இலங்கைக்கு இந்தியா சார்பாக நடிகர்கள் வருவது மிக மிகக் குறைவு. இந்தியப் பணத்தில் ஆறு கோடியில் தயாரிக்கும் படத்தை அதனை விட அழகாக இலங்கை ரூபாயில் ஆறு கோடியில் தயாரித்து விடலாம். இது பலருக்கு தெரிந்தாலும் பல கோடி செலவழித்து சுவிஸ், அமெரிக்கா போவது தான் வழமை. ஆங்காங்கே பட்ஜட் இடிக்கும் போது இலங்கையில் வந்து ஒரு பாடல் எடுத்து விட்டு செல்வார்கள். தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் காசு கொடுத்து அழைத்தால் வருவார்கள். ஹிந்தி நட்சத்திரங்கள் மழைக்கு கூட ஒதுங்க நினைப்பதில்லை. ஷாருகான், ஷொயிப் அலிகான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் வந்து பங்குபற்றிய நிகழ்வில் நம்மவர்களின் சாதனையால் ‘இனி இந்தப்பக்கமே வரமாட்டேன்’ என ஓட்டம் பிடித்தார்கள் அவர்கள். இந்த நிலையில் பிரம்மாண்டமான ஒரு சினிமா விழாவிற்கு தயாராகின்றது இலங்கை.


செய்தி கேள்விப்பட்ட நான் முதலில் நம்பவே இல்லை. ஹிந்தி உச்ச நட்சத்திரங்கள் இலங்கைக்கு வருவார்களா? என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்குள்ளும் எழுந்தது. ஆனாலும் ‘வருவார்கள்’ என அடித்து உரைத்திருக்கிறார் அமிதாப். திரையில் பார்த்தவர்களை இலங்கையர்கள் நேரில் பார்க்க போகின்றார்கள். ‘சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா’ இது இந்திய சினிமாத் துறையினராலேயே கடுமையாக விமர்சிக்கப்படுவது. காரணம் பெயரில் தான் ‘சர்வதேச இந்திய’ ஆனால் விருது ஹிந்தி சினிமாவுக்கு மட்டும். இதனால் மற்ற திரைத்துறையினர் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. உள்நாட்டில் நிகழ்வுக்கு மதிப்பில்லாத படியால் தான் துபாய், இலங்கை என சுற்றுகின்றது விழாக்குழு.

இதில் இன்னொரு பகிடி. இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வருமாறு விழாக்குழுவினரால் (அமிதாப்) அனுப்பப்பட்ட அழைப்பிதழை வாங்க ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் மறுத்துள்ளனர். ஏன்??? அதுபற்றி கருத்து சொல்லக் கூட ஒருவரும் முன்வரவில்லை. எங்களுக்குத் தெரியாதா… ஆதரவாக கருத்துச் சொன்னால் அல்லது யாரையும் சந்தித்தாலே நடிகர்களின் படங்களுக்கு இலவச எதிர்ப்புப் பிரசாரங்கள் முடக்கி விடப்படும் நிலையில், நேரில் இலங்கை வந்து கலந்து கொண்டால்… என்னவாவது!


இதேவேளை மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராவணா படத்தை இலங்கை திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டிருக்கும் விழாக் குழுவினர், மணிரத்னத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கை விழாவில் கலந்து கொண்டால், தன் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் மணிரத்னம்.

ம்ம்… ஏதோ யோசிச்சு செய்யுங்கப்பா…


சர்வதேச விருது வென்ற பம்பர வலல்ல திரைப்படத்தின் இயக்குநர் அத்துல லியனகே இலங்கை வந்துள்ளார். அமெரிக்காவின் ஹஸ்டன் நகரில் இடம்பெற்ற 46ஆவது WORLD FIRST சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான ஜுலி விருதை திரு.லியனகே பெற்றுக் கொண்டார். அவர் இயக்கிய முதலாவது திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்திற்கான திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். அதேநேரம் கலை இயக்கத்தையும் திரு.லியனகே மேற்கொண்டார். திரைப்படத்தின் பிரதான பாத்திரமேற்று நடித்தவரும் அத்துல லியனகே என்பது குறிப்பிடத்தக்கது. பம்பர வெலல்ல திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிசூலதீப தபவிட்ட சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்றுள்ளார். பம்பர வலல்ல திரைப்படத்தை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அளவில் இலங்கையில் திரையிட நடவடிக்கை எடுத்துள்ளதாக திரைப்படத்தின் இணைப்பாளர் உதய தேவாலமுல்ல தெரிவித்தார்.



மலர்ந்திருக்கும் விகுர்தி சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


இம்முறை வடக்கு - தெற்கு இணைப்பின் பின் புது வருடம். நண்பர்கள் பலர் யாழ்பாணம் சென்று விட்டார்கள். எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, அங்கு புது வருடம் களை கட்டுவதாக கேள்வி. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கிழமை முழுவதும் அனைத்து கடைகளையும் திறக்குமாறு யாழ்ப்பாண வணிகர் கழகம் கடை உரிமையாளர்களிடன் கோரிக்கை விடுத்தது. தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பொருட்கள் கொள்வனவில் மக்கள் அதிகளவில் ஈடுபட்டார்கள். கொழும்பில் சாப்பிடுவதற்கு கூட கடைகள் திறக்கவில்லை. காலையில் வங்கி நடவடிக்கைகள் மும்மரமாக இருந்தது.

தமிழரின் புத்தாண்டு பற்றிய குழப்பம் பொதுவாக உண்டு. அதனை உருவாக்கிய செல்வ சீமான் பற்றிய ஒரு கேலிச்சித்திரம்.

இலங்கையின் இளம் தலைமுறை பாடகர்களுக்கு முடிசூட்டும் மங்கள விழாவான சக்தி சூப்பர் ஸ்டாரின் இறுதி நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நேற்று மாலை சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் கிண்ணியா நசீர், நீர்கொழும்பு மீனாபிரஷாதினி, மஸ்கெலிய திருச்செல்வம், மாத்தளை சங்கீதா..... ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், மற்றும் பிரபல பாடகர் பென்னி தயாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைநகரில் இடம்பெறும் இவ்வாறான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை, அதுவும் நண்பிக்கு எஸ்.எம்.எஸ் போட்டி மூலம் கிடைத்த இரண்டு இலவச டிக்கட்டுக்களால். நிகழ்வு 6 மணிக்கு ஆரம்பமாகும், 5.30 மணிக்கு அங்கு நிற்கவேண்டும் எனக் கூறப்பட்டதால் சரியாக அந்தநேரத்திற்கே சென்று விட்டோம்.


கூட்டமிருக்;காது என்று நினைத்து கூலாகச் சென்ற எமக்கு அதிர்ச்சி, மூன்று பிரிவுகளாக ஜனங்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள். இடித்தடித்து உள்ளே சென்றோம். பாதுகாப்பு காரணங்களுக்காக சோதனையின் பின்னே உள்ளே அனுமதித்தார்கள்.

உள்ளக அரங்கின் ஒரு மத்தியில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. நாற்கோண அரங்கின் மேடையின் பின்புறம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் மக்களால் நிரம்பியது. சரியாக ஆறுமணிக்கு எங்களைக் காக்க வைக்கக் கூடாது என்பதற்காக, இறுதிப் போட்டிக்கு தெரிவான 10 பேர் பற்றிய சிறிய முன்னோட்டம். பின்னர் 6.30 மணியளவில் நடன நிகழ்வுடன் நிகழ்ச்சி ஆரம்பமானாது.

பின் ஆரம்பமே அதிர்ச்சி, நிகழ்ச்சியைத் தொகுக்க மாயா, அல்லது சங்கர் வருவார் என நினைத்திருந்த எமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… கஜமுகன் வந்தார். சக்தியா இப்படி மாறி விட்டது. .! இதற்கு காரணம் இசை இளவரசர்கள் இறுதி நிகழ்ச்சியின் பின் எழுந்த விமர்சனங்களா? அல்லது வேறு உள்வீட்டு விவகாரங்களா? எமக்கு தெரியவில்லை. தேவையும் இல்லை.

பின் இறுதிப் போட்டிக்கு தெரிவானவர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பாடினாhர்கள். அருமையாக இருந்தது. பின்னணி இசை, அரங்க ஒலித்தெளிவு, மேடை ஒளியூட்டம் எல்லாமே நன்றாகத் தான் இருந்தது. ஆனால் பாட்டு முடிந்தவுடன் சக்தி ரி.வி விளம்பரங்களை நேரடியாக விடுத்தது நேரில் சென்றவர்களை கடுப்பாக்கியது. அது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது.


முன்பு நாங்கள் ஊரில் இருந்து இப்படியான நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, பொருத்த நேரத்தில் விளம்பரம், அல்லது செய்தி வந்து குறுக்கிட்டு விடும். எங்களால் முக்கியமான விடயங்களை பார்க்காமல் போய்விடும். ஆனால் நேராக சென்று அமர்ந்த எங்களுக்கு கொடுமை தலைகீழானது. ரி.வி ரசிகர்கள் ரசித்துப் பார்த்திருப்பார்கள். நாங்கள் அரங்கிலிருந்தவாறே செய்தியறிக்கைகள், தேர்தல் வாக்கு விளம்பரங்கள், வர்த்தக விளம்பரங்களை பார்க்க வேண்டியதாயிற்று.

அதுவும் வர்த்தக விளம்பரங்கள், அரை மணித்தியாலத்திற்கு ஒரு முறை 10 – 15 நிமிடம் மட்டும் ஒளிபரப்பானது. ரி.வி யாக இருந்தால் சனல் மாத்தியிருப்போம். அரங்கில் என்ன செய்வது? இனிமேல் இந்த பிழை விடாமல் சக்தி பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படியானால் வந்திருந்தவர்கள் காசு கொடுத்து வந்திருக்க அவசியமில்லையே! வீட்டிலிருந்தபடி ரி.வியிலேயே பார்த்திருக்கலாம். நேரடி ஒளிபரப்பு தப்பில்லை. அதற்காக வந்திருந்தவர்களை 15 நிமிடத்திற்கு மேலாக அடிக்கடி காக்க வைப்பது எவ்விதத்தில் நியாயம்.

இதனால் நேரம் விரயமாகியது. 10 மணி ஆகியும் பாதியும் முடியவில்லை. எனவே கிளம்பி விட்டோம். வீடு வந்து சேர்ந்து ஒன்ரறை மணித்தியாலத்தின் பின்பே முடிவு கிடைத்தது. சங்கீதா சக்தி சுப்பர் ஸ்டாராக தெரிவானார்.

பென்னி தயாள்… “ஊர்வசி ஊர்வசி…” “டாக்சி டாக்சி…” இரண்டு பாடல்களை 10 மணிக்கு முன்னர் பாடிக்கலக்கினார். தொடர் விளம்பரங்கள், செய்தியறிக்கையால் சலித்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். அரங்கம் நிறைந்த ரசிகர்கள் அவருடன் இணைந்து பாடி நல்ல ஆதரவைக் கொடுத்தார்கள். அவர்களும் இலங்கை ரசிகர்களைப் பற்றி நன்றாக நினைத்திருப்பார்கள். (வழமையாகவும் அவ்வாறே தான்)

சக்தியின் இந்த நிகழ்ச்சி பாராட்டக்கூடியது. நிகழ்ச்சிக்கான ஆதரவை வந்திருந்த மக்களைக் கொண்டு பார்க்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறான நிகழ்ச்சிகளை சக்தி உட்பட மற்றவர்களும் வழங்க வேண்டும். சிறு ஒழுங்கீனங்களை தவிர்த்துக் கொள்ளுதல் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டும். மற்றப்படி குறை கூற எதுவுமில்லை.


எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

Followers

About this blog

Labels