடிவை அரசுக்குள் இருப்போர் எதிர்ப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. எவ்வாறாயினும் பெரிய அரசியல் ஆதாயத்தைப் பெற முடியாது. இதுவும் ஆளும்கட்சிக்கு ஒரு தலையிடியாக அமையலாம். ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சி இப்போது புதிய உற்சாகத்தில் உள்ளது. தங்களுக்குள் நிலவிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்பதைக் காட்ட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் எந்தளவு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும்.

இவ்வாறான போக்கு அரசை ஒரு விதத்தில் மிரளவைக்கிறது. தொடர் ஆட்சி என்று கண்ட கனவு போட்ட கணக்கெல்லாம் மறுஆய்வு செய்யும் நிலைக்கு வந்து விட்டது போல். இதற்கு வழி கோலுவது கடந்த கால நிகழ்வுகள் தான். எவ்வளவு தான் வெற்றி பெற்றாலும் மக்களிடத்தில் ஏற்படக்கூடிய வெறுப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. அது எப்போது சுனாமி போல் மேலெழும் என்பது யாருக்கும் தெரியாது. உள்ளுராட்சித் தேர்தலானது இரு தரப்புக்கும் இடையில் பெரிய சவாலாகவுள்ளது.

மீண்டும் வெற்றியை தன்பக்கம் காட்டுவது அரசின் நிலை. எப்படியாவது தலை நிமிரவேண்டும் என்பது ஐ.தே.கவின் நிலை. விரைவாகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசாங்கம் முனைவதில் இருந்து தெரிகிறது வெற்றி மீது அரசு கொண்டுள்ள நம்பிக்கை. துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் என்பது பழமொழி. கணிப்பு சரியா? பிழையா? என்பதை தேர்தல் வெளிப்படுத்தும் அத்துடன் தேர்தல் முடிவு அரசின் செல்வாக்குப் போக்கையும் தீர்மானிக்கும்.

எத்தனை தடவைகள் கூக்குரல்

ஒழிப்போம்!! தடுப்போம்!! விழிப்போம்!!

நடந்திச்சா?ஓரளாவாவது முடிஞ்சுதா?

இல்லையே!!காரணம் தெரியல….

அதை முறியடிக்கவே முடியாதா?

அப்படியென்னா அடுத்த சந்ததியும்

அனுபவிக்க வேணுமா?என்ன அநியாயம்

ஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்??

ஒவ்வொரு முயற்சியும் தோல்வி தானே!

ஆட்டிப்படைக்கும் வஞ்ஞானத்தாலும் முடியாதா??

பெரிய பெரிய அமைப்புக்கள் என்னத்துக்கு காசா கொட்டுகினம்??

2009ல் பாதிக்கப்பட்டோர் அரை மில்லியன் அமெரிக்காவில

இப்ப இலங்கையிலயுமாம் அதில யாழ்ப்பாணத்திலயும் ஒட்டிக்கிச்சு

வதந்தியை விட வேகமாகப் பரவுது

காலம் மாறிப்போச்சோ கலாச்சாரம் மாறிப்போச்சோ தெரியல

என்ன தான் இருந்தாலும் எய்ட்ஸ் நோயாளியை ஒதுக்காமல்

அவர்களுக்காகப் பாடுபடுங்கள்

எய்ட்ஸ் தினத்தன்று ஏதாவது அவர்களுக்கு உதவுங்கள்.

வானம் தொடும் காலம் வரை நிம்மதி
என்றிருந்தோம்
எத்தனை கனவுகளை கருவறையில் அல்ல
இதயவறையில் சுமந்தோம்

நாங்களும் ஈசலும் உறவுகள் - காரணம்
இறக்க இறக்க பிறப்போம்
என்றும் தளைப்போம் என்ற பெருமிதம்

எங்கள் வீட்டில் விளைந்து நின்ற மரத்தில்
ஏராளம் காய்களடா..
அப்பவும் முத்தத்தில் இருந்த பாட்டி சொன்னாள்
நாவூறுபட்டு உதிரப் போகுது எண்டு..

கனவில கூட கடவுள் காட்டியதில்லையே!
இரவை விழுங்கிவிட்டு செங்கதிரவன் வரமுந்தி
அயல் வீட்டான் எங்கள் வீட்டு மரத்திலேயே
எறிந்தான் எதையோ

பிஞ்சும்..
பூவும்..
காயும்..
மரமும்..
வேரையும் விடவில்லை... - எல்லாம்

சிவந்த மண்ணில் சீவனற்றுக் கிடக்கிறது.
மூதாதையர் செய்த பாவமோ?
விழுந்தவையை அள்ளிப் பொறுக்கினோம்!
நாதியற்ற நாங்கள்!

கொடியோடு மரம் சாய்ந்ததை பாட்டி
விடிய முந்தியே நினைவூட்டினாள்
பாட்டி கிடந்து புலம்புறாள்
புது மரம் வைத்து தண்ணி கொஞ்சம்
விடு பிள்ளை என்று..
மறுப்பார் யாரும் இல்லை
ஏற்பாரும் யாரும் இல்லை.

நேற்று உலக உணவுகள் தினம் கொண்டாடப்பட்டது. இன்று வறுமை ஒமிப்புக்கான சர்வதேச தினமாகும். இரண்டிற்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறதென்றால் உணவும் வறுமையும் அடுத்தடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. அதில் தான் அந்த இரு நாட்களின் பொருத்தப்பாடும் அதன் கருத்தமைவும் வெளிப்படுகிறது. அனைவருக்கும் உணவுத் தேவை பூர்த்தி செய்கையிலே தான் வறுமை என்பது தலை தூக்குகிறது. அதாவது அடிப்படை வசதியான உணவுக்காக அடுத்தவரிடமோ அல்லது அயல் நாட்டிடமோ கையேந்தும் நிலை ஏற்படும் போதே அதை வறுமை என வரையறுக்கிறது.


ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனம் அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதையும் நேற்றைய உணவுகள் தினம் குறிக்கிறது. உலக உணவு தினம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப் பொருளில் கொண்டாடப்படுகிறது. நேற்றைய உணவுகள் தினத்துக்கான தொனிப்பொருள் - பட்டினிக்கு எதிராக ஐக்கியப்பட்ட நிலைப்பாட்டை எடுங்கள். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1992ம் ஆண்டிலேயே ஒக்டோபர் 17ம் திகதியை வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக பிரகடனம் செய்து தீர்மானத்தை நிறைவேற்றியது. இன்றைய வறுமை ஒமிப்பு தினத்துக்கான தொனிப் பொருள் - வறுமையில் இருந்து கண்ணியமான வேலைக்கு இடைவெளியை நிரப்புதல் ஆகும்.

உலக நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டால் உணவுப் பற்றாக்குறையினால் 100 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலும் தற்போதைய நிலவரப்படி ஆபிரிக்க நாடுகள் மிக மோசமாகப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. களிமண்ணை உணவாக உண்ணும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் பட்டினியோடு மட்டும் வாடுதல் அல்லாமல் அவர்களைக் கொடிய நோய்களும் பீடித்திருக்கின்றன. இவற்றோடு அவர்களின் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி போன்றன பாதிப்படைகின்றன. அதே வேளை அண்மைய வருடங்களில் உலகில் ஏற்பட்ட உணவுத் தானிய நெருக்கடியும் பொருளாதார மந்த நிலையும் பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களை தொடர்சியாகப் பாதித்துக்கொண்டியிருக்கின்றன.


பட்டினிக்கு சவாலாக மறுபுறம் இயற்கை அனர்த்தங்கள் குறிப்பிட்ட சில நாடுகளைத் தாக்கிய வண்ணம் இருக்கின்றது. இதனாலும் பட்டினி, வறுமை மேலும் அதிகரிக்கின்றது. ஒவ்வொரு வருடமும் மத்திய காலப்பகுதி கணக்கெடுப்பின் படி 17000 குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர். குவைத், மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் பட்டினி ஒழிப்பில் ஆர்வத்துடன் செயற்படுகின்றன. தெற்காசிய வல்லரசான இந்தியாவின் நிலை பட்டினி விடயத்தில் கவலைக்கிடமாகத் தான் உள்ளது. உலகில் பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் அதாவது அரைவாசி எண்ணிக்கையானோர் இந்தியர்களாகவே உள்ளனர்.

பட்டினி ஒழிப்பில் இலங்கை 88 நாடுகளில் 39வது இடத்தில் உள்ளது.

பட்டினி ஒழிப்பிற்கு வல்லரசு மற்றும் தனவந்த நாடுகள் உதவி செய்வதில் பின் நின்றாலோ அல்லது அளித்த உத்தரவாதத்தை மீறினால் அடுத்து வரும் பத்து வருடங்களில் 4கோடி 50லட்சம் சிறுவர்கள் இறக்க நேரிடும் என பிரிட்டிஷ் நிறுவனமான ஒக்ஸ்பாம் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

பட்டினிக்கு எதிராக அரசாங்கங்களும் உணவு முறைமை நிறுவனங்களும் பிராந்தி ரீதியிலான வர்த்தக மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் உலகளாவியரீதியில் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும். பட்டினியில் வாடும் மக்களை காப்பாற்றுவதற்காகவும் உணவு தொடர்பான உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்கும் ஐக்கியப்பட்ட அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.


தேவையான பொருட்கள்

  1. சீரகச்சம்பா அரிசி - 1 கப்
  2. பாசிப்பருப்பு - 1/2 கப்
  3. மிளகு - சிறிதளவு
  4. சீரகம் - 1 டீஸ்பூன்
  5. மிளகு, சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
  6. இஞ்சி - 1 டீஸ்பூன்
  7. கருவேப்பிலை - சிறிதளவு
  8. முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
  9. நெய் - 4 டேபிள் ஸ்பூன்
  10. தண்ணீர் - 4 கப்
  11. உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :

  • ரைஸ் குக்கரில் 2 கப் தண்ணீரை ஊற்றி ON பண்ணவும்.
  • பிறிதான அடுப்பில் தாச்சியை வைத்து பாசிப்பருப்பை மிதமான சூட்டில் வாசனை வரும்வரை வறுத்து குக்கரில் கொதிக்கும் தண்ணீரில் போடவும்.
  • அதே தாச்சியில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • அதனுடன் இஞ்சி, மிளகு, சீரகம், சேர்த்து நெய்யில் நன்கு பொரித்து எடுத்து குக்கரில் கொதிக்கும் பாசிப்பயறுடன் சேர்த்து கிளறவும்.
  • சீரகச் சம்பா அரிசியை நன்கு களைந்து 2 கப் தண்ணீருடன் குக்கரில் சேர்க்கவும்.
  • கருவேப்பிலை, உப்பு, மிளகு, சீரகம் என்பவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • நமக்கு ஐந்து நிமிட வேலை தான். மீதியை றைஸ் குக்கர் பார்த்துக் கொள்ளும்.
  • Keep warm mode வந்தவுடன் குக்கரை OFF செய்து பொங்கலை வேறாக்கி ஆறவிட்டு பரிமாறவும்.
  • நீங்களும் முயற்சி செய்து பார்த்து ருசியைப் பகிருங்கள்.

பி.கு : றைஸ் குக்கர் இல்லாதவன் என்ன செய்யுறது எண்டு அதிக பிரசங்கித் தனமா கேட்கக் கூடாது.

இலங்கையின் அரசியல் வியூகங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்ற வேளை தற்போது இலங்கை சீனாவுடனான பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்த உடன்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் அவருடன் இராணுவ மற்றும் முப்படைத் தளபதிகளும் சீனாவிற்கு கடந்த வாரம் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் போதே இராணுவ ஒத்துழைப்புக்களை பரிமாறி வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்திய இராணுவ தளபதி இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய இலங்கை நாடுகளின் படைகளுக்கு இடையில் இராணுவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு நடந்து சில நாட்களின் பின்னரே சீனாவுடன் இது போன்ற இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது இலங்கை.

தெற்காசியாவில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. அது போராக வெடிக்காத நிலையில் பொருளாதாரப் போட்டியாக நடந்து கொண்டிருக்கிறது.அதிக முதலீடுகள், ஏட்டிக்குப் போட்டியான உதவிகள் இராணுவ தந்திரங்கள் போன்றன பனிப்போரின் உச்சக்கட்டத்தினை அடைய வைக்கின்றது. இந்த போட்டிக்குள் தான் இலங்கை சரியாக மாட்டியிருக்கின்றது. இலங்கை சீனாவை பகைத்துக் கொள்ளாமலும் இந்தியாவை கை நழுவ விடாமலும் இரண்டு கைகளில் பிடித்த வண்ணம் தனது யுக்திகளை நகர்த்துகின்றது.

இந்தியாவுடன் சுமுகமான உறவை பேணத்தவறினால் கடந்த காலம் படிப்பித்த பாடம் சொல்லும் மீதியை, அதேவேளை சீனாவை உதறித்தள்ளி விட முடியாது. காரணம் கேட்டதை விட கேட்காததையும் வாரிக் கொடுக்கிறது. மேற்குலக நாடுகள் இலங்கையை கைவிட்ட நிலையில் ஜப்பானும் தனது உதவிகளை சரி பாதி நிறுத்திவிட்டது. இவற்றுக்கு எல்லாம் மத்தியில் போர் என்ற சாட்டு முடிவடைந்த நிலையில் இலங்கைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய தேவைப்பாடு உள்ளது. இதில் முக்கியமாக தென் பகுதி அபிவிருத்தி சீனாவின் கையில் இருக்கின்றது.

சீனா தான் கடந்த வருடம் இலங்கைக்கு அதிக நிதி வழங்கிய நாடுகளின் பட்டியலில் முன் நிற்கின்றது. இப்படி வாரி வழங்குவாரை எப்படித்தான் கைவிடும் இலங்கை. இதனால் தான் இந்தியாவை விட ஒரு முழம் கூட்டி இலங்கை சீனாவுக்கு மதிப்பளிக்கின்றது. இவ்வாறான இலங்கையின் விளையாட்டை இந்தியா விரும்பாது. அது இலங்கைக்கு தெரியும். மறுபுறம் இலங்கையின் காய்நகர்த்தல்களை இந்தியாவும் அறியும். இருந்தாலும் நடவடிக்கைகளைப் பார்க்கையில் இலங்கை சீனாவிடம் தான் உண்மையான நண்பனாக இருக்க ஆசைப்படுகின்றது போல். காரணம் புலிகளுடன் போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் சீனா செய்த உதவிகளை என்றுமே மறக்கத் தயாரில்லை இலங்கை.

யுத்தத்தின் போது இலங்கை இந்தியாவிடம் இருந்து நிறைய உதவிகளை எதிர்பார்த்தன. ஆனால் கிடைத்தது திருப்தியளிக்கவில்லை. அதாவது போரின் போது இராணுவ உதவிகளை வழங்கவில்லை என்பது தான் குறை. சீனா விடயத்தில் இறுதி முடிவு இதுதான். ஆயுதங்கள், வெடி பொருட்கள், தொழில்நுட்ப உதவிகள், இராணுவ தந்திரோபாயங்கள் போன்றவற்றில் சீனாவின் பிடியில் தான் இலங்கை. பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய தொழில்நுட்ப உதவிகளை சீனா வழங்கவுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளால் இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு பலப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

என்ன தான் தலை தெறித்தாலும், இலங்கை அரசு பாதுகாப்பை பலப்படுத்துவதிலும், புதிய இராணுவ யுத்திகளை பெற்றுக் கொள்வதிலும் முனைப்பாக உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. இதற்கான பின்னணி தெரியாத நிலையில் அனைவரினதும் மனதில் எழும் ஒரே கேள்வி, இலங்கையின் இந்த இரட்டைப்போக்கு தன்மை எவ்வளவு காலம் நீடிக்கப் போகின்றது என்பதும், மற்றும் இரட்டை பாசத்தால் இலங்கையை வலுப்படுத்தும் அளவிற்கு ஏதாவது நாடு குதித்து விடுமோ என்ற பயம்.

மனிதர்களில் குழந்தைகளை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இதற்கு விதி விலக்கு இல்லை என்றே சொல்லலாம். யாராவது குழந்தைகளை வீதியில் தூக்கிச் சென்றால், அல்லது பஸ்ஸில் எங்களைப் பார்த்துச் சிரித்தால் உடனே எங்களை மறந்து குழந்தையிடம் கதை கேட்போம், கிள்ளுவோம், தூக்குவதற்கு எத்தணிப்போம். இது சாதாரண மனித இயல்பு. காரணம் குழந்தைகளைக் கண்டவுடன் எங்கள் மனம் இயல்பாகவே ரசிக்கத் தொடங்குகின்றது. அப்படி, எந்த ஜீவன்களுடனும் ஒப்பிட முடியாத ஒப்பற்ற செல்வங்கள் தான் குழந்தைகள்.

நம்மவர்களிடையே சில தம்பதியர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தவம் கிடப்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஏறாத கோயில்கள் கிடையாது. பிடிக்காத விரதங்கள் கிடையாது. பார்க்காத வைத்தியர்கள் கிடையாது. எத்தனையோ குடும்பங்களில் குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து வரை போயிருக்கிறார்கள்.

ஆனால் இந்த காலத்தில் எல்லாம் நவீன மயமாகி விட்டது. பெண் கருத்தருக்க முடியாவிட்டால், பரிசோதனைக்குழாய்.. அதுவும் இல்லாவிட்;டால் குளோனிங். எனவே பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் பாசம் அறவே அற்றுப் போகின்றது. அதுவும் மேலை நாடுகளில், தங்களின் வேலைக்கணதியாலும், சோம்பேறித்தனத்தாலும் குழந்தைகளை இயந்திரம் போல் பாவிக்கின்றார்கள்.

அவ்வளவு ஏன்? நம்மவர்களிடையே கூட சிலர் குழந்தைகளை பெல்ட் போட்டு காவும் கலாசாரம் ஆரம்பித்திருக்கின்றது. ஏதோ காய்கறி சாமான்களை தூக்குவது போல் தூக்குகிறார்கள். பிற்காலத்தில் பிள்ளைக்கு அம்மா, அப்பா என்ற பாசம் எவ்வாறு வரும்?

அன்று பாரதி, கிளியே! செல்வமே! என அடைமொழிகள் வைத்துப் பாடிய குழந்தைகள் இன்று பெற்றோர்களுக்கே பாரமாகிவிட்டது போல் தெரிகின்றது. கீழுள்ள சில மேலை நாட்டு உதாரணங்களைப் பாருங்கள்.







கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்ந்து வருகின்றது. இந்த விசாரணை முன் ராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், முக்கிய நபர்கள், பிரஜைகள் என பல தரப்புக்கள் சாட்சியம் அளித்துவருகின்றன. இருந்தாலும் இந்த ஆணைக்குழு தொடர்பாக உள்ளுரிலும் சர்வதேசத்திலும் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றது. இருந்தாலும் சாட்சியம் அளிப்போர் சொல்லும் கருத்துக்கள், முன்வைக்கும் சாட்சியங்கள் வித்தியாசமாக இருப்பதுடன் சிந்தனைகளின் கோணத்தை தூண்டி விடுகின்றது.

பல ஆண்டுகளாக இலங்கையை ஆட்டிவித்து புரையோடிய இனப்பிரச்சினைக்கு காரணம் என்ன? இவ்வாறானதோர் பிளவு நிலை ஏன் ஏற்பட்டது? தொடர்பான கருத்துக்கள், ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சமதான ஒப்பந்தங்கள் வெற்றியளிக்காமை, புலிகள் தோற்கடிக்கப்பட்டும் இன்றுவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படாமை, இனப்பிரச்சினைக்கு தீர்வுகளை காலம் தாழ்த்துவது போன்ற பல உண்மைகள் முன்வைக்கப்படுகின்றது.

ஆணைக்குழுவின் முன் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் மிகவும் முக்கியமானது பயங்கரவாதம் இலங்கையில் எவ்வாறு தலைதூக்கியது என்பது தான்.இந்த நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கியவர்கள் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்கள் தான் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியாவுக்கான தூதுவராக பணியாற்றியவருமான மங்கள முனசிங்க தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக அவர்கள் அமைதிவழியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய போது சில சிங்கள பௌத்த செயற்பாட்டாளர்கள் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். 1956ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தின் காரணமாகத் தமிழ் மக்களின் எதிர்காலம் பொருளாதாரம் கலாச்சாரம் போன்றன சிதைவடையத் தொடங்கியன. அன்றிலிருந்து இன்று வரை சிதைவடைந்த நிலையில் தடயங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்கா செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆனால் இதற்கெதிராக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கண்டிக்கு பாதயாத்திரை சென்றார்.
இந்த எதிர்ப்புக்கள தான் அரசியலை சிதறடித்தன காலப்போக்கில்.2002ம் ஆண்டில் கையெழுத்திட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் அதில் ஒன்றும் நடைமுறைப்படுத்தவில்லை. 1983ம் ஆண்டு நடைபெற்றது ஒரு இனவன்முறை அல்ல.அது அரசியலின் பின்புலத்தில் நிகழ்ந்த வன்முறை. அதற்குப் பின்னர் தான் தமிழ் இளைஞர்கள் சிந்தித்தார்கள் இனப்பிரச்சினையை அடியோடு தகர்க்க சரியான வழி வன்முறை என்று.

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் இந் நாட்டில் தமிழ் மக்களுக்கு அனுபவித்து வந்த சலுகைகள் உரிமைகள் இல்லாமல் ஆக்கப்பட்டது சுதந்திரத்துக்குப் பின்னர் தான். அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகவும் சர்வதேசத்திற்கு காட்ட முயற்சித்தும் இருக்கிறார்கள்.யுத்தம் முடிவடைந்து 15 மாதங்கள் கடந்தும் இன்று வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை.தமிழ் மக்கள் மீதான இனப்பாகுபாடு அடக்குமுறைகள் இவற்றோடு விட்டுவிடாமல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளும் அபகரிக்கப்படுகிறது.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அதற்கான தீர்வு காணப்படாமல் முன்னைய ஒப்பந்தங்கள், அறிக்கைகள் போலவே கிடங்கில் போடப்படுமானால் இலங்கை பல விதமான விமர்சனத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும்.இப்பொழுதும் இந்த நிலைதான் காணப்படுகிறது.

ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்துத் தான் இலங்கையின் எதிர்காலத் திட்டமிடல்கள் அமையுமானால் தமிழருக்கான ஒதுக்கீடுகள்,சலுகைகள்,உரிமைகள் எல்லாமே கேள்விக்குறி தான்.

கேள்விக் குறியிலேயே பிறந்து கேள்விக் குறியிலேயே குடிசை போட்டு இறப்பும் கேட்பார் அற்றுப் போனால்…….வெளிசமூகங்களும் சட்டங்களும் ஏன்?நாங்கள் சிந்திய இரத்தம் , உழைப்பு , இழந்த உயிர்கள் வீணே…வீண்!!!!

பொதுவாகப் பெண்களுக்கு தங்கள் சார்ந்த எந்தப் பொருளாக இருந்தாலும் வாங்கவே துடிப்பார்கள். மனதுக்குப் பிடித்து விட்டால் விலையை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள். இது எனக்கு நல்ல அனுபவம்.

பெண்களில் பல ரகமானவர்கள் இருக்கின்றார்கள். சிலருக்கு நாளுக்கு நாள் உடுப்புக்கேற்றவாறு விதம் விதமான பாதணிகள் போடுவது விருப்பம். சிலர் உடுப்பின் கலருக்கு ஏற்றவாறு நகப்பூச்சுக்கள் மாற்றிக் கொள்வார்கள். அதனைவிட காப்பு, தோடு, மணி மாலைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களையும் விதம் விதமாக வாங்கிச் சேகரித்துக் கொள்வார்கள். நாளுக்கு நாள் வித்தியாசமாக தலையலங்காரம் செய்வார்கள். சாறிகளை டசின் கணக்காக எல்லா நிறங்களிலும் வாங்கி அடுக்கிக் கொள்வார்கள். இவ்வாறு ஒவ்வொரு பெண்களின் ரசனையும் அவரவர்கள் விருப்பப்படி மாறிக் கொள்ளும்.

இதனால் கஷ்டப் படப்போவது பெண்களுடன் கூடவே பயணிக்கும் தந்தை, பின் சகோதரன், பின் காதலன், பின் கணவன். அவர்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான்.

நான் இங்கு குறிப்பிடுவது பெண்களின் வித்தியாசமான ஒரு ரசனை. சிறு வயது முதலே இதனையும் பெண்களையும் பிரிக்க முடியாது. இளம் பெண்களின் நடமாடும் பியூட்டி பார்ளல் அதற்குள் தான் உண்டு. அது தான் கைப்பைகள் (HAND BAGS).










இது பெண்களின் முக்கிய குறியீட்டுப் பொருளாகின்றது. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பொருட்களையும் போலவே சில பெண்கள் விதம் விதமாக இந்த கைப்பைகளைச் சேகரித்துக் கொள்வார்கள்.

மேலே உள்ள படங்களில் காணப்படும் கைப்பைகள் வித்தியாசமான மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இவை பலவர்ணங்களில் கவர்ச்சிகரமாக காணப்படுவதால் பெண்களை இலகுவாக கவர்ந்து விடுகின்றது. இன்று ஒரு நல்ல கைப்பையை வாங்க வேண்டுமெனில் குறைந்தது 500 ரூபாவிற்கு மேல் தேவை. அந்தளவு பணத்தை செலவழித்து வாங்காவிட்டால் கைப்பை எங்களிடம் ஒட்டாது என பலர் நினைத்துக் கொள்வது. முடிவு விற்பனையாளன் வருமானம் எகிறும்.

ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி 25ம் திகதி வரை படிப்பினைகளில் இருந்து பாடம் கற்பதற்கான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

2002ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது தொடக்கம் 2009 மே 18ம் திகதி போர் முடிவுக்கு வந்தது வரையான காலப் பகுதியில் இடம் பெற்ற சம்பவங்கள் குறித்து இந்த விசாரணை ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்து வருகிறது.

இலங்கை இறுதிப்போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் ,போர்க்குற்றங்கள் தொடர்பாகச் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்ட போதே அதை சமாளிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஸ இந்த விசாரணைக் குழுவை நியமித்திருக்கிறார்.இந்தக் குழுவே இறுதிப் போரின் போது போர்க் குற்றங்கள் நடந்துள்ளனவா என்பதை விசாரிக்கும் என இலங்கை அரசு கூறுகிறது.இருந்தாலும் சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில் இந்த விசாரணைக்குழுவின் மீது ஒரு துளி நம்பிக்கை கூட இல்லை. பல நாடுகள் இந்தக் குழு நியமனத்தை வரவேற்றாலும் எந்த ஒரு நாடும் குழுவை நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆணைக்குழு இறுதிப்போரின் போது இடம் பெற்ற போர்க் குற்றங்கள் பற்றி ஆராய தகுதி இருக்கிறதா என்பது தான் சர்வதேசத்தின் கருத்து.

நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. சுதந்திரமான – பக்க சார்பற்ற விசாரணை குழுவாகச் செயற்பட்டு சரியான முறையில் சாட்சியங்களை பதிவு செய்யுமா என்பது முதலாவது சந்தேகம்.

குழுவின் முதலாவது அமர்வின் போது அழைக்கப்பட்ட சாட்சியாக அரச சமாதானச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேர்னாட் குணதிலக்க சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் அரச தரப்பு அதிகாரிகளும் சாட்சியம் அளித்துள்ளனர். மற்றைய தரப்பான புலிகள் தரப்பிலோ தமிழர் தரப்பிலோ சாட்சியமளிக்க யாராவது தெரிவு செய்யப்பட்டுள்ளனரா அல்லது அவர்களை அழைக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

உண்மையான கருத்தை ஆணைக்குழு வெளியிட விரும்பினால் கட்டாயம் இரண்டு தரப்பினதும், கருத்தைக் கேட்க வேண்டும். ஆனால் புலிகள் தரப்பில் சாட்சியமளிக்க எவரும் இல்லை. அரச தரப்பில் சாட்சியமளிக்க அதிக வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது. புலிகள் தரப்பில் சாட்சியமளிக்க கூடியவர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு எங்கென்று தெரியாமல் போய் விட்டனர். அவ்வாறு இருக்கையில் சாட்சியங்கள் அனைத்தும் உண்மைத் தன்மையானவை என எவ்வளவு தூரத்திற்கு நம்புவது? இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதாவது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் சாட்சியம் சொல்ல வந்தால் அவர்கள் மீது பிரயோகிக்க எத்தனிக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாக நிர்ப்பந்த நிலை உருவாகுகையில் சிந்திக்க வேண்டியிருக்கும்.

சமாதானம் முறிந்து போனதற்கான காரணங்களை இந்த விசாரணை ஆணைக்குழு பக்க சார்பின்றி கண்டு பிடிக்க வேண்மாயின் அனைத்து தரப்புக்களினதும் சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

புலிகள் தரப்பாக சாட்சியமளிக்க கூடியவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் நடைபெறும் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக இந்த ஆணைக்குழுவின் அமர்வை வெளிநாடுகளில் நடத்த அரசு தயாராக உள்ளதா? இவ்வாறு செயற்படுவதன் மூலமே இவ் ஆணைக்குழுவின் நம்பகத் தன்மையை முக்கியமாக தமிழ் மக்கள் முன்னிலையில் கட்டியெழுப்ப முடியும்.

ஆணைக்குழுவின் விசாரணை ஒரு தலைப்பட்சமாக இடம்பெற வாய்ப்பு உருவாகின்றது. இதனால் முடிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படாதவையாகவே காணப்படும். பேர்னாட் குணதிலகவை எப்படி ஆணைக்குழு சாட்சியாக அழைத்ததோ… அது போல புலிகள் தரப்பில், தமிழர் தரப்பில் சாட்சியங்களை அழைக்க வேண்டும். அவர்கள் அச்சுறுத்தப்படும் வேளை உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஏற்பாடுகளுடன் அரசு செயற்பட்டால் பல வெளிவராத உண்மைகளை வெளிக் கொண்டுவர முடியும். பாதகமான உண்மைகள் வெளிவந்து விடுமோ என்ற அச்சம் காரணமாகவே அரசு இவற்றை கவனத்தில் கொள்ளவில்லைப் போல்.

இலங்கை அரசு ஒரு பக்கத்தில் இருந்து திரட்டிய சாட்சியங்களைக் கொண்டு தயாரிக்கப் போகும் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே அமையப் போகின்றது. சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமானால் இந்த விசாரணை ஆணைக்குழுவை பக்க சார்பற்ற முறையில் அமைக்க வேண்டும்.

இவ்வாறு இல்லாத எத்தனை சாட்சிகளை அழைத்தாலும் சரி! எத்தனை ஆணைக்குழுவை அமைத்தாலும் சரி! நடுநிலையாகச் செயற்படாது விட்டால் சர்வதேசம் ஒரு போதும் அரசு வெளியிடும் அறிக்கையை ஒரு காலமும் நம்பப் போவதில்லை.

இன்றைய காலப்பகுதிகளில் இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியல்வாதிகள் சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் என்ற போக்கே தொடர்கிறது. இந்த சூழ்நிலைகளில் அரசியல் வாதிகளின் செல்வாக்கு குறைவடைந்து கேள்விக் குறியாகும் வேளை, மறுபுறம் மக்கள் மத்தியில் அரசியல் என்பது பொம்மலாட்டமாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஓவ்வொரு அரசியல் கட்சியும் நிலைமைகளை தமக்கு ஏற்ற மாதிரி சாதகமாக தங்கள் பக்கம் திருப்பி அதில் நன்மையடைய முயற்சிக்கிறார்கள். இதற்கு சரியான மூல காரணம் இலங்கை அரசியல் வாதிகளும் சரியான தலைமைத்துவமும் இல்லை என்பதே ஆகும். எந்த விதத்திலும் விதிவிலக்கில்லை என்ற போக்கே தொடர்கிறது.

அரசியல் விவகாரங்கள் இலங்கையில் திடீர் திடீரென மாற்றம் பெறுவதும் அதற்கேற்ப அரசியல்வாதிகளும் சாதுரியமாக காய் நகர்த்தல்களில் ஈடுபடுவதும் தான் மக்களுக்கு வியப்பாகக் காணப்படுகிறது. ஆளுந்தரப்பும் எதிர்தரப்பும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருப்பதும் மறுகணம் பூதம் வெளிக்கிட்டது போல இரு தலைவர்களும் ஒன்று கூடி பொது இணக்கப்பாட்டுக்கு இணங்குவது போல மக்கள் மத்தியில் தோன்றுவது, இவ்வாறான பின் புலத்தில் அவர்கள் இணக்கப்பாட்டை நம்புவதா? மறுப்பதா என மக்கள் மத்தியில் திடீர் கேள்விகள் முளைத்துள்ளன.

ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக கடந்த மாதம் முதல் பேச்சுக்கள் ஆமை வேகத்தில் சென்ற கொண்டிருக்கிறது. முயல் வேகத்தில் ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித் தலைவருக்குமிடையேயான பேச்சுக்கள் காரணமாக கட்சித் தாவல்கள் தற்றும் கட்சிகளின் உட்பூசல்கள் வெளிவருகின்றன.

எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்த ஆளுந்தரப்பு முயற்சிப்பதாகவும் இதனால் அரசுடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ரணில் தெரிவித்துள்ளார். இவ்வாறான போக்குகள் தொடர்வதால் இரண்டு தரப்புகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுக்கு இடமே இல்லை என்று எதிர்பார்த்திருக்க திடீர் திருப்பமாக கடந்த கிழமை இரு தரப்பின் தலைவர்களும் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது தடைப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் பேச்சு வார்த்தையினை மீள ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

எதுவாக இருந்தாலும் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இணக்கமானதோர் முடிவை எட்ட வேண்டும் என்பது தான் எல்லோர் எதிர்பார்ப்பும். ஆனாலும் ஆளுந்தரப்பு தங்கள் ஆட்சிக் காலத்தை நீடிப்பதற்கான வியூகங்களைத் தீட்டி வருகின்றது. இதை இன்றைய நடவடிக்கைகள் காட்டிக் கொடுக்கின்றன.
அதே நேரம் எதிர் தரப்பு தர்ம சங்கட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உள்வீட்டு பிரச்சியையை விட அடுத்த தலையிடி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைப்பது எப்படி? அதற்கான இறுதி நாள் நாளை ஆகஸ்ட் 15ம் திகதி. பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால் இப்பொழுதும் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ம் திகதிக்குப் பின்னரும் பேச்சுவார்த்தையை தொடர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. ஆகா எவ்வளவு அதிஷ்டம் கிடைத்தும் யானை தன் கையால் தன் தலையில் மண்ணையள்ளிப் போட்டால் யார் தான் என்ன செய்றது?

இருந்தாலும் வர்த்தக சலுகைகளை நீடிக்க வேண்டுமானால் தங்கள் 15 நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணைக்குழு கோரியதை அடுத்து இலங்கை அரசு ஒன்றியத்துடன் நடத்தி வந்த சகல பேச்சுக்களை கடந்த யூலையில் நிறுத்தியது.

ஓட்டு மொத்தத்தில் இலங்கை அரசியலே ஒரு குழப்பமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தீர்வு யார் வல்லவன் யார் அரசியலமைப்பை மாற்றுவது என்ற போட்டி இல்லை. இப் பொழுது தேவை நாட்டின் பொருளாதாரத்தையும் எதிர்கால திட்டமிடல்களையும் சரியான பாதைக்கு திருப்புவது தான்.தரப்புக்கள் இணங்கி செயற்பட வேண்டிய கட்டாய தேவைப்பாடு உருவாகியுள்ளது.

இணக்கங்கள் கருத்தொன்றிப்பு மூலம் தான் தீர்வை எட்ட முடியும். இல்லா விட்டால் எதுவுமே யாருக்கும் எட்டாக் கனியாகி விடும்.

பதிவர்களை, குறிப்பாக இலங்கைப் பதிவர்களை ஊக்குவித்து வரும் யாழ்தேவி திரட்டியில் கடந்த வாரத்திற்கு முதல் வார நட்சத்திரமாக என்னை அறிவித்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றை தினக்குரல் ஞாயிறு பத்திரிகையில் ‘இணையத்தில் எம்மவர்கள்’ என்ற பகுதியிலும் என்னை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.


அந்தவகையில் யாழ்தேவி திரட்டியினருக்கு என் நன்றிகளை மீண்டும் ஒரு தடவை தெரிவித்துக் கொள்கின்றேன். நட்சத்திரம் என்ற அந்தஸ்து பதிவர்களை பொறுத்தவரையில் மணி மகுடம் தான். வலைப்பூவில் வாழ்த்தியவர்களை விட நேற்று பத்திரிகை பார்த்து வாழ்த்தியவர்கள் பலர். எல்லோருக்கும் நன்றிகள்.

நட்சத்திர வாரத்தில் தொடர்ச்சியாக பதிவு எழுதவேண்டும் என்ற, சிறு கட்டளையும் யாழ்தேவியால் வழங்கப்பட்டது. என்னால் நான்கு பதிவுகள் மட்டுமே எழுத முடிந்தது. அதுவும் இறுதி நாளில் இரண்டு பதிவுகள். எழுதிய நான்கு பதிவுகளும் வழமையான என் கட்டுரைப் பாணியிலான பதிவுகளாகவும் இல்லை. காரணம் நட்சத்திர வாரத்தில் எழுதியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் எழுதியது. அவ்வாறன பதிவுகளில் எனக்கு விருப்பமும் இல்லை. இனி தொடரவும் மாட்டேன். அதிக வேலைப்பளு நட்சத்திர வாரத்தில் வந்தது என் துரதிஷ்டமே!

காலை வாரிவிட்ட ‘ஜி.எஸ்.பி’ பிளஸ் கட்டுரை நேற்றைய தினக்குரலில் வந்தால் நல்லதென எதிர்பார்த்தேன். என் எண்ணமும் காலை வாரிவிட்டது. பரவாயில்லை. ஆனால் ‘நல்ல மனிதர்களை இழக்க முடியுமா?’ கட்டுரை 01.07.2010 இருக்கிறம் இதழில் வெளிவந்திருக்கின்றது. யாழ்தேவி நண்பர்கள் அதனைக் கவனமெடுத்திருக்கலாம். (பதிவுகளை தெரிவு செய்வது அவர்களைப் பொறுத்தது. எனவே இது பற்றி நான் எதுவும் குறைப்படவில்லை. என் பதிவுக்கு இரு அங்கீகாரங்கள்)

யாருமே எதிர்பார்க்காத விதமாக முரளிதரன் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக இன்று காலியில் ஆரம்பமாகிய இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டி இருக்கும்.

சனத் ஜெயசூர்யாவுக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் மரியாதை தனக்கும் எதிர்காலத்தில் கிடைத்து விடாமல் நாகரீகமாக ஓய்வு பெறுகின்றார். கிரிக்கட் பற்றியோ, முரளி பற்றியோ சொல்வதற்கு எனக்குத் தகுதியில்லை. ஆனாலும் ஒரு சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முரளிதரனின் உலக சாதனையை (ஒரு இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்கள்) கௌரவிக்கும் முகமாக 10 வருடத்திற்கு முன்னர், கொழும்பில் தமிழ்த்துறை சார்ந்த ஒரு சங்கத்தினால் பாராட்டு விழா வைத்தார்களாம். அதில் கலந்து கொண்டு முரளி ஆங்கிலத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதாக நான் அன்று கேள்விப்பட்டேன். இது பற்றி மேலதிகமாகத் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முரளி வாழ்ந்து, வளர்ந்து இன்று நிற்கும் நிலை வரையான சூழ்நிலையில், அவர் தூய தமிழ் பேசுவதென்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம் தான். ஆனாலும் அண்மையில் இந்தியத் தொலைக்காட்சியொன்றில், யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல தமிழ் கதைத்தார். இலங்கையில் தமிழ் பேசுவதைத் தவிர்க்கிறாரா?

இலங்கையின் பிரபல ஊடக நிறுவனமொன்றின் ஆங்கில வானொலிக்கு, குமார் சங்கக்காராவும், சிங்கள வானொலிக்கு சனத் ஜெயசூரியாவும் விசேட தூதுவர்களாக இருந்தார்கள். (இருக்கிறார்களா தெரியவில்லை) அந்த வலையமைப்பின் தமிழ் வானொலியின் தூதுவராக இருக்குமாறு முரளியை அணுகிய போது, அவர் மறுத்திருக்கின்றார். (கேள்விப் பட்டேன்) அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.

முரளி, வோர்னின் சாதனையை முறியடித்த சமயத்தில் யாழ்ப்பாணம் ‘உதயன்’ பத்திரிகை அலுவலகத்திற்கு முன்னால் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது. பின்னர் ஏதோவொரு காரணத்திற்காக தீயிட்டும் எரிக்கப்பட்டது. அது ஏன்?

பலரும் (பொதுவாகத் தமிழர்கள்), இரண்டு கண்ணோட்டத்தில் முரளியைப் பார்க்கிறார்கள். அது சரியா?

அங்கங்கே தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு விடை பகிருங்கள்…

இதயம், காதலுக்கு மரியாதை, லவ் டுடே என பார்த்த காதல் படங்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு காதல் பயணம்.
படங்களையும், ட்ரெயிலரையும் பார்த்த போது, ஏதோ இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய கதையாக்கும் என நினைத்தேன். போராட்டக் காரர்கள் என்ற பெயரில், படத்துக்கு இடையூறு இல்லாமல் சில கோஸங்கள் மட்டுமே. மற்றப்படி நாயகன் - நாயகியைச் சுற்றித் தான் படம் செல்கிறது.

ஆரம்பத்தில் வரும் வெள்ளைக்கார வயதான பெண்மணி, அவருடன் பேத்தி உறவு பெண், வட்டத் தொப்பியுடன் திரியும் நாயகி, வெள்ளைக்காரர்களின் நடனம், ஆற்றில் படகிலிருந்து அடித்துத் தள்ளிவிடல் போன்ற காட்சிகளில் எம்மையறியாமல் டைட்டானிக் பற்றி சிந்திக்க வைப்பதை தவிர்க்க முடியாது.

படத்தில் நிச்சயம் பாராட்ட வேண்டியவர் கலை இயக்குனர் செல்வக்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஸா. சலவைத் தொழிலாளர்களின் இருப்பிடம், கவர்னர் மாளிகை, ரெயில்வே ஸ்ரேசன், மணிக்கூட்டுக் கோபுரம், பயன்படுத்தும் வாகனங்கள் என எல்லாமே புதுசு. எங்களை 1947 இற்கே கூட்டிச் செல்கிறது. ஆடையலங்காரங்களும் பாராட்டப் படவேண்டியவை.

இயக்குனர் விஜய். இன்றைய காலத்தில் வரலாற்று சம்பவங்களை ஏற்றுக் கொள்வார்களா? படம் வியாபார ரீதியில் வெற்றி பெறுமா என பெரிதாக யோசிக்காமல், வித்தியாசமன கதைக்களத்துடன் எடுத்தது மட்டுமல்லாமல், ரசிகர்களை கட்டிப் போடும் உத்திகளை படங்களில் நிறையவே தெளித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, ஆக்ஸன் என அளந்தெடுத்து படைப்பை உருவாக்கியிருக்கிறார்.

ஆர்யா, ‘அறிந்தும் அறியாமலும்' ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமான கதைக்களங்களுக்கு பழக்கப்பட்டு விட்டார். அதுவும் நான் கடவுளுக்கு பிறகு சொல்லவே தேவையில்லை. படத்திற்காக பிரத்தியேக உழைப்பு நன்றாகவே தெரிகின்றது. குஸ்தியில் ஒரு பயில்வானாக, காதலிக்காக ஆங்கிலம் கற்பது ஆகட்டும், வெள்ளைக்காரர் வெளியேறுகிறார்கள் என குதூகலிக்காமல் கவலைப்படுவது போன்ற பல காட்சிகளில் மனதில் நிற்கிறார்.

எமி ஜாக்ஸான், தெலுங்கு, ஹிந்தியென பல இறக்குமதிகளைப் பார்த்ததால், மாறு பட்ட சிந்தையுடன் அவரை உற்று நோக்கவில்லை. இவ்வாறான ஒருவரை விஜய் எங்கிருந்து தான் தேடி எடுத்தாரோ? நடிப்பில் நம்மவர்களையெல்லாம் விஞ்சி விடுகின்றார்.

ஹனீபா, அட! நல்லதொரு நடிகரை இழந்து விட்டோமே, என யோசிக்க வைக்கிறார். வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் இயல்பான நகைச்சுவையை தெளித்துச் செல்கிறார். மொழிபெயர்ப்பாளராக 'ஆர்யாவை பிடித்திருக்கு' என நாயகி சொல்வதை, 'உன் கழுதையையும் பிடித்திருக்காம்' என சொல்வது நகைச்சுவையின் உச்சம்.

இவர்களைத் தவிர, வெள்ளைக்கார தளபதி, நாஸர், எம்.எஸ்.பாஸ்கர், வாத்தியார், நித்திரை கொள்பவன், ஆர்யாவின் நண்பர்கள், தற்கால கதையில் வரும் லொல்லு சபா ஜீவா, வழிகாட்டுபவன், டாக்ஸி ட்ரைவர், வயதான அம்மணி என அனைவரும் காட்சிகளில் கவர்கிறார்கள்.

பாராட்டப்படவேண்டிய இன்னொருவர், இசையமைப்பாளர் ஜீ.பி.பிரகாஸ். வெயில் முதல் தொடர்ச்சியாக சவாலான படங்களுக்கு இசையமைக்கின்றார். 1947ஆம் கால காட்சியமைப்புக்களில் பின்னணி இசையும், பாடல்களும் இனிமை.

மொத்தத்தில் 'காதல்' என்ற மூன்றெழுத்து வார்த்தையை சரியான விதத்தில் படைப்பாக்கி சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

பி.கு : நட்சத்திர வாரத்தில் தொடர்ச்சியாகப் பதிவெழுத முடியாமல் போனதற்கு யாழ்தேவி நண்பர்களிடமும், பதிவுலக வாசகர்களிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.

நான் அண்மைக்காலத்தில் பார்த்து, வாசித்த இரண்டு செய்தி இணையங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். (இது விளம்பரம் அல்ல)

ஒன்று வாரணம், இன்னொன்று வணக்கம். இரண்டினதும் ஆங்கில தொடக்க எழுத்து V (Victory). எனவே இணையங்களும் வெற்றி நடை பேர்டும் போல் தெரிகின்றது.


வாரணம் டொட் கொம்

செய்திகள், விளையாட்டு, சினிமா, நிகழ்வுகள், வீடியோ, படத்தொகுப்பு என வகை பிரிக்கப்பட்டு செய்திகள் வெளியிடப்படுகின்றன. நாம் பிற தளங்களில் வாசித்த செய்திகள் மட்டுமல்லாது, எந்த செய்தித் தளங்களிலும் வெளியாகத செய்திகளையும் முதற் தடவையாக இங்கு அறியக் கூடியதாக உள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு சார்ந்த செய்திகள். மக்களின் புனர்வாழ்வுகள், அபிவிருத்திகள் தொடர்பான செய்திகள் அதிகளவில் இடம்பிடிக்கின்றன.

சினிமா, விளையாட்டு இரண்டிலும் பிற தமிழ்த் தளங்களில் காணப்படும் செய்திகளை விட நிச்சயம் அதிகளவிலான செய்திகள் தினந்தோறும் வெளியாகும். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் வாரணம் சினிமாப் பகுதியை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இந்தத் தளத்திற்கே உரிய விசேட அம்சம் என்னவெனில், அது நிகழ்வுகள். இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்வுகள் உடனுக்குடன் வெளியாகின்றது.


வணக்கம் டொட் கொம்

மேலே வாரணம் இணையத்திற்கு கூறிய அனைத்து விடயங்களும் இதற்கும் பொருந்தும். அதனால் ரிப்பீட் அடிக்க விரும்பவில்லை. மேலதிகமாக இணையக்கோப்பு, சின்னஞ்சிறு விளம்பரங்கள், இசை, திருமண சேவை என்பனவும் உண்டும்

இணையங்கள் இரண்டும், புதிதாக இணைய வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. எனவே குறை, நிறைகளும் இருக்கலாம். நான் வாசித்த இந்தத் தளங்களை விரும்பினால் நீங்களும் ஒரு முறை வாசியுங்கள்.

Followers

Blog Archive

About this blog

Labels

Blog Archive