பதிவர்களை, குறிப்பாக இலங்கைப் பதிவர்களை ஊக்குவித்து வரும் யாழ்தேவி திரட்டியில் கடந்த வாரத்திற்கு முதல் வார நட்சத்திரமாக என்னை அறிவித்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றை தினக்குரல் ஞாயிறு பத்திரிகையில் ‘இணையத்தில் எம்மவர்கள்’ என்ற பகுதியிலும் என்னை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.


அந்தவகையில் யாழ்தேவி திரட்டியினருக்கு என் நன்றிகளை மீண்டும் ஒரு தடவை தெரிவித்துக் கொள்கின்றேன். நட்சத்திரம் என்ற அந்தஸ்து பதிவர்களை பொறுத்தவரையில் மணி மகுடம் தான். வலைப்பூவில் வாழ்த்தியவர்களை விட நேற்று பத்திரிகை பார்த்து வாழ்த்தியவர்கள் பலர். எல்லோருக்கும் நன்றிகள்.

நட்சத்திர வாரத்தில் தொடர்ச்சியாக பதிவு எழுதவேண்டும் என்ற, சிறு கட்டளையும் யாழ்தேவியால் வழங்கப்பட்டது. என்னால் நான்கு பதிவுகள் மட்டுமே எழுத முடிந்தது. அதுவும் இறுதி நாளில் இரண்டு பதிவுகள். எழுதிய நான்கு பதிவுகளும் வழமையான என் கட்டுரைப் பாணியிலான பதிவுகளாகவும் இல்லை. காரணம் நட்சத்திர வாரத்தில் எழுதியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் எழுதியது. அவ்வாறன பதிவுகளில் எனக்கு விருப்பமும் இல்லை. இனி தொடரவும் மாட்டேன். அதிக வேலைப்பளு நட்சத்திர வாரத்தில் வந்தது என் துரதிஷ்டமே!

காலை வாரிவிட்ட ‘ஜி.எஸ்.பி’ பிளஸ் கட்டுரை நேற்றைய தினக்குரலில் வந்தால் நல்லதென எதிர்பார்த்தேன். என் எண்ணமும் காலை வாரிவிட்டது. பரவாயில்லை. ஆனால் ‘நல்ல மனிதர்களை இழக்க முடியுமா?’ கட்டுரை 01.07.2010 இருக்கிறம் இதழில் வெளிவந்திருக்கின்றது. யாழ்தேவி நண்பர்கள் அதனைக் கவனமெடுத்திருக்கலாம். (பதிவுகளை தெரிவு செய்வது அவர்களைப் பொறுத்தது. எனவே இது பற்றி நான் எதுவும் குறைப்படவில்லை. என் பதிவுக்கு இரு அங்கீகாரங்கள்)

யாருமே எதிர்பார்க்காத விதமாக முரளிதரன் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக இன்று காலியில் ஆரம்பமாகிய இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டி இருக்கும்.

சனத் ஜெயசூர்யாவுக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் மரியாதை தனக்கும் எதிர்காலத்தில் கிடைத்து விடாமல் நாகரீகமாக ஓய்வு பெறுகின்றார். கிரிக்கட் பற்றியோ, முரளி பற்றியோ சொல்வதற்கு எனக்குத் தகுதியில்லை. ஆனாலும் ஒரு சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முரளிதரனின் உலக சாதனையை (ஒரு இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்கள்) கௌரவிக்கும் முகமாக 10 வருடத்திற்கு முன்னர், கொழும்பில் தமிழ்த்துறை சார்ந்த ஒரு சங்கத்தினால் பாராட்டு விழா வைத்தார்களாம். அதில் கலந்து கொண்டு முரளி ஆங்கிலத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதாக நான் அன்று கேள்விப்பட்டேன். இது பற்றி மேலதிகமாகத் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முரளி வாழ்ந்து, வளர்ந்து இன்று நிற்கும் நிலை வரையான சூழ்நிலையில், அவர் தூய தமிழ் பேசுவதென்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம் தான். ஆனாலும் அண்மையில் இந்தியத் தொலைக்காட்சியொன்றில், யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல தமிழ் கதைத்தார். இலங்கையில் தமிழ் பேசுவதைத் தவிர்க்கிறாரா?

இலங்கையின் பிரபல ஊடக நிறுவனமொன்றின் ஆங்கில வானொலிக்கு, குமார் சங்கக்காராவும், சிங்கள வானொலிக்கு சனத் ஜெயசூரியாவும் விசேட தூதுவர்களாக இருந்தார்கள். (இருக்கிறார்களா தெரியவில்லை) அந்த வலையமைப்பின் தமிழ் வானொலியின் தூதுவராக இருக்குமாறு முரளியை அணுகிய போது, அவர் மறுத்திருக்கின்றார். (கேள்விப் பட்டேன்) அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.

முரளி, வோர்னின் சாதனையை முறியடித்த சமயத்தில் யாழ்ப்பாணம் ‘உதயன்’ பத்திரிகை அலுவலகத்திற்கு முன்னால் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது. பின்னர் ஏதோவொரு காரணத்திற்காக தீயிட்டும் எரிக்கப்பட்டது. அது ஏன்?

பலரும் (பொதுவாகத் தமிழர்கள்), இரண்டு கண்ணோட்டத்தில் முரளியைப் பார்க்கிறார்கள். அது சரியா?

அங்கங்கே தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு விடை பகிருங்கள்…

இதயம், காதலுக்கு மரியாதை, லவ் டுடே என பார்த்த காதல் படங்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு காதல் பயணம்.
படங்களையும், ட்ரெயிலரையும் பார்த்த போது, ஏதோ இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய கதையாக்கும் என நினைத்தேன். போராட்டக் காரர்கள் என்ற பெயரில், படத்துக்கு இடையூறு இல்லாமல் சில கோஸங்கள் மட்டுமே. மற்றப்படி நாயகன் - நாயகியைச் சுற்றித் தான் படம் செல்கிறது.

ஆரம்பத்தில் வரும் வெள்ளைக்கார வயதான பெண்மணி, அவருடன் பேத்தி உறவு பெண், வட்டத் தொப்பியுடன் திரியும் நாயகி, வெள்ளைக்காரர்களின் நடனம், ஆற்றில் படகிலிருந்து அடித்துத் தள்ளிவிடல் போன்ற காட்சிகளில் எம்மையறியாமல் டைட்டானிக் பற்றி சிந்திக்க வைப்பதை தவிர்க்க முடியாது.

படத்தில் நிச்சயம் பாராட்ட வேண்டியவர் கலை இயக்குனர் செல்வக்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஸா. சலவைத் தொழிலாளர்களின் இருப்பிடம், கவர்னர் மாளிகை, ரெயில்வே ஸ்ரேசன், மணிக்கூட்டுக் கோபுரம், பயன்படுத்தும் வாகனங்கள் என எல்லாமே புதுசு. எங்களை 1947 இற்கே கூட்டிச் செல்கிறது. ஆடையலங்காரங்களும் பாராட்டப் படவேண்டியவை.

இயக்குனர் விஜய். இன்றைய காலத்தில் வரலாற்று சம்பவங்களை ஏற்றுக் கொள்வார்களா? படம் வியாபார ரீதியில் வெற்றி பெறுமா என பெரிதாக யோசிக்காமல், வித்தியாசமன கதைக்களத்துடன் எடுத்தது மட்டுமல்லாமல், ரசிகர்களை கட்டிப் போடும் உத்திகளை படங்களில் நிறையவே தெளித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, ஆக்ஸன் என அளந்தெடுத்து படைப்பை உருவாக்கியிருக்கிறார்.

ஆர்யா, ‘அறிந்தும் அறியாமலும்' ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமான கதைக்களங்களுக்கு பழக்கப்பட்டு விட்டார். அதுவும் நான் கடவுளுக்கு பிறகு சொல்லவே தேவையில்லை. படத்திற்காக பிரத்தியேக உழைப்பு நன்றாகவே தெரிகின்றது. குஸ்தியில் ஒரு பயில்வானாக, காதலிக்காக ஆங்கிலம் கற்பது ஆகட்டும், வெள்ளைக்காரர் வெளியேறுகிறார்கள் என குதூகலிக்காமல் கவலைப்படுவது போன்ற பல காட்சிகளில் மனதில் நிற்கிறார்.

எமி ஜாக்ஸான், தெலுங்கு, ஹிந்தியென பல இறக்குமதிகளைப் பார்த்ததால், மாறு பட்ட சிந்தையுடன் அவரை உற்று நோக்கவில்லை. இவ்வாறான ஒருவரை விஜய் எங்கிருந்து தான் தேடி எடுத்தாரோ? நடிப்பில் நம்மவர்களையெல்லாம் விஞ்சி விடுகின்றார்.

ஹனீபா, அட! நல்லதொரு நடிகரை இழந்து விட்டோமே, என யோசிக்க வைக்கிறார். வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் இயல்பான நகைச்சுவையை தெளித்துச் செல்கிறார். மொழிபெயர்ப்பாளராக 'ஆர்யாவை பிடித்திருக்கு' என நாயகி சொல்வதை, 'உன் கழுதையையும் பிடித்திருக்காம்' என சொல்வது நகைச்சுவையின் உச்சம்.

இவர்களைத் தவிர, வெள்ளைக்கார தளபதி, நாஸர், எம்.எஸ்.பாஸ்கர், வாத்தியார், நித்திரை கொள்பவன், ஆர்யாவின் நண்பர்கள், தற்கால கதையில் வரும் லொல்லு சபா ஜீவா, வழிகாட்டுபவன், டாக்ஸி ட்ரைவர், வயதான அம்மணி என அனைவரும் காட்சிகளில் கவர்கிறார்கள்.

பாராட்டப்படவேண்டிய இன்னொருவர், இசையமைப்பாளர் ஜீ.பி.பிரகாஸ். வெயில் முதல் தொடர்ச்சியாக சவாலான படங்களுக்கு இசையமைக்கின்றார். 1947ஆம் கால காட்சியமைப்புக்களில் பின்னணி இசையும், பாடல்களும் இனிமை.

மொத்தத்தில் 'காதல்' என்ற மூன்றெழுத்து வார்த்தையை சரியான விதத்தில் படைப்பாக்கி சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

பி.கு : நட்சத்திர வாரத்தில் தொடர்ச்சியாகப் பதிவெழுத முடியாமல் போனதற்கு யாழ்தேவி நண்பர்களிடமும், பதிவுலக வாசகர்களிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.

நான் அண்மைக்காலத்தில் பார்த்து, வாசித்த இரண்டு செய்தி இணையங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். (இது விளம்பரம் அல்ல)

ஒன்று வாரணம், இன்னொன்று வணக்கம். இரண்டினதும் ஆங்கில தொடக்க எழுத்து V (Victory). எனவே இணையங்களும் வெற்றி நடை பேர்டும் போல் தெரிகின்றது.


வாரணம் டொட் கொம்

செய்திகள், விளையாட்டு, சினிமா, நிகழ்வுகள், வீடியோ, படத்தொகுப்பு என வகை பிரிக்கப்பட்டு செய்திகள் வெளியிடப்படுகின்றன. நாம் பிற தளங்களில் வாசித்த செய்திகள் மட்டுமல்லாது, எந்த செய்தித் தளங்களிலும் வெளியாகத செய்திகளையும் முதற் தடவையாக இங்கு அறியக் கூடியதாக உள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு சார்ந்த செய்திகள். மக்களின் புனர்வாழ்வுகள், அபிவிருத்திகள் தொடர்பான செய்திகள் அதிகளவில் இடம்பிடிக்கின்றன.

சினிமா, விளையாட்டு இரண்டிலும் பிற தமிழ்த் தளங்களில் காணப்படும் செய்திகளை விட நிச்சயம் அதிகளவிலான செய்திகள் தினந்தோறும் வெளியாகும். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் வாரணம் சினிமாப் பகுதியை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இந்தத் தளத்திற்கே உரிய விசேட அம்சம் என்னவெனில், அது நிகழ்வுகள். இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்வுகள் உடனுக்குடன் வெளியாகின்றது.


வணக்கம் டொட் கொம்

மேலே வாரணம் இணையத்திற்கு கூறிய அனைத்து விடயங்களும் இதற்கும் பொருந்தும். அதனால் ரிப்பீட் அடிக்க விரும்பவில்லை. மேலதிகமாக இணையக்கோப்பு, சின்னஞ்சிறு விளம்பரங்கள், இசை, திருமண சேவை என்பனவும் உண்டும்

இணையங்கள் இரண்டும், புதிதாக இணைய வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. எனவே குறை, நிறைகளும் இருக்கலாம். நான் வாசித்த இந்தத் தளங்களை விரும்பினால் நீங்களும் ஒரு முறை வாசியுங்கள்.

இலங்கையிலிருந்து செயற்படும் யாழ்தேவி திரட்டியின் இந்தவார நட்சத்திரமாக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதற்காக யாழ்தேவி நண்பர்கள் வட்டத்திற்கு எனது நன்றிகள்.

பதிவெழுத வந்து ஒரு வருடங்கள் கடந்த நிலையில் இன்று எழுதுவது என் 60ஆவது பதிவு. என் நண்பர்களை தவிர பதிவுலக வட்டத்தில் நண்பர்கள் யாரையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. கிடைக்கும் இணைய வசதியிலும், நேரத்திலும் என் பதிவை இடவும், அதை திரட்டிகளில் இணைக்கவுமே நேரம் சரியாகின்றது. பிறரின் ஒரு சில பதிவுகளை மேலோட்டமாக வாசிப்பது. யாருக்கும் பெரிதாக பின்னூட்டமிட்டதில்லை. எனக்கு வரும் பின்னூட்டங்களுக்கும் பதிலளிப்பது குறைவு.

பொதுவாக என் தளத்தைப் பார்ப்பவர்களுக்கு, அது "Geography" சனல் பார்ப்பது போன்ற பிரமையே இருக்கும். இதனால் பின்னூட்டங்கள் அவ்வளவு வருவதில்லை. பதிவுகளின் தரத்தைப் பொறுத்து வாக்குகள் மட்டும் தாராளமாகக் கிடைக்கும். குறித்த பதிவுகளுடன் தொடர்பு பட்ட விடயங்களில் ஆர்வமுள்ளவர்கள் மாத்திரமே தொடர்ந்து படிப்பார்கள்.

இலங்கையிலிருந்து தொடர்ச்சியாகப் பதிவிடும் பெண்பதிவர்களை எண்ணினால், பத்து விரல்களே மிஞ்சி விடும். பெண்கள் வலைப்பதிவுகளில் காட்டும் ஆர்வமும் குறைவு. அதனால் பதிவுலகத்திற்கு அவர்கள் வரவும் விரும்புவதில்லை. வந்தாலும் ஒரு பெண்ணாக அவர்களால் தங்கள் கருத்தை முழுமையாக தெரிவிக்கவும் முடிவதில்லை. பதிவுலக கும்மிகள், மொக்கைகளில் கலந்து கொள்ளவும் முடியாது. நீதி, நியாயம் கேட்டு எங்கள் வாதத்தை முன்வைக்கவும் முடியாது.

ஏதோ எங்கள் பாட்டுக்கு எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்க வேண்டியது தான். எந்த வம்புக்கும் போகாத என் மீதே மறைமுகமான வார்த்தைப் பிரையோகங்களால் தாக்குதல்கள் சில வேளைகளில் இடம்பெற்றதுண்டு. இந்த நிலையில் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குப் போனால் என்னாவது?

என் வலையுலக சில கால அனுபவத்தைக் கொண்டு புதியவர்களுக்கு ஒரு விடயம் கூற ஆசைப் படுகின்றேன். "உங்கள் எழுத்துக்களையும் திறமைகளையும் வேறு வழிகளில் காட்டுங்கள். வலைப்பதிவுப் பக்கம் வந்து விடாதீர்கள். வந்தால் காலப்போக்கில், நேரம் வீணாகும், வீண் சோழிகள் திருப்பப்படும், மனக் கஷ்டம் ஏற்படும், ஏன் இனி வருங்காலங்களில் உயிருக்குக் கூட உலை வைக்கும். ஏனெனில் வலையுலகம் அதால பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அதனைக் காப்பற்றவும் முடியாது.

யாழ்தேவி நட்சத்திர வாரத்தில் இனிவரும் நாட்களில் காத்திரமான படைப்புக்களுடன் இணைந்து கொள்கின்றேன்.

பேருந்து மற்றும் ரெயில் வண்டிகள் தொடர்பான இலங்கையின் முதலாவது கண்காட்சி கடந்த சனியன்று ஆரம்பமானது. தொடர்ந்து இரண்டு நாட்களாக இந்தக் கண்காட்சி முற்பகல் 10 மணி தொடக்கம் இரவு எட்டு மணி வரை நாரஹென்பிற்றி சாலிகா மைதானத்தில் இடம் பெற்றது. அமைச்சர் குமார வெல்கம கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இதனை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்பாடு செய்தது.

பஸ் வண்டி இறக்குமதி நிறுவனங்கள், காப்புறுதி அமைப்புக்கள், உதிரிப்பாக விநியோக நிறுவனங்கள், வாகனங்களில் இருந்து வெளியேறக்கூடிய புகையை சோதிக்கும் அமைப்புக்கள் உள்ளிட்ட ஸ்தாபனங்கள் நடத்தும் 50க்கு மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. கண்காட்சியில் நவீன பஸ் வண்டிகள், பழைய பஸ்வண்டிகள், கோச்சி வண்டிகள், உதிரிப்பாகங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன. இங்கு வாகன உதிரிப்பாகங்களை விலைக்கழிவிலும், தவணைக் கட்டண முறைகளிலும் பெற்றுக்கொள்ள முடிந்தது. சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந்த வண்டிகள் சிறுவர்களின் மனதைக் கவர்ந்ததை காண முடிந்தது. அதிகளவானவர்கள் ஆர்வமாக ஒவ்வொரு பஸ்களின் முன்னாலும் ஏறியும் நின்று படங்களை எடுத்துக் கொண்டனர்.

போக்குவரத்துப் பொலிஸாரின் விசேட கருமபீடமும், கண்காட்சி கூடமும் அமைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் துண்டுப்பிரசுரங்களும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய விடயங்களும் வழங்கப்பட்டன.

வித்தியசமான இந்த கண்காட்சி பலரது பாராட்டையும் பெற்றது.





































படங்கள் காப்புரிமையுடையன

குளிர் யுரம் அடிக்கும் மெய்சிலிர்க்கும் காட்சிகள் இவை, (போட்டியை நேரலையாக பார்ப்பவர்களுக்கு)


ITALY VS FRANCE WORLD CUP FINAL 2006




GERMANY VS BRAZIL WORLD CUP FINAL 2002




FRANCE VS BRAZIL WORLD CUP FINAL 1998




BRAZIL VS ITALY WORLD CUP FINAL 1994




GERMANY VS ARGENTINA WORLD CUP FINAL 1990



SPAIN VS NETHERLAND WORLD CUP FINAL 2010

யாருக்கு?????

Followers

About this blog

Labels