இலங்கைக்கு இந்தியா சார்பாக நடிகர்கள் வருவது மிக மிகக் குறைவு. இந்தியப் பணத்தில் ஆறு கோடியில் தயாரிக்கும் படத்தை அதனை விட அழகாக இலங்கை ரூபாயில் ஆறு கோடியில் தயாரித்து விடலாம். இது பலருக்கு தெரிந்தாலும் பல கோடி செலவழித்து சுவிஸ், அமெரிக்கா போவது தான் வழமை. ஆங்காங்கே பட்ஜட் இடிக்கும் போது இலங்கையில் வந்து ஒரு பாடல் எடுத்து விட்டு செல்வார்கள். தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் காசு கொடுத்து அழைத்தால் வருவார்கள். ஹிந்தி நட்சத்திரங்கள் மழைக்கு கூட ஒதுங்க நினைப்பதில்லை. ஷாருகான், ஷொயிப் அலிகான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் வந்து பங்குபற்றிய நிகழ்வில் நம்மவர்களின் சாதனையால் ‘இனி இந்தப்பக்கமே வரமாட்டேன்’ என ஓட்டம் பிடித்தார்கள் அவர்கள். இந்த நிலையில் பிரம்மாண்டமான ஒரு சினிமா விழாவிற்கு தயாராகின்றது இலங்கை.


செய்தி கேள்விப்பட்ட நான் முதலில் நம்பவே இல்லை. ஹிந்தி உச்ச நட்சத்திரங்கள் இலங்கைக்கு வருவார்களா? என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்குள்ளும் எழுந்தது. ஆனாலும் ‘வருவார்கள்’ என அடித்து உரைத்திருக்கிறார் அமிதாப். திரையில் பார்த்தவர்களை இலங்கையர்கள் நேரில் பார்க்க போகின்றார்கள். ‘சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா’ இது இந்திய சினிமாத் துறையினராலேயே கடுமையாக விமர்சிக்கப்படுவது. காரணம் பெயரில் தான் ‘சர்வதேச இந்திய’ ஆனால் விருது ஹிந்தி சினிமாவுக்கு மட்டும். இதனால் மற்ற திரைத்துறையினர் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. உள்நாட்டில் நிகழ்வுக்கு மதிப்பில்லாத படியால் தான் துபாய், இலங்கை என சுற்றுகின்றது விழாக்குழு.

இதில் இன்னொரு பகிடி. இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வருமாறு விழாக்குழுவினரால் (அமிதாப்) அனுப்பப்பட்ட அழைப்பிதழை வாங்க ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் மறுத்துள்ளனர். ஏன்??? அதுபற்றி கருத்து சொல்லக் கூட ஒருவரும் முன்வரவில்லை. எங்களுக்குத் தெரியாதா… ஆதரவாக கருத்துச் சொன்னால் அல்லது யாரையும் சந்தித்தாலே நடிகர்களின் படங்களுக்கு இலவச எதிர்ப்புப் பிரசாரங்கள் முடக்கி விடப்படும் நிலையில், நேரில் இலங்கை வந்து கலந்து கொண்டால்… என்னவாவது!


இதேவேளை மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராவணா படத்தை இலங்கை திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டிருக்கும் விழாக் குழுவினர், மணிரத்னத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கை விழாவில் கலந்து கொண்டால், தன் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் மணிரத்னம்.

ம்ம்… ஏதோ யோசிச்சு செய்யுங்கப்பா…


சர்வதேச விருது வென்ற பம்பர வலல்ல திரைப்படத்தின் இயக்குநர் அத்துல லியனகே இலங்கை வந்துள்ளார். அமெரிக்காவின் ஹஸ்டன் நகரில் இடம்பெற்ற 46ஆவது WORLD FIRST சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான ஜுலி விருதை திரு.லியனகே பெற்றுக் கொண்டார். அவர் இயக்கிய முதலாவது திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்திற்கான திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். அதேநேரம் கலை இயக்கத்தையும் திரு.லியனகே மேற்கொண்டார். திரைப்படத்தின் பிரதான பாத்திரமேற்று நடித்தவரும் அத்துல லியனகே என்பது குறிப்பிடத்தக்கது. பம்பர வெலல்ல திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிசூலதீப தபவிட்ட சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்றுள்ளார். பம்பர வலல்ல திரைப்படத்தை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அளவில் இலங்கையில் திரையிட நடவடிக்கை எடுத்துள்ளதாக திரைப்படத்தின் இணைப்பாளர் உதய தேவாலமுல்ல தெரிவித்தார்.



மலர்ந்திருக்கும் விகுர்தி சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


இம்முறை வடக்கு - தெற்கு இணைப்பின் பின் புது வருடம். நண்பர்கள் பலர் யாழ்பாணம் சென்று விட்டார்கள். எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, அங்கு புது வருடம் களை கட்டுவதாக கேள்வி. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கிழமை முழுவதும் அனைத்து கடைகளையும் திறக்குமாறு யாழ்ப்பாண வணிகர் கழகம் கடை உரிமையாளர்களிடன் கோரிக்கை விடுத்தது. தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பொருட்கள் கொள்வனவில் மக்கள் அதிகளவில் ஈடுபட்டார்கள். கொழும்பில் சாப்பிடுவதற்கு கூட கடைகள் திறக்கவில்லை. காலையில் வங்கி நடவடிக்கைகள் மும்மரமாக இருந்தது.

தமிழரின் புத்தாண்டு பற்றிய குழப்பம் பொதுவாக உண்டு. அதனை உருவாக்கிய செல்வ சீமான் பற்றிய ஒரு கேலிச்சித்திரம்.

இலங்கையின் இளம் தலைமுறை பாடகர்களுக்கு முடிசூட்டும் மங்கள விழாவான சக்தி சூப்பர் ஸ்டாரின் இறுதி நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நேற்று மாலை சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் கிண்ணியா நசீர், நீர்கொழும்பு மீனாபிரஷாதினி, மஸ்கெலிய திருச்செல்வம், மாத்தளை சங்கீதா..... ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், மற்றும் பிரபல பாடகர் பென்னி தயாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைநகரில் இடம்பெறும் இவ்வாறான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை, அதுவும் நண்பிக்கு எஸ்.எம்.எஸ் போட்டி மூலம் கிடைத்த இரண்டு இலவச டிக்கட்டுக்களால். நிகழ்வு 6 மணிக்கு ஆரம்பமாகும், 5.30 மணிக்கு அங்கு நிற்கவேண்டும் எனக் கூறப்பட்டதால் சரியாக அந்தநேரத்திற்கே சென்று விட்டோம்.


கூட்டமிருக்;காது என்று நினைத்து கூலாகச் சென்ற எமக்கு அதிர்ச்சி, மூன்று பிரிவுகளாக ஜனங்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள். இடித்தடித்து உள்ளே சென்றோம். பாதுகாப்பு காரணங்களுக்காக சோதனையின் பின்னே உள்ளே அனுமதித்தார்கள்.

உள்ளக அரங்கின் ஒரு மத்தியில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. நாற்கோண அரங்கின் மேடையின் பின்புறம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் மக்களால் நிரம்பியது. சரியாக ஆறுமணிக்கு எங்களைக் காக்க வைக்கக் கூடாது என்பதற்காக, இறுதிப் போட்டிக்கு தெரிவான 10 பேர் பற்றிய சிறிய முன்னோட்டம். பின்னர் 6.30 மணியளவில் நடன நிகழ்வுடன் நிகழ்ச்சி ஆரம்பமானாது.

பின் ஆரம்பமே அதிர்ச்சி, நிகழ்ச்சியைத் தொகுக்க மாயா, அல்லது சங்கர் வருவார் என நினைத்திருந்த எமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… கஜமுகன் வந்தார். சக்தியா இப்படி மாறி விட்டது. .! இதற்கு காரணம் இசை இளவரசர்கள் இறுதி நிகழ்ச்சியின் பின் எழுந்த விமர்சனங்களா? அல்லது வேறு உள்வீட்டு விவகாரங்களா? எமக்கு தெரியவில்லை. தேவையும் இல்லை.

பின் இறுதிப் போட்டிக்கு தெரிவானவர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பாடினாhர்கள். அருமையாக இருந்தது. பின்னணி இசை, அரங்க ஒலித்தெளிவு, மேடை ஒளியூட்டம் எல்லாமே நன்றாகத் தான் இருந்தது. ஆனால் பாட்டு முடிந்தவுடன் சக்தி ரி.வி விளம்பரங்களை நேரடியாக விடுத்தது நேரில் சென்றவர்களை கடுப்பாக்கியது. அது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது.


முன்பு நாங்கள் ஊரில் இருந்து இப்படியான நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, பொருத்த நேரத்தில் விளம்பரம், அல்லது செய்தி வந்து குறுக்கிட்டு விடும். எங்களால் முக்கியமான விடயங்களை பார்க்காமல் போய்விடும். ஆனால் நேராக சென்று அமர்ந்த எங்களுக்கு கொடுமை தலைகீழானது. ரி.வி ரசிகர்கள் ரசித்துப் பார்த்திருப்பார்கள். நாங்கள் அரங்கிலிருந்தவாறே செய்தியறிக்கைகள், தேர்தல் வாக்கு விளம்பரங்கள், வர்த்தக விளம்பரங்களை பார்க்க வேண்டியதாயிற்று.

அதுவும் வர்த்தக விளம்பரங்கள், அரை மணித்தியாலத்திற்கு ஒரு முறை 10 – 15 நிமிடம் மட்டும் ஒளிபரப்பானது. ரி.வி யாக இருந்தால் சனல் மாத்தியிருப்போம். அரங்கில் என்ன செய்வது? இனிமேல் இந்த பிழை விடாமல் சக்தி பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படியானால் வந்திருந்தவர்கள் காசு கொடுத்து வந்திருக்க அவசியமில்லையே! வீட்டிலிருந்தபடி ரி.வியிலேயே பார்த்திருக்கலாம். நேரடி ஒளிபரப்பு தப்பில்லை. அதற்காக வந்திருந்தவர்களை 15 நிமிடத்திற்கு மேலாக அடிக்கடி காக்க வைப்பது எவ்விதத்தில் நியாயம்.

இதனால் நேரம் விரயமாகியது. 10 மணி ஆகியும் பாதியும் முடியவில்லை. எனவே கிளம்பி விட்டோம். வீடு வந்து சேர்ந்து ஒன்ரறை மணித்தியாலத்தின் பின்பே முடிவு கிடைத்தது. சங்கீதா சக்தி சுப்பர் ஸ்டாராக தெரிவானார்.

பென்னி தயாள்… “ஊர்வசி ஊர்வசி…” “டாக்சி டாக்சி…” இரண்டு பாடல்களை 10 மணிக்கு முன்னர் பாடிக்கலக்கினார். தொடர் விளம்பரங்கள், செய்தியறிக்கையால் சலித்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். அரங்கம் நிறைந்த ரசிகர்கள் அவருடன் இணைந்து பாடி நல்ல ஆதரவைக் கொடுத்தார்கள். அவர்களும் இலங்கை ரசிகர்களைப் பற்றி நன்றாக நினைத்திருப்பார்கள். (வழமையாகவும் அவ்வாறே தான்)

சக்தியின் இந்த நிகழ்ச்சி பாராட்டக்கூடியது. நிகழ்ச்சிக்கான ஆதரவை வந்திருந்த மக்களைக் கொண்டு பார்க்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறான நிகழ்ச்சிகளை சக்தி உட்பட மற்றவர்களும் வழங்க வேண்டும். சிறு ஒழுங்கீனங்களை தவிர்த்துக் கொள்ளுதல் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டும். மற்றப்படி குறை கூற எதுவுமில்லை.


எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

நாடாளுமன்றத்துக்கு அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் கடந்த மாதம் 26ம் திகதியாகும். அன்றிலிருந்து இன்று வரை (24.03.2010) 147 தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


87 பாரிய சம்பவங்களில் 22 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதே வேளை பொதுச்சொத்து துஷ்பிரயோகம் மற்றும் துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தமது கவனத்தை திருப்பியுள்ளதாக வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பொதுத் தேர்தலில் எத்தனை வன்முறைகள் நடைபெறப் போகின்றனவோ? எண்ணுக்கணக்குக்கு மிஞ்சிவிடும் போல கிடக்குது. ஜனவரி மாதக் கடைசியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னர் எப்போதும் இல்லாதளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் உயர்ந்திருந்தன. தேர்தல் நெருங்கி இறுதியன்று அண்மித்தபோது 800 இற்கு மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.


வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பெப்ரவரி 26ம் திகதியிலிருந்து மார்ச் 8ம் திகதி வரை 75 (65சதவீதம்) பாரிய வன்முறைச் சம்பவங்கள் உள்ளடங்கலாக 115 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 75இல் 25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பானதாகும்.

  • 06 காயப்படுத்தல் சம்பவங்கள்
  • 03 பாரிய காயப்படுத்தல் சம்பவங்கள்
  • 22 தாக்குதல் சம்பவங்கள்
  • 14 கொலை அச்சுறுத்தல்கள்
  • 25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல்
  • 05 தீவைப்புச் சம்பவங்கள்.


  • பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் குருநாகல் மாவட்டத்தில் 6 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
  • தென் மாகாணம்- 05 உட்கட்சி மோதல் சம்பவம்.
  • சப்ரகமுவ மாகாணம்- 12 பாரிய சம்பவங்களுள் 05 துப்பாக்கி பிரயோகம்.
  • கிழக்கு மாகாணம்- 03 சம்பவங்கள்.
  • வடமத்திய மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.
  • மேல் மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.
  • வட மேல் மாகாணம்- 01 சம்பவம்.
  • மத்திய மாகாணம்- 01 சம்பவம்.

தேர்தல் நெருங்கும் வேளையில் அவதானிக்கக்கூடிய இன்னுமொரு விடயம் உட்கட்சி மோதல்களுக்கு வழிவகுக்கும் விருப்பு வாக்கிற்கான போட்டியாகும். ஐ.ம.சு முன்னணிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள 91 முறைப்பாடுகளுள் 23 முறைப்பாடுகள் அக்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலில் தமது பக்கம் தாம் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்றுவிட வேண்டும். தாம் ஆசனத்தைப் பெறவேண்டும் என்ற அரசியல் வெறியும் அதிகார மோகமுமே தேர்தல் கால வன்முறைகளுக்கு வித்தாகவும் உரமாகவும் அமைகின்றது.

வாக்குரிமை என்பது ஒவ்வொரு வாக்காளனும் தனது தெரிவுக்கும் விருப்பத்துக்கும் ஏற்றாற் போல அதனைப் பயன்படுத்தல் என்ற சுதந்திரச் செய்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. அந்தக் கோட்பாட்டை தகர்த்து எறியும் விதத்தில் அரசியல்வாதிகள் தமது அடாவடித்தனத்தைக் கட்டவிழ்த்து தாமே வெற்றிபெற வேண்டும் என்று செயற்படுவது இந்த நாட்டில் கடந்த சில வருடங்களாகச் சாதாரணமாகி விட்டது.

தேர்தல் என்பது வன்செயல்களோடு சேர்ந்தது என்ற நிலை இங்கு வழமையாகிவிட்டது.

அனேகமாக தேர்தல் கால மோதல்களும் வன்முறைகளும் போட்டியிடும் எதிரணி கட்சிகளுக்கு இடையே நடைபெறுவது தான் வழக்கமாக இதுவரை இருந்து வந்தது. இம்முறை ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்வது தான் கவலைக்குரிய விடயமாகும்.

மக்களாட்சி என்ற ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிந்து துவம்சம் செய்துவிடவல்ல தேர்தல் வன்செயல்களை தடுப்பதும் அவற்றில் ஈடுபடுவோரை பாகுபாடின்றி தண்டிப்பதும் பக்கசார்பின்றி நடவடிக்கைகளை எடுப்பதும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பெரும் பொறுப்பு பொலீஸாரையும் நீதிமன்றங்களையும் சார்ந்தவை.

நஞ்சு மரம் முளையிலேயே கிள்ளி எறியத்தவறினால் மக்கள் ஆட்சி மல்லாக்காப் படுக்க நேரிடும். வன்முறைகள் தெளிவுபடுத்துவது ஜனநாயகம் கேலிக்குரிய பொருளாக மாறிவிட்டது என்பதைத்தான்.
நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் இவற்றை வருங்காலத்திலாவது தடுக்க அக்கறை காட்டுவார்களா?

இல்லை இனி இது தேர்தல் கால கலாச்சாரமாகுமா???

எங்களில் எத்தனை பேர் தங்களின் வாழ்க்கை ‘நரகமாகிவிட்டது’, ‘சொர்க்கமாகிவிட்டது’ என்றெல்லாம் அலட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மறந்து தற்செயலாக ஏன் என்று கேட்டால் போதும் பக்கத்து வீட்டுக்காரன்ல இருந்து பின்னால திரிஞ்சு காதலித்த காதலி வரை காரணம் சொல்ல கூப்பிடுவினம்.

இவற்றை எல்லாம் தீர்மானிக்கப்போவது நான்கெழுத்து மந்திரம் தான். அது வேறொன்றும் இல்லை……

புரிதல் ….

ஒரு சமூக கட்டமைப்பில் வாழத் தொடங்கிய பிறகு புரிதல் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்பது சாத்தியமற்றது.

ஓவ்வொருவருடைய வாழ்க்கையிலயும் பல விதமான உறவுகள் இருக்கின்றது. அந்த உறவுகளுக்கு நிகராக சிக்கல்களும் இருக்கத்தான் செய்யும். உங்கள் செயற்பாடுகள் அதிகமாகும் போது உறவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். சிக்கல்களும் அதிகரிக்கத்தான் செய்யும்.

அந்த சிக்கல்களுக்குப் பயந்து நாம் உறவகளை வெட்டிவிட முடியாது. உறவுகள் அதிகரிக்க அதிகரிக்க புரிதலை அதிகரித்துக் கொண்டே போவதில்; தான் பிரச்சினையே இருக்கிறது.

நீங்கள் ரூமில் இருப்பவராக இருந்தால், கூட இருப்பவரைப் புரிந்து கொண்டால் போதும். அதே நேரம் பலரை நிர்வகிக்கும் நிலையில் இருந்தால் நீங்கள் அத்தனை பேரையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். உங்;களை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பது தவறானது.

அப்போதுதான் சூழ்நிலைக்கேற்ற மாதிரி அவர்களை இயக்க முடியும். அனைவரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அது பகல் கனவு தான். அதற்காக எல்லோரையும் புரிந்து கொள்ள முடியாது.

உ-ம் நல்ல நண்பர்கள் போல பழகிக் கொண்டு பிறருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது.


இயலுமானவரை எவ்வளவு முயற்சிக்கிறீர்களோ அவ்வளவும் போதும். மனிதனால் குறிப்பிட்டளவு தான் ஊகிக்க முடியும் குறிப்பிட்ட எல்லைவரை தான் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும். புரிந்து கொள்ளும் போது தான் உறவுகள் நெருக்கமாகவும் வாய்ப்புள்ளது. அடுத்தவர் உங்களை புரிந்து கொள்ளவே மறுப்பதாக நினைக்கக் கூடாது. பிறர் உங்களை நன்றாக புரிந்து கொள்வதற்கான சூழைலை உருவாக்க வேண்டும். (விதண்டாவாதம் செய்பவர்கள் இந்த விதிமுறைக்குள் உள்ளடங்கமாட்டார்கள்).

துரதிஷ்டவசமாக மிக நெருக்கமான இருவர் மத்தியில் ஏற்படும் மோதலானது எதிரிகளுக்கிடையில் ஏற்படும் மோதல்களைவிட மோசமாகவே இருக்கும். இதற்குக் காரணம் இருவருடைய புரிதலும் அந்த நேரத்தில் (சற்று) வேறுபட்டிருக்கலாம். அவர்கள் சில வேளை எல்லைக் கோட்டினைக்கடந்தால் வெறிபிடித்தவர்கள் போல மாறிவிடுவார்கள்.


அடுத்தவரின் புரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய குறைபாடுகளையும் திறமைகளையும் இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறீர்கள்.

ஓவ்வொருவரிடம் ஒவ்வொரு குணாம்சங்கள் இருக்கும். இவை அனைத்தையும் உங்கள் புரிதலுக்குள் கொண்டு வந்துவிட்டால் உங்கள் விருப்பம் போல் உறவுகளை அமைத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய வாழ்வில் ஒவ்வொருவருடைய உறவும் எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்பவர் நீங்காளாக இருக்க வேண்டுமானால் உங்கள் புரிதலுக்குள் அனைத்தையும் அனைவரையும் கொண்டு வாருங்கள். மனிதர்களின் பைத்தியகாரத்தனத்தையும் தாண்டி அவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.

உங்களைச்சுற்றி அருமையான மனிதர்கள் இருக்கிறார்கள். அவ்வப் போது சில சமயம் சில நிமிடங்களுக்கு அவர்கள் பைத்தியகாரத்தனமாக நடந்து கொள்வார்கள்.

இதனைப்புரிந்து கொள்ளாவிட்டால் நீங்கள் அவர்களை இழக்கநேரிடும். புரிந்து கொண்டால் அவர்களைக் கையாளும் விதம் உங்களுக்குத் தெரிந்து விடும். வாழ்க்கை ஒரு போதும் நேரான கோடு அல்ல.


புரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் இழந்தால் உங்கள் செயல் திறனையும் இழக்க நேரிடும். சுற்றியுள்ளவர்களை இயலுமான வரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். புரிதல் என்பது சாலச்சிறந்த மருந்து.

(மேற்கூறியது இவர்களுக்கு பொருத்தமாகாது - புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்களுக்கு, எடுத்தெறிந்து நடப்பவர்களுக்கு, நண்பனாகப் பழகிக்கொண்டு தீயவர்களுடன் சேர்ந்து துரோகமிழைக்க நினைப்பவர்களுக்கு, தாங்கள் சொன்னதே சரியென்று விடாப்பிடியாக இருப்பவர்களிடம்)

அகசியம் வரோ என்னை கிரிக்கட் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கிறார். அழைச்சவர் அப்பிடியே போகவேண்டியது தானே! அதென்ன எனக்கு கிரிக்கட்ல ‘’ கூட தெரியாதெண்டு இமேஜை டமேஜ் ஆக்கிட்டு போறார்.

நடந்த ஒரு சம்பவம் ஒன்றைச் சொல்லுறன் கேளுங்க. அதுக்குப் பிறகு எனக்கு கிரிக்கட் தெரியுமா தெரியாதா எண்டு நீங்க சொல்லுங்க…

(கடந்த வருடக்கதை)


நம்ம கொலிஜ்ல 2 ரி.வி வைச்சிருக்கிறாங்க. முக்கியமா அது நியூஸ் பார்க்கத்தான். ஆனால் எங்களுக்கு ரி.வி பார்க்க டைம் கிடைக்கிறதில்லை. கிடைச்ச நேரத்திலையும் ஆளாளுக்கு எதையாவது போட்டுப் பார்க்குங்கள். ஒருத்தன் அந்த சனல்ல விடு, இன்னொருத்தன் இந்த சனல்ல விடு எண்டு… ரிமேட் தேயாத குறையா சண்டை பிடிப்பம். ஒருத்தனும் ஒழுங்கா ஒண்டையும் பார்க்கேலாது. அதால ஒருத்தரும் அந்தப் பக்கம் வரமாட்டினம்.

ஒருநாள் நான் பாட்டுப்பார்த்துக் கொண்டிருந்தன், பெடியள் வந்து மட்ச் நடக்குது விடு எண்டாங்கள். அதுகளோடை சண்டைபிடிக்கேலாது எண்டிற்று மாத்திட்டு, நான் அதிலையே உட்கார்ந்திருந்தன். எழும்பிப் போனவுடன மாத்துவம் எண்டு. நான் ரி.விக்கு கிட்ட இருந்த படியால் ஒருத்தன் ‘ஸ்கோர்’ என்ன எண்டு கேட்டான். எனக்கு என்ன மட்ச் நடக்குது எண்டே தெரியல (தெரிஞ்சா மட்டும்..?) “729 ரன்னடா..” எண்டன். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்கள். எனக்கு ஒன்னுமே புரியல. என்ன எண்டு விசாரித்தேன். “அடி! கழுதை, நடக்கிறது வன்டே மட்ச்சடி… எவ்வளவு முக்கி முக்கி அடிச்சாலும் 500 ஐ தாண்டுறதே கஷ்டம். இதில நீ 729 எண்டு சொல்லுறாய்” என்றார்கள். பிறகென்ன அசடு வழிஞ்சது தான்.




இனி நான் கிரிக்கட் தொடர்பதிவு எழுதலாம் தானே!

விதி முறைகள்:

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். (சத்தியமா உண்மையைத் தாங்க சொல்லுவன். )

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

எல்லாக் கேள்விக்கும் விடை சொல்லேலாது.

(1) பிடித்த போட்டிவகை : ஒண்ணுமே பார்க்கிறதில்லை. இதில எதைச் சொல்ல?

(2) பிடிக்காத போட்டிவகை : ரிபீட்டு….

(3) பிடித்த அணி : பிறந்ததுக்காக இலங்கை.

(4) பிடிக்காத அணி : ஏன் சும்மா கடமைக்கு சொல்லுவான்…

(5) பிடித்த துடுப்பாட்ட வீரர் : குமார் சங்கக்கார (றோட்டுவழிய எயார்டெல் விளம்பரங்களில எல்லாம் சிரிச்சுக் கொண்டு நிக்கிறார். அதுக்காக எண்டு சொல்லுவம் எண்டு தான் இருந்தன். ஆனாலும் அம்மம்மா அடிக்கடி வீவா குடிக்கிறவா.. அதால போத்திலில பார்த்து பழக்கம்)

(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்; : ஏன் அந்தப் பாவத்தை, எல்லாரும் திறம்.

(7) பிடித்த வேகப்பந்து வீச்சாளர் : லசித் மாலிங்க (எங்க வீட்டை எல்லாருமே மொபிடல் சிம் தான். அதால மொபிட்டலை எங்க கண்டாலும் வடிவாப் பார்ப்பம். எங்க பார்த்தாலும் இவர் தானே நிக்கிறார்)

(8) பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் : ஆசீப் (கிரிக்கட் பார்க்காட்டியும் அடிக்கடி பேப்பர் பார்ப்பன். அதில இவரைப்பற்றி அடிக்கடி வரும்)

(9) பிடித்த ஸ்பின்னர் : முரளி (என்னப்பா முரளியை தெரியாது எண்டு சொல்லலாமே)

(10) பிடிக்காத ஸ்பின்னர் : ஹப்பஜன் சிங் (தோற்றமே முகம் சுழிக்குது.)

(11) பிடித்த சகலதுறை வீரர் : எம்.பி சனத் (கிரிக்கட், அரசியல் எண்டு கலக்குறார்)

(12) கனவான் வீரர்கள் : சச்சின் (சின்னக்குழந்தையும் சொல்லும்)

பதிவை தொடர நான் அழைப்பது…

1. பங்குச்சந்தை அச்சு – ஒரே டைப்பிலயே பதிவொழுதுறார். சும்மா சேஞ்சுக்கு எழுதட்டும்.

2. சிந்தனைச்சிறகினிலே கீர்த்தி – முந்தி இருந்த வேகம் இப்ப பதிவுகளில இல்லை.

(என்னை மாதிரி பகிடி விடாம சீரியஸா எழுதுங்கோ)

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் என்னைச்சேரும்… என்னங்க உல்டா பாட்டெண்டு நினைக்கிறீங்களா? உண்மையைச் சொன்னன்… காதலர் தினத்தை முன்னிட்டு ‘த ஐலண்ட்’ ஆங்கில நாளிதழ் நடத்திய போட்டியொன்றில் அதிர்ஷ்டசாலி வாசகர்களில் ஒருவராகத் தெரிவானேன். அவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று ‘ஹோல்பேஸ் ஹொட்டலில்’ வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ‘டன்கொட்டுவ’ நிறுவனத்தினர் வழங்கிய ரூபாய் _ _, 000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் எனக்குக் கிடைத்தது. (காணொளிகளில் கடைசி)




சரி! விடயம் முழுமையாக…

தொழில் நிமித்தம் எனது வேலைகளில் ஒன்று, மும்மொழி பத்திரிகை செய்திகளையும் வாசித்து செய்தி சேகரித்தல். பொதுவாகவே எனக்கொரு கெட்ட பழக்கம் இருக்கின்றது. இவ்வாறு பத்திரிகைகளில் வெளிவரும் பரிசுப்போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கெடுப்பது. பரிசு கிடைப்பது, கிடைக்காதது பற்றியெல்லாம் கவலையில்லை. இவ்வாறிருக்கையில் ‘த ஐலண்ட்’ பத்திரிகையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு போட்டி வைத்தார்கள். அதற்கும் அனுப்பினேன். என்னுடன் இணைத்து என் நண்பர்கள் மூவருக்கும் அனுப்பினேன். என் அதிர்ஷ்டமோ, அவர்கள் துரதிஷ்டமோ தெரியவில்லை. பரிசுத்தொகை எனக்கே விழுந்தது. (என் நல்ல மனசுக்காக்கும்…)

என்னால் நம்பவே முடியவில்லை. அந்த வேகத்தில் தான் ஒரு பதிவெழுதியிருந்தேன் எனது நண்பியைச் சாட்டாக வைத்து ‘’. ஐந்நூறு ரூபா கூட விழாத எனக்கு இத்தனையாயிரமா?.... பரிசளிப்பு வைபவம் 12.03.2010 அன்று ஹோல்பேஸ் ஹொட்டலில்… பரிசா, காசா, வவுச்சரா… ???? குழம்பியவாறே… எதுவானாலும் பறவாயில்லை.

றோமியொ, ஜூலியட் படங்களுடன், சிவப்பு – வெள்ளை பலூன் அலங்காரத்துடன் ஹோல்பேஸ் ஹொட்டல் ‘ஜூப்லி’ ஹோல் பளபளத்தது. வர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபம். சுமார் 200 பேரளவில் அமர்ந்திருக்கக் கூடிய மேசை அணிவகுப்புக்கள். ஒரு பக்கத்தில் மேற்கத்தேய இசைக்குழு… மாலை ஆறுமணிக்கு ஆரம்பமாகும் எனக்கூறிய நிகழ்வு 7 மணியளவில் தான் ஆரம்பமாகியது.

அதிஷ்டசாலி நேயர்கள் 20 பேரில் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட நான் (பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் போட்டிக்கான தபாலட்டையை அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டார்கள்) எனக்கு கிடைத்த கடிதத்தை கொடுத்து வாசலில் பதிந்து விட்டு உட்கார்ந்தேன். மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. இந்த போட்டி நிகழ்ச்சிக்கு (பரிசுகளிற்கான) பல விளம்பரதாரர்கள் அனுசரணை வழங்கியிருந்தார்கள். குறிப்பாக ‘யூனியன் அசுரன்ஸ்’, ‘ஹட்ச்’, ‘நோலிமிட்’, ‘ஹமீடியா’, ‘டன்கொட்டுவ’, ‘பிறீமா நூடில்ஸ்’ என்பவற்றைக் கூறலாம்.

அதிஸ்டசாலியாக 20 பேரைத் தெரிவு செய்தார்கள். அதிலும் ஒரு போட்டி வைத்தார்கள். குழுக்கள் அடிப்படையில் முதல் இரண்டு இடத்தைப் பொறுபவர்களுக்கும் ‘மிகின் லங்கா’ வழங்கும் சிங்கப்பூருக்கான விமானப் பயணச்சீட்டு. மண்டபத்தில் நிகழ்ந்துவிட்ட இந்த சோதனையால் பதட்டத்துடனேயே நிகழ்ச்சி முடியும் வரை இருக்க வேண்டியதாயிற்று. தலைகீழாக 20ஆவது அதிஸ்டசாலியிலிருந்து குழுக்கல் முறையில் ஆரம்பித்தார்கள். 20 – 16 வரை பல ஆயிரம் மதிப்புள்ள பரிசுப்பொதிகளைக் கொடுத்தார்கள். அதில் நான் அடங்கவில்லை. சின்ன இடைவேளை விட்டு நடனங்களை அரங்கேற்றினார்கள். பின் மீண்டும் 15 – 11 வரையானவர்களை அழைத்தார்கள். அதிலும் நான் அடங்கவில்லை. அவர்களுக்கும் பரிசுப்பொதிகளே! எனக்கு படபடக்க தொடங்கிவிட்டது.

மீண்டும் ஒரு சிறிய இடைவேளை, புகழ்பெற்ற பாடகி (எனக்கு ஆளைத் தெரியவில்லை) பாடலிசைத்தார். பின்னர் உணவு இடைவேளை விட்டார்கள். ஐஸ் கோப்பியுடன் சிற்றூண்டிகள். கொத்துறொட்டியைக் கூட ‘ஒன் த ஸ்பொட்’ இல் சுடச்சுட போட்டார்கள். எனக்கு மனம் ஒன்றிலுமே லயிக்கவில்லை. மீண்டும் நிகழ்வு ஆரம்பமானது. நடனங்கள் மேடையை அலங்கரித்தன. 10 – 6 வரையான அதிஷ்டசாலிகளை தெரிவு செய்தார்கள். பரிசுப்பொதிகளைக் குறைத்து கிப்ட் வவுச்சர்கள் கொடுத்தார்கள். அதிலும் நான் அடங்கவில்லை.

‘அதிர்ஷ்டசாலியிலும் அதிஷ்டசாலி நான், எனக்கு மிகின் லங்கா எயார் டிக்கட் கிடைக்கப்போகுது’ எண்டு நினைச்சு நான் சந்தோசப்படுறதா, ‘ஐயோ! எனக்கு ஏதாவது கிப்ட்டை தந்து அனுப்புங்களேன்டா, சிங்கப்பூர் எல்லாம் வேண்டாம்’ என அழுகிறதா எண்டு தெரியாத நினைப்பு. இதுக்கிடையில வீட்டுக்கும், நண்பர்களுக்கும் அடிக்கடி தொலைபேசி அழைப்பெடுத்து ‘எனக்கு இன்னும் கிடைக்கல… கிடைக்கல’ எண்டு ரன்னிங் கொமன்றி வேற! என்ன செய்ய பதட்டம் தான். இடையில் ‘மிஸ்டர் பீன்’ போல உருவமுடைய ஒருவரது நடனம் இடம்பெற்றது. சகோதர மொழிக்காரர்களுக்கு தெரிந்திருக்கும். சத்தியமா எனக்குத் தெரியாதுங்க. இன்னுமொரு காமெடி பாடகரின் பாடல்… 5அவது ஆள் அழக்கப்பட்டார். அது நானில்லை. இதயம் 100 மேல் துடித்திருக்கும்… 4ஆவது ஆளுடைய சீட்டை எடுக்கிறார்கள். அறிவிப்பாளர் வாசிக்கின்றார்.. எஸ்.றொஷானி…. பிறகென்ன இரண்டு பரிசுப்பொதிகள் மட்டுமே (ஆரம்பத்தில் 10 பரிசுப்பொதிகள்) ஆனால் பெரிய ஒரு தொகையில் ‘வவுச்சர்’…. ‘டன்கொட்டுவ’ மாபிள் வீட்டு உபகரணங்கள் காட்சியறையில் போய் நான் வாங்குவதற்காக… தொடர்ந்து முதலிரண்டு அதிஸ்டசாலிகளைத் தெரிவுசெய்து விமானப் பயணச்சீட்டை வழங்கினார்கள். விழா இனிதே நிறைவு பெற்றது.. நேரமோ இரவு 10.00 மணி…

கடும்பானப் பிரியர்களுக்காக தாராளமாக ‘ஹாட் ட்ரிங்ஸ்’ வைக்கப்பட்டிருந்தது. ஒரு சிலரைத்தவிர யாருமே அதைத்திரும்பிப் பார்க்கவில்லை. காரணம் நேரமோ நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. நேரம் கடந்ததால் அம்மா அண்ணாவை அனுப்பியிருந்தார். பரிசுகளுடன், சந்தோசமாக வீடு சென்றேன்.

அட! பொறாமைப்படாதீங்க… அதிஸ்டம் யார் வீட்டு கதவை தட்டுமெண்டு தெரியுமா? நாளை உங்களுக்கும் கிடைக்கும்.

பி.கு : ஐலண்ட் பத்திரிகையில் வெளியாகும் ‘மை நேம் இஸ் கான்’ கேள்விக்காக பதிலளித்து 6 இலவச டிக்கட்டுக்களை ‘லிபேர்ட்டி’ திரையரங்கில் பெற்றுவிட்டேன். ஹி ஹி….


Followers

About this blog

Labels