ஆண்டுதோறும் ஜூன் மாதம் 20 திகதி அகதிகள் தினமாக நினைவு கோரப்படுகிறது. நேற்று முன்தினம் அது உலகளாவிய ரீதியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அகதிகள் பற்றிய உலகளாவிய கண்ணோட்டம் பலவிதமாகவுள்ளது. “அகதி என்றால் என்ன?” எனக் கேட்கும் பிள்ளையும் உலகின் இன்னொரு பாகத்தில் இருப்பதை தவிர்க்க முடியாது. அகதிகளுக்காக நாம் செய்ய நினைப்பவையும் செய்தவையும் என்ன? நாங்கள் அகதிகளாகிய போது எங்களுக்கு கிடைத்தது என்ன? பல்வேறு விதமான எண்ண ஓட்டங்கள் மனதில் அகதிகள் பற்றி ஓடிக்கொண்டேயிருக்கின்றது.



2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் சிறப்புத் தீர்மானம் ஒன்றின் படி அகதிகளுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக உலக அகதிகள் தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந் நாளின் முக்கிய நோக்கம் பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி இன்னல் பட்டு உடமைகள், உறவுகளை இழந்து உள்நாட்டிலும் பிற நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு சூட்டப்பட்ட பெயரான அகதிகள் எனும் பட்டத்தையும் அதன் வலிகளையும் உலக மக்களுக்க உணரவைப்பது தான்.

கடந்து சென்ற காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு போர்களால், அரசியல் சமூகச் சூழல்களால், அகதிகளாக அல்லலுறும் மக்களை நினைவு கூரும் வகையில் பல்வேறுபட்ட நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள், நினைவஞ்சலிகள் போன்றன இடம்பெற்றன. இவற்றுக்கெல்லாம் தலைமை தாங்குவது UNHCR.


1951ஆம் ஆண்டின் அகதிகள் நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் மேல் குறிப்பிட்ட வரைவிலக்கணம் ஒன்றைச் செய்தது.

அகதி என்ற கருத்து சொந்த நாட்டில் இடம்பெறும் போர் இவன்முறை, அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் நாட்டைவிட்டு வெளியேறுபவர்கள் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தன்னை அகதியாக ஏற்கும் படி விண்ணப்பம் கோரும் ஒருவர் அகதியாக ஏற்கத்தகுதியுடையவராகிறார். 2006ம் ஆண்டு அகதிகளின் எண்ணிக்கை 8.4 மில்லியன். ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு, உலகின் மொத்த அகதிகள் தொகை 12 019 700 என கணக்கிட்டது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் வரையறுத்துள்ளபடி அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு
  • அகதிகள் தாமக சொந்த நாட்டுக்கு திரும்புதல்
  • குடியேறிய நாட்டிலேயே கலந்து விடுதல்.

போர்க் குற்றவாளிகள் ஒரு போதும் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.

விளக்கம் முடிந்து விட்டது. இனி நடைமுறைக்கு வருவோம். அதுவும் இலங்கைக்குள் வருவோம்…. அகதிகள் தினம் என்ன மே 18ஐ நினைத்தாலே போதும். பிரபல புள்ளிகள் கடந்த வாரத்துக்குள் இலங்கைக்கு வந்து போயுள்ளார்கள். இலங்கையில் எவ்வளவு பேர் அகதிகளாகியுள்ளனர் என்ற சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இங்க இருக்கிற ஆட்;களை விட கூடவாகத்தான் இருக்கும்.

தினங்களைப் பிரகடனப்படுத்துவதில் பிரயோசனம் இல்லை. அந்த நாளுக்கான கருப்பொருளுக்கு உயிர் கொடுப்பதில் தான் இருக்கிறது அதன் தார்ப்பரியம். அதைத்தான் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்ப்பாட்டங்களும் மேடைப்பேச்சுக்களும் செய்யப் போவது ஒன்றும் இல்லை.

அடுத்தகட்ட நடவடிக்கையைத் தான் எப்போதும் சிந்திக்க வேண்டும். அங்கு தான் தீர்வு கிட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஓலமிட்டுக் கொண்டிருப்பதில் கிடைக்கக் கூடியதும் கைவிட்டுச் செல்லலாம். எனவே சிந்தித்து செயற்படுங்கள்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் சர்சையை உருவாக்கியுள்ளது. அவரின் விஜயத்தின் பூகோள அரசியலை தொடர்ந்து ஆசியப் பிராந்திய வல்லரசுகள் இரண்டினதும் பிடிக்குள் இலங்கை தனது எதிர்காலத்தை தொலைத்து விடப்போகிறது என்ற கவலை அதிகமாக தென்னிலங்கை மக்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.

சீனாவுக்கு இணையாக வர்த்தக பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த முனைவது சீனாவின் தொழிலாளர்களை போல இந்தியாவின் தொழிலாளர்களையும் இலங்கைக்குள் திறந்துவிடும் வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற அச்சம் உருவெடுக்கிறது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா சிந்தித்து செயல்படும் என எதிர்பார்த்தோம் ஆனால் நடந்தது தலைமாறு தான். ஆனால் சீனாவுக்கு இணையாக பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கையை தன் பக்கம் இழுக்க இந்தியாவினுடைய கடைசி முயற்சி தான் ஜனாதிபதியின் விஜயம் போல் தென்படுகிறது.

இந்த வலைக்குள் இலங்கை சென்றுவிடக்கூடாது என்ற அவதானிப்பில் சீனா இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஸ இலங்கைக்கு திரும்பிய போது சீனா அரச சபையில் துணைப்பிரதமர் சாங் டிஜிங் அதிக கடன் உதவிகளுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சீனாவின் உதவிகள் தென்னிலங்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் அது தற்போது வடக்கிலும் தனது நிலையை விரிவுபடுத்தி வருகின்றது.இந்த நிலையில் இந்தியா தனது நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றது.இந்தியாவின் உதவிகள் வடக்கையே பிரதான குறியாகக் கொண்டுள்ளது.அதிலும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டவை புகையிரத அபிவிருத்திஇ தொழிற்சாலை நிறுவுதல், விவசாய ஆராய்சி நிலையம் நிறுவுதல் போன்ற பல திட்டங்கள்.

அம்பாந்தோட்டையில் நடைபெறும் சீனாவின் துறைமுகப் பணிகளை அவதானிக்கும் நோக்கத்துடன் அங்கு ஒரு தூதரகத்தை அமைக்கும் நோக்கத்தை இந்தியா கொண்டுள்ளது. ஜனாதிபதி இந்தியா செல்ல அமெரிக்கத் தூதுவர் இரு நாள் வி;ஜயத்தை யாழ்ப்பாணம் மேற்கொண்டுள்ளார். இந்த மூன்று நிகழ்வுகளும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் கருதி மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கை ஆகும்.

அதாவது இந்து சமுத்திரத்தைக் கைப்பற்றப் போகும் பலம் யாருடைய கைகளில் உள்ளது என்பது தான் போட்டியாகிறது.இந்து சமுத்திர அதிகாரத்தில் வெற்றிடம் இருப்பதாகவும் அதை நிரப்ப சீனா முயற்சிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சீனாவுடன் இந்தியா தாக்குப்பிடிக்கும் பலம் உள்ளதா என்பது தான் கேள்வி? சீனாவின் கடற்படை பலம் ஆயுதபலம் மித மிச்சமாகவே இருக்கிறது யாவருக்கும் தெரிந்ததே.


இந்த நாடுகளின் பாதுகாப்பு ஒதுக்கீட்டைப் பார்த்தால் சீனா 61 பில்லியன் டொலர் இந்தியா 25 பில்லியன் டொலர் அமெரிக்கா 607 பில்லியன் டொலர் இந்தத் தரவுகள் வெளிப்படுத்துவது புரிந்திருக்கும். ஆசியப் பிராந்தியத்தில் உள்ள வறிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அதனை மேற்கொள்ள பிராந்திய வல்லரசுகள் தமக்குள் பனிப்போரை ஆரம்பித்துள்ளன.இதிலும் சீனா முந்தி விட்டது.சார்க் நாடுகளுடன் பர்மாவுடன் சீனா தன்கான சுற்றுவளையத்தை உருவாக்கி விட்டது.இந்த நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.

ஆனாலும் தலைமன்னார் பகுதி ஊடாக இந்தியா வரக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது. அமெரிக்கா ஈரான் மீது கடுமையான தடைகளை ஏற்படுத்த வேண்டும் என அனைத்துலக சமூகத்தின் ஆதரவைத்திரட்டிக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை ரஸ்யாவும் சீனாவும் எதிர்க்கின்றன.

ரஸ்யாவின் இந்த நகர்வுக்குப் பின்னாலும் கொரியாவின் வளைகுடாவில் தோற்றம் பெற்றுள்ள நடவடிக்கைகளுக்கு பின்னால் சீனா உள்ளதாக நம்பப்படுகிறது. சீனாவை முடக்கவே அமெரிக்கா தனது காய்களை நகர்த்தி வருகிறது.

இவ்வாறான ஒரு சிக்கலுக்குள் தான் இலங்கை தன்னைத் தொலைத்து விட்டு திகைக்கப் போகிறது என வெளிப்படையாகவே தெரியவருகிறது.ஏனென்றால் இறுதியாக நடைபெற்ற 14வது மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் மேற் சொல்லப்பட்டவைக்கு சார்பாகவே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அதிக ஆட்டம் காணப்போவது தென்னிலங்கை தான்.

எனக்கு தமிழ் தந்த பாடம், “உப்புத் திண்டவன் தண்ணி குடிக்கத்தான் வேணும்”.


Followers

About this blog

Labels