காதலிப்பவர்களில் சிலருக்கு ஒரு கொள்கை இருக்கின்றது 'தங்கள் காதலை காதலர் தினத்தன்று தெரியப்படுத்துவது" எண்டு. இது ஒரு வேண்டாத வேலை ... ஒருவனோ அல்லது ஒருத்தியோ இன்னொருவரை காதலிக்கும் போது அதனை வெளிப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் காதல் நிறைவேறாத சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, இதை தான் சொல்வார்கள் "காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போன கதை" எண்டு.

காதலர் தினத்தின் பின்னரான நாட்களில் தமிழகத்தில் சில வேண்டத்தகாத உயிர் கொலை , தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன, யாழ்பாணத்தியும் ஒரு சம்பவம் நடந்ததாக கேள்விப்பட்டேன். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! தற்கொலை என்பது இயலாதவன் முடிவு. தன் காதல் நிறைவேறவில்லை என்பதற்காக கொலை செய்பவனை என்னவென்று சொல்வது. இனி சம்பவங்களை பார்ப்போம்.

காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஷர்மிலி ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தாரர். இவரை அதே பகுதியை சேர்ந்த ஷாஜன் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஒரு கட்டத்தில் ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த சான்றிதழை ஷர்மிலி கேட்டுள்ளார். இதனால், பயந்து போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், ஷாஜனை உதறிய ஷர்மிலி தாயிடம் தனக்கு வேறு வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார். அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

காதல் தோல்வியால் மனமுடைந்த கல்லூரி விரிவுரையாளர், கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சண்முகவர்த்தினி(26), ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். மாலை நேரத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். மகளது காதலுக்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சண்முகவர்த்தினியை காலையிலும், மாலையிலும் பெற்றோர் பின்தொடர்ந்து வந்து கண்காணித்ததாக கூறப்படுகிறது. சண்முகவர்த்தினி தினசரி பொறியியல் கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு வந்து செல்வார்.நேற்று காலை 9:30 மணிக்கு சண்முகவர்த்தினி கல்லூரிக்கு வந்தார். சிறிது நேரத்தில் திடீரென கல்லூரியின் ஐந்தாவது மாடிக்கு சென்ற சண்முகவர்த்தினி, மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கல்லூரி துணை முதல்வர் ராமமூர்த்தி, கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சண்முகவர்த்தினியை தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு டாக்டர்கள், சண்முகவர்த்தினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.சண்முகவர்த்தினி, ஜெகன் என்பவரை காதலித்து வந்ததாகவும், இதை பெற்றோர் கண்டித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்று சண்முகவர்த்தியிடம் ஜெகன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்தே தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் காதை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார் இளைஞர். அறுந்த காதுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காது அறுக்கப்பட்ட மாணவியின் பெயர் ரேவதி (20). இவர் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக். படித்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரானேஷ் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்தார். கடந்த ஒரு வருடமாக பின்னாலேயே சுற்றியுள்ளார். ஆனால் அவரது காதலை ரேவதி ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார். நேற்று காலை ரேவதி கல்லூரிக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரானேஷ், மாணவி ரேவதியின் வலது காதை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காது அறுந்து ரத்தம் கொட்டியதால் ரேவதி அலறினார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அறுந்து போன காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் இறங்கியுள்ளனர்.

மூன்று சம்பவங்களும் எப்படி இருக்கின்றது, ஒன்று கொலை, மற்றையது தற்கொலை, மூன்றாவது வன்முறை, இந்த மூன்றையும் காதல் எனலாமா?